கிருஸ்துமஸ் கவிதை

மனங்கள் மயங்கும்
மனிதர்கள் கசங்கும்
சந்தை வீதியில்
சூரியன் சுட்டெரிக்கும்
காலை வேளையில்
கையில் விளக்குடன்
மனிதனைத் தேடினான் ஒருவன்….!

மாடடைக்கும் கொட்டிலில்
மார்கழிக் குளிரிரவில்
'மனிதன் இருக்கிறான்
மனம் மட்டும் மாறட்டும்'
எனப் பிறந்தான் ஒருவன்…!

அடித்தால் அடி உதைத்தால் உதை
வெட்டினால் வெட்டு
என்று வன்முறை வளர்த்த தேசத்தில்

ஒரு கன்னத்திற்கு மறுகன்னத்தையும்
மேலாடை கேட்டால் உள்ளாடையையும்
கொடுத்துவிடச் சொன்ன தனிமனிதன்…!

உன் கண்ணிண் உத்திரத்தை நீக்கிவிட்டு
பிறன் கண்ணின் துரும்பைப் பார் என்றவன்

இதுவரை பாவம் செய்யாதவன்
எறியட்டும் முதல் கல் என்று
எவரையும் தீர்ப்பிடாதவன்.

உனக்கென்ன வேண்டுமென கேட்கிறாயோ
அதையே பிறனுக்கும் கொடுக்கச் சொன்னவன்!

தேவாலயங்களைத் துறந்து விட்டு
தேகாலயங்களைத் திறக்கச் சொன்னவன்…!


மதத்தின் மதத்தை மிதித்து
மனிதத்தை மதித்தவன் …..!

அவன் ஒரு ஏழை

அவன் ஒரு தொழிலாளி

அவன் ஒரு சாதாரணன்…

உன் எதிரிலேயே
தெருவில் அலைந்து திரியும்
வழிப்போக்கன்…!

மாளிகையும் மஞ்சள் விளக்குகளும்
மல்லிகை மெத்தையும் மஞ்சமும்
கொஞ்சமும் தேவையில்லை யவனுக்கு…!

நொறுங்கி விட்ட இதயங்களை
பொறுக்கிச் சேர்க்க….!

பிரிந்து விட்ட மனங்களை
இணைத்துச் சேர்க்க…!

இனமென்றும் மொழியென்றும்
வீடென்றும் நாடெனறும்
மதமென்றும் ...
கருகிய மனங்களைக் கட்டிக் கோர்க்க…!

வருகிறான் மீண்டும்....

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்குண்டு
கிழிந்து நைந்த
கந்தலாடை மனங்களால்
படுக்கை விரிப்போம்..!

பிறக்க இடமின்றி
ஒவ்வொரு கதவாகத் தட்டிய படியே..
வருகிறான்....

திறந்து வைப்போம் நம் மனக் கதவுகளை…!

மீண்டும் பிறக்கட்டும் மனிதம் -நம்
மனங்களில்…..!

இனியக் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்….!

எழுதியவர் : (25-Dec-15, 1:24 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 15506

மேலே