மீண்டும் மீண்டும்

உன்னை சம்மதிக்க வைப்பதற்குள்
பெரும் பாடாகிவிட்டது
யாரையும் நம்பாமலிருப்பதைக் காட்டிலும்
என்னை நம்பலாம் நீ
என் இதயத்திலிருந்து வரும்
வார்த்தைகளை நீ
புறக்கணிக்க முடியாது
உண்டு இல்லை என்று சொல்
இரண்டு எல்லைகளுக்கும்
தாவித் தாவி ஏன்
துயரப்படுகிறாய்
உன் நம்பிக்கையை சீர்குலைக்கும்
வகையில் நான்
எப்போதாவது நடந்திருக்கின்றேனா
மனத்திரையில் ஓடும்
படம் போன்றது தான் இவ்வுலகம்
சத்தியத்தை தேடுகின்றவர்களுக்கு
மரணத்தை பரிசாகத் தரும் கடவுளை
ஏன் கும்பிடுகிறாய்
காதலே கடவுள் என்கிறபோது
கடவுளை ஏன்
வெளியே தேடி அலைகிறாய்
கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும்
விஷத்தைக் கொடுத்து தான்
இந்த உலகத்துக்கு அனுப்புகிறார்கள்
என்ற உண்மை உனக்குத்
தெரியுமா
இருதயத்திலிருந்து வாழ்ந்த இயேசுவை
இந்த உலகம் என்ன செய்தது
தெரியுமா
செய்த தவறுக்காக வருந்துவது
தண்டனையாகாதா
நீ எங்கிருந்தாலும் என்
எண்ணத்தில் வாழ்கிறாயே
அந்த கொடுப்பினை
எனக்குப் போதாதா
உன்னை அடையத் துடிக்கும்
என் மனம் மீண்டும் மீண்டும்
பிறவி எடுக்கும்
நான் ஞானஸ்நானம்
பெற்றுக் கொண்ட பின்
பாவமன்னிப்பு கேட்க
என்னிடம் வா.

எழுதியவர் : ப.மதியழன் (16-Nov-15, 12:21 pm)
சேர்த்தது : ப.மதியழகன்
Tanglish : meendum meendum
பார்வை : 58

மேலே