ஒத்திகை வாழ்க்கை - Mano Red

விரல் மடக்கி
குரல் திருத்தி
தலை கவிழ்த்து - நான்
யாரென்பதை நிருபிக்க,
ஒவ்வொரு முகத்திற்கும்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு முகமூடியைக்
கழற்றி எறிகிறேன்.

இருளில் விழுகிற நிழலின்
வால் பிடித்து ஓடியே
வெளிச்சத்தின் நுனி பற்றுகிறேன்.

யாராவது கேட்கலாம்
கதவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும்
அந்தக் கருப்பு உருவம் யாரென்று?
நானும் தயங்காமல் நடித்து,
யோசிக்காமல் சொல்வேன்
அது யாரோ என்று! - நிஜமாகவே
அது யாரோவாகவே இருந்திருக்கலாம்.

விழிப்புணர்ச்சியில்லாத
விழியின் புணர்ச்சிகளை
அளந்தும் அளக்காமலும்
அடுத்தவர்களின் மனதுள் செலுத்தி
திறவுகோல் தவறிய
திருடனாய் கைகால் உதறுகிறேன்.

ஊருக்கு ஒரு நடிப்பு
உணர்வுக்கு ஒரு நடிப்பு
அழுகைக்குக்கும் அழகுக்கும்
சேர்ந்து ஒரு நடிப்பு என
புதுமுகம் பார்த்த போதெல்லாம்
பவுடர் பூசிய குழந்தையின் சிரிப்பை
ஓரளவுக்கு ஒத்திருக்கிறது -என்
ஒத்திகை வாழ்க்கை.!

எழுதியவர் : மனோ ரெட் (26-Sep-15, 12:49 pm)
பார்வை : 91

மேலே