காலன்
மரணம்
யுகம் யுகமாய் உண்ட பின்னும்
உயிர்ப்பசி அடங்கா
காய சண்டிகையே
காலச் சண்டாளியே!
மரண தேவதையே
சரித்திரங்களையும்
சகாப்தங்களையும்
வடிக்கின்ற காலத்தின்
கைகாரியே!
சக்கரவர்த்திகளையும்
சாமான்யர்களையும்
சமமாக அணைக்கின்ற
சமாதிக் காரிகை நீ!
உறவுக் கொடிகளின்
உதிர மலர்களை
பிரிவுக் கரங்களால்
உரித்தெடுத்து
அமைதி தெய்வத்திற்கு
அர்ச்சனை செய்கின்ற
சூன்யத் தாயின்
கைக்குழந்தை நீ!
முடிவின் முதலே
முதலின் முடிவே
குழப்பத்தின் தெளிவே
தெளிவின் குழப்பமே
நிச்சயமான நிதர்சனம் நீ
நிச்சயமில்லா நேரம் நீ
உயிரின்
உச்சம் நீ!- வாழ்வின்
எச்சம் நீ! எதன்
மிச்சம் நீ!