முதற் கவிதை
அறுசீர் விருத்தம்
பெண்ணுக்குத் தலைச்சம் பிள்ளை
---பேதைக்குப் பேசும் பேச்சு
மண்ணுக்கு முதல்வி ளைச்சல்
---மனதுக்குக் காதல் பாய்ச்சல்
புண்ணுக்கு உடன்ம ருந்து
---பூனைக்குப் பால்வி ருந்து
எண்ணுக்குச் சைபர் ஒன்று
---எல்லாமே முதலாம் கவிதை !
பள்ளியிலே புகழும் ஆசான்
---பளிங்குரைகள் முதலாம் கவிதை
துள்ளுகின்ற பருவம் ஈனும்
---துணிச்சலது முதலாம் கவிதை
கொள்ளைஎழில் கூடும் வயதில்
---கொஞ்சுகின்ற காதல் வந்துக்
கள்ளமுதம் ஊற்றப் பெண்ணின்
---கடைப்பார்வை முதலாம் கவிதை !
கல்யாண மான வர்க்குக்
---கட்டிலின்பம் முதலாம் கவிதை
வில்லாளன் ஆரம் பத்தில்
---வீசுகணை முதலாம் கவிதை
நில்லாத வாறு நித்தம்
---நிலையாக ஓடும் வாழ்க்கை
சொல்கின்ற அனுப வங்கள்
---சொலிக்கின்ற முதலாம் கவிதை
சிலகவிதை விகட மாகும்
---சிலகவிதை மதுர மாகும்
சிலகவிதை இரங்கல் பாவாய்
---சிடுசிடுத்து மனதில் வேகும்
பலகவிதை இருந்த போதும்
---படைக்கின்ற இறைவன் ஈனும்
நலமொன்றே எந்த நாளும்
---நமதுமுதற் கவிதை யாமே !
-விவேக்பாரதி