தற்பொழுதுள்ள அரசாங்கக் கொள்கைகள் கேள்விக்குறியாக இருக்கிறது

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்பொழுதுள்ள அரசாங்கக் கொள்கைகள் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

அத்தியாவசிய பொருட்கள் தகுந்த விலையிலிருந்தால், மக்களின் வாங்கும் சக்தி, நிலையாக இருந்து அவர்களுக்கு சேமிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பெரும்பாலும் பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினர்களின் நலன்களின்மீதே மத்திய மாநில அரசுகளின் கவனங்கள் குவிந்து கிடக்கின்றன.

இதற்கான பின்னணி என்ன...?

இந்தியாவிற்கு ரஷ்யாவிலிருந்து நீண்ட கால வர்த்தக கடன்கள் அடிப்படையில் மூலதன பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் (capital goods and defence equipments) இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் இருந்தது. இந்திய ரூபாயை கொண்டே வர்த்தகம் செய்யலாம் என்பது அதன் சாராம்சம்.

ஆனால் 1990-91 ஆம் வருடங்களில் சோவித் ரஷ்யாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால், சோவியத் ரஷ்யாவிலிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட்ட பிளவுகளினால் ரஷ்யாவிடமிருந்த ரூபாய் கட்டண ஒப்பந்தத்தையும் சேர்த்து பல ரூபாய் கட்டண ஒப்பந்தங்கள் (several rupee payment agreements) ரத்தாகின. அதனால் புதிய ரூபாய் வணிகக் கடன்கள் வரத்து குறைந்தன.

அதேபோல் குவைத் மீதான ஈராக் படையெடுப்பினால், 1990 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் வளைகுடா நாடுகளில் நெருக்கடி ஏற்பட்டது. அதன் பிறகு கச்சா எண்ணெயின் விலை அபரிதமாக அதிகரித்தது. பெரும்பாலான நாடுகளுக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும் இந்த யுத்தத்தினால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏனென்றால் ஈராக் மற்றும் குவைத்திலிருந்தான் இந்தியா பெரியளவில் எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. 1990-91 ஆண்டுகளில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு 60 சதவீதம் அதிகரித்தது.

இதன் அடுத்த ஆண்டு 1989-90 வருடத்தை காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகவே காணப்பட்டது. எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதிச் செலவு தீவிரமாக அதிகரித்ததால், 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி சரிய தொடங்கியதாக 1991-92 ஆம் ஆண்டின் ஒரு பொருளாதார ஆய்வு கூறுகிறது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை, சராசரியாக 499 கோடியிலிருந்த எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவு, 1220 கோடியாக அடுத்த 6 மாதங்களில் உயர்ந்து விட்டது.

நிலையற்ற அரசாங்கங்கள்

அந்த நேரத்தில் நவம்பர் 1989 முதல் 1991 மே வரை இந்தியாவில் அரசியல் ஸ்திரமின்மை காணப்பட்டது . ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தள கூட்டணி ஆட்சி, சந்திரசேகர் தலைமையிலான கூட்டணி ஆட்சி என குறுகிய காலத்தில் இரண்டு கூட்டணி ஆட்சியையும், இரண்டு பிரதமர்களையும் நாடு சந்தித்தது.

மத காரணங்கள், கலவரம், பதவி மோகம் போன்ற காரணங்களால் இந்த ஆட்சிகள் நிலைத்திருக்க முடியவில்லை. சந்திரசேகர் ஆட்சியில் அந்நிய செலவாணி வெறும் மூன்று வாரங்களுக்கு, நம் நாட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான கச்சா எண்ணெய் மற்றும் உணவு இறக்குமதி செய்வதற்கு மட்டுமே இருந்ததினால், ஐ எம் எப்(IMF) வங்கியை அணுகி கடன் கேட்டது. அப்பொழுது நம்மிடமிருக்கும் தங்கத்தை அடகு வைத்து வாங்கிக் கொள்ளுங்கள் என பதில் வந்தது. அதனால் 1991 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்திய அரசாங்கம் 67 டன் தங்கத்தை, இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து வங்கிகளில் அடகு வைத்து 605 மில்லியன் டாலரை உயர்த்தி, அன்றைய பொருளாதார நெருக்கடியை சமாளித்தது.

1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஐ எம் எப் (IMF) வங்கியின் வழிகாட்டுதல்படி பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரால் தனியார்மயத்தை தொடங்கி, பெரிய கார்பரேட் முதலாளிகளுக்கு அதிக சலுகைகளை அளித்து, பொதுமக்களின் மானிய திட்டங்களுக்கு வேட்டு வைத்தது.

விவசாயி நிலைமையை எடுத்துக்கொண்டால் புதிய தாராளமயக் கொள்கைகள் மிகவும் பரிதாபமான விளைவுகளை ஏற்படுத்திகொண்டிருக்கிறது. 1995 ஆம் ஆண்டு முதல் 2013 ஆண்டுவரை 2,96,438 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்றப் பதிவுகள் கழகம் (National Crime Records Bureau) தெரிவிக்கிறது.

விவசாயிகள் தற்கொலை

வேறெந்த நாட்டிலும், விவசாயிகள், இந்த அளவிற்கு பெரும் எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தற்கொலை செய்த பெரும்பாலான விவசாயிகள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிலங்களுக்கு சொந்தகாரர்கள் ஆவார்கள் .

வளர்ந்த நாடுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ச்சியாக உலக வர்த்தகம் அமைப்பு [World Trade Organisation (WTO)] மூலமாக இந்திய மற்றும் மற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்ற காரணத்தினால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் மற்றும் பாஜக அரசாங்கங்கள் , விவசாயிகள் பெற்று வருகின்ற உரம், விதை மற்றும் பல்வேறு மானியங்களை படிப்படியாக குறைத்து வருகின்றன.

இப்படி மானியங்களை குறைத்து மூன்றாம் உலக நாடுகளின் விவசாய உற்பத்தியை சீர்குலைத்தால்தான் வளர்ந்த நாடுகளால் இந்த ஏழ்மையான நாடுகளில் அவர்களுடைய விவசாய பொருட்களை வர்த்தகம் செய்யமுடியும்.

இந்திய அரசாங்கங்கள் விவசாய துறையின் மானியத்தை வெட்டி சுருக்குவதை போன்றே மக்கள் நலம் சார்ந்த பல நல திட்டங்களின் நிதியை சுருக்கி வருகிறது. இந்த புதிய தாராளமய கொள்கைகள் அமலாக்கத்திலிருந்து அனைவருக்கும் சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டிய அரசாங்கம் சுகாதாரத்துறையையும், கல்வித் துறையையும் தன் பொறுப்பிலிருந்து கைகழுவி கொண்டு வருகிறது.

கல்வியும் மருத்துவமும்

சுகாதாரத் துறையில் தன் வசம் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்காததாலும் போதிய கருவிகள் வாங்காததாலும் தனியார் ஆஸ்பத்திரிகள் வளர வழி வகை செய்கிறது . அதனால் ஏழை எளிய கீழ தட்டு நடுத்தர வர்க்க மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

கல்வி துறையிலும் தனியார் நிறுவனங்களை அனுமதிருப்பதால் விளிம்பு நிலை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தோழன்

அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தற்பொழுது 16 மாத காலங்களாக மத்தியில் ஆட்சியில் வீற்றிருக் கும் பாஜக அரசு, மக்கள் நலத்தை புறந்தள்ளி முற்றிலும் கார்பரேட் நலனுக்காவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கார்பரேட்களுக்கு சலுகைகள் அளிப்பது நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு அதிகளவு வேலை வாய்ப்புகள் அளிப்பதற்குதான் என்கிற வாதங்களும் பொய்யாக போய்விட்டன. கடந்த 20 ஆண்டு காலமாக நாட்டில் கடுமையாக வேலையில்லா திண்டாட்டங்கள் நிலவி வருகிறது.

ஒரு அரசாங்கம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் நினைத்தால், மக்களின் மானியங்களை உயர்த்தி, அவர்களின் வரிச்சுமைகளை குறைத்து கார்பரேட் நிறுவனங்களுக்கு தகுந்தளவில் வரிகளை உயர்த்த வேண்டும். மேலும் மற்ற நாடுகளுடான இறக்குமதி செய்ய ரூபாய் கட்டணம் செலுத்தும் ஒப்பந்தங்களும், ஏற்றுமதி செய்ய அந்ததந்த நாடுகளின் நாணயங்களை பெறும் ஒப்பந்தங்களும் போடப்படவேண்டும்.

மக்களுக்கான அரசு இதைத்தான் செய்யவேண்டும்!

எழுதியவர் : விகடனில் 5/10/15 - வி.ஆர்.சீனிவா (8-Oct-15, 9:05 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே