இன்று ராமன் சீதையின் நிலை
இன்று ராமன் சீதையின் நிலை !!!...
கடவுள் படைக்கின்ற உயிர்கள்
அனைத்தும் மனிதர்களாகப் பிறப்பதில்லை...
பிறக்கின்ற மனிதர்கள் அனைவரும்
மண்ணில் மனிதராய் வாழ்வதில்லை...
மனிதத்தின் மகத்துவம் காணத்தானே
கல்விப் போதனைகளும் பாடசாலைகளும்...
சித்தம் தெளியும் இடத்திலே
இன்று சீர்குலைவு நடப்பதேனோ...
ஏனோ இன்று கல்வியின்
கற்பு சூறையாடப் பட்டுவிட்டது...
அன்னியக் கலாச்சாரப் பிடியில்
மனிதம் எங்கோ மறைக்கப்பட்டுவிட்டது...
ஓலைச் சுவடிக்குள் ஒழுக்கத்தைக்
கற்றுத்தந்த கல்விச்சாலையில் - இன்று
பட்டங்கள் பறக்கின்றன - அதில்
அவிழ்க்க முடியாத அளவிற்கு
நன்றாகவே கட்டப்பட்டு விட்டன
பாதுகாக்கப் படவேண்டிய ஒழுக்கங்கள்...
அவதாரப் புருஷர்களே இ(எ)ந்திரனாய்
வேடம் தரித்துவிட்ட இந்தவேளையில்...
சீதைகளோ(பெண்) மதில்மேல் பூனைகளாகி
கூடுவிட்டு கூடுபாயும் எண்ணத்தில்...
கலாச்சாரப் பிரளயமே அரங்கேறிக்
கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்
நிச்சயமாய் இருக்கத்தான் செய்கிறார்கள்
எங்கோ ஓர் மூலையில்
அவதார புருஷர்களும் சீதைகளும்
துரோகத்தின் விரக்தியில் நிர்க்கதியாய்...
ஆம்!!! பிறக்கின்ற மனிதர்கள் பலரும்
மண்ணில் மனிதராய் வாழவேயில்லை...