என் தமிழ் ஆசிரியை

அம்மாவிடமிருந்து...
(எனது அன்பு மாணவன் (மகன்)சிந்தாமதார் இவன் சிந்தா முத்து தழிழ் கடலில் நான் மூழ்கி எடுத்த திருநெல்வேலி முத்து இரண்டு முத்துகளைப் பெற்றெடுத்தாலும் தாயின் மீதும் தமிழின் மீதும் மாறா காதல் கொண்டவன் இன்றும் அவன் படைப்புகளை உளம் மகிழ்ந்து படிககும் போது எனக்கு ஆசான் என்பதில் மனம் மகிழ்ந்து போகிறேன் இந்த கவிதையை தமிழ் உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்)

என்னிடமிருந்து..

இது என் தமிழ் அம்மா ,ஆசிரியை மதிப்புமிகு ராஜேஸ்வரி அவர்களுக்கு என் கவியாஞ்சலி)

அம்மா...
ஈன்றவளுக்கு மட்டுமல்ல
இந்த வார்த்தை ...
உங்களுக்கும் உரியதுதான் ..
தாய் வழி .. மொழி
தாய்மொழி என்றால் .
தமிழ் எனக்கு தாய் மொழிதான்
நீங்கள் தாய் தான்.
.......
தந்தையை ..காட்ட
ஒரு தாய் ..-தமிழ்
அன்னையை காட்ட ஒரு தாய்
எனக்கு மட்டுமே இரண்டு தாய்.
------------------
பெற்ற கடனை ..
அடைக்க ஆயிரம் வழிகள்.
கற்றகடனை...
எப்படி அடைப்பது..
---------------------
....நினைவுகளில் முளைக்கும்
எழுத்துக்கள் ...
எழுத்துக்களில் பூக்கும்
நினைவுகள் ...
என் செந்தமிழ் நந்தவனத்தின் ..
அணியிலக்கணங்கள் ..தங்களின்
அரவணைப்புகள் .
..
ஆற்றுபடுத்திய ..
நாட்கள் கொடுத்த
ஆற்றுப்படுகைகளில் ..உங்கள்
பெயரை வரைந்து செல்கின்றன .
கவியலைகள் .
.........நினைவுகளின்
யாப்புகளில்..
யாக்கை விழிவழியே...
கண்ணீரின்
யாத்திரைகள்...
........
எழுத்துக்களில்
மூக்கு வைக்க..
ரௌத்திரங்களாய்
மூக்கின் மேல்..
கோபம் வைக்க..
கற்றுக் கொடுத்தீர்...
.............
அத்தனை இலக்கணங்களுக்குமேல்
அளபெடுத்து
நின்றது.. தங்களின்
அன்புதான்..
..........
அன்பின் வழியது
உயிர்நிலை..
தங்கள் அன்பின்
வழியதில் எந்தன்
உயர்நிலை.
...........
என்றாவது ஒருநாள் ...
ஏதோஒரு சிகரத்தின்
உச்சியில் நின்றுகொண்டு ...
உங்கள் பெயரை உச்சரிக்கவே ..
பறந்துகொண்டிருக்கின்றன
எண்ணங்களும் எழுத்துக்களும் ...
.........
மீண்டும் ஒரு நாள்
மீட்கக் கிடைக்கும் என்றால்
அந்த பள்ளி நாட்களையே
கேட் க துடிக்கின்றன இதயம் ..
..
அச்சேறா கவிதைகள் போல்
ஆயிரம் உள்ளன நினைவுகளாய் ..
அடிக்கடி வந்து செல்லும்
கண்ணீர் துளிகள் மட்டும் அதற்கு
சாட்சி சொல்கின்றன ..
.......
இமைகளை துடைக்க
கைக்குட்டையையும்
இதயத்தை துடைக்க
காகிதத்தையும் ..
எடுக்க பழகியதுதான்
இதுநாள் வாழ்ந்தது போலும்.
....
கரையாத நினைவுகளால்
கரைந்து கொண்டிருக்கின்றன
காகிதத்தில் விழுந்த கடைசி மைத்துளியும் .
எதை சொல்லி முடிப்பது..
நன்றி என்ற நவில்தலை தாண்டி
நாவோரம் வந்து நிற்கிறது
“அம்மா.....”

இவண்
சிந்தா..

எழுதியவர் : sindha... (28-Sep-15, 8:39 am)
சேர்த்தது : sindha
பார்வை : 314

மேலே