விவசாயம் தொகுப்புக் கட்டுரை

இடையில் என்ன பிரச்னை? --- விவசாயப் பொருட்கள்
By S.V.P. வீரக்குமார்

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இன்று படித்தப் பதிவு இந்தச் செய்தியை எழுதத் தூண்டியது. ஆண்டாண்டு காலமாக சொல்லப்படுகின்ற விஷயம்தான். ஆனாலும் உலகில் எங்கும் இதற்கு முழுமையான தீர்வு வெற்றிகரமாக கண்டறியப்பட்டதாகத் தகவல் இல்லை. என்ன என்பதை காணும் முன்னர் ஃபேஸ்புக்கில் எழுதப்பட்டதன் துளிகள் சில.

‘கடந்த மார்கழிப் பட்டத்தில் ஒன்றரை ஏக்கரில் உளுந்து விதைத்தேன். மாசி மாதத்தில் அறுவடை செய்தேன். உளுந்து குறித்த வரவு - செலவுக் கணக்கை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

உழவு (டிராக்டர்) ரூ.1750
விதை (ஏடிடீ 5) ரூ.1650
விதைப்பு உழவு ஏர் ரூ. 500
களை பறிப்பு ரூ.3265
பாத்தி பிடிக்க ரூ 900
அறுவடை ரூ.1200
தூற்றி,சுத்தம்செய்தல் ரூ 950
உளுந்து மூடைகளை சந்தைக்கு கொண்டு செல்ல வண்டி (டாடா) வாடகை

ரூ. 850
மூட்டை தூக்குவோர் கூலி ரூ. 60
மொத்த செலவு ரூ.11065


இதில் பணிபுரிபவர் கூலி இல்லை. ரசாயன உரம், பூச்சி விஷம் பயன்படுத்தவில்லை. மொத்த விளைச்சல் 300 கிலோ.ஒரு கிலோ உளுந்து வாங்கப்படும் விலை ரூ.42 விதை விலை கிலோ ரூ.110. உபயோகிப்பாளர் கடையில் வாங்கும் உளுந்தின் விலை ரூ.90. விவசாயிகளிடம் ரூ 42க்கு உளுந்து வாங்கப்பட்டு தோல் நீக்கப்பட்டு வருகின்றது. வாங்கி விற்பவர் செய்யும் இந்தச் சிறிய வேலைக்கு எடுத்துக் கொள்ளும் ஆதாயம் ரூ.48.

கிலோ ஒன்றிற்கு 42 ரூபாய் என 300 கிலோவை விற்றதால் 12600 கிடைக்கும். மார்கழி முதல் மாசி வரை விவசாயியும் பணியாளரும் பார்த்த வேலைக்கு கிடைத்த தொகை ரூ.1535/- சாகுபடி செய்பவர்களை விட மொத்த வியாபாரிகள் மிக நன்றாக வாழ்வதைப் பார்க்கிறோம்.

வணிகர்களுக்கு எதிராகப் போராடி ஓய்ந்து போனவர்களின் பிள்ளைகள் நாங்கள். இலவச மின்சாரம், மானியம் ஆகிய சலுகைகள் இருப்பதாகப் பலர் பொறாமையோடு பேசுகின்றனர். உளுந்து விலை உயர்வுக்காக வருந்தியும், கோபமுற்றும் வருகின்றனர். முதல்வரும் பிரதமரும் பதிலளிக்கின்றனர். காய்கறி விலை, பருப்பு விலை, எண்ணெய் விலை குறித்தும் கோபம் உண்டு.





ஹமாம் சோப்பு விலை வருடம்தோறும் உயர்வது குறித்து யாரும் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனியை எதிர்த்துப் போராடியதாக கேள்விப்படவில்லை. பாட்டா செருப்பு விலை உயர்வு குறித்து பாட்டா செருப்புக்கடை முன் உரக்கப்பேசுவது கூட இல்லை. பெப்சி, கோக் இத்யாதிகளைக் கடைக்காரர் சொல்லும் விலைக் கொடுத்து வாங்குவதையும், அந்தப் பொருட்களின் விலைக் குறித்து அலட்டிக் கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தபின் இதை எழுத வேண்டிய அவசியம் வந்தது.

இவ்வாறு அவர் எழுதிய ஆதங்கம் இடையில் என்ன பிரச்னைகள், ஏன் பிரச்னை, என்ன செய்யலாம் என யோசிக்க வைத்தது. இந்த விஷயத்தை மூன்று கோணங்களிலிருந்துப் பார்க்க வேண்டும். உற்பத்தி செய்யும் உழவர்களின் கோணம், உபயோகிப்பாளரின் கோணம், இடையில் இருப்பவர்கள் கோணம், இந்த முக்கோணம் எப்படி வந்தது, இதை உடைத்து உற்பத்தியாளன் உபயோகிப்பாளன் என ஒரு நிலையை உருவாக்க இயலுமா? சாத்தியமா? வெற்றியடையுமா? இது மாபெரும் கேள்வி.

பண பரிவர்த்தனைக்கு முந்தைய பண்டமாற்று காலத்திலேயே உற்பத்தியாளர், வியாபாரி என்ற உறவுமுறை இருந்து வந்திருக்கின்றது. அந்தந்த பகுதியில் உள்ள சந்தைகளில் கடை விரித்து காத்திருக்கும் வியாபாரிகள் விளைந்ததை வாங்கிக் கொண்டு, அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கியப் பொருளை எங்குத் தேவையோ, அங்குக் கொண்டும் கொடுத்தும் பண்டமாற்று செய்தனர்.

தூத்துக்குடி உப்பும், ராமநாதபுரத்து மிளகாயும், மேற்கு தொடர்ச்சி மலை எலுமிச்சைக்கும் வியாபாரி போட்ட முடிச்சினாலேதான் ‘ஊறுகாய்’ உண்டாகின்றது. இந்த வியாபாரி என்ற பாத்திரம் இல்லையென்றால் உப்பும் எலுமிச்சையும் எப்படி சேரும், ஊறுகாய் எப்படிக் கிடைக்கும்?

விவசாயியே நேரடியாக விற்பனையாளராக மாறினால் என்ன? உபயோகிப்பாளருக்கு விலைக் குறைவாக கிடைக்குமே என்பது எல்லோராலும் பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. நியாயமான கேள்விதான் ஆனால் சாத்தியம் குறைவானக் கேள்வி.

உழவர் சந்தை என ஒன்றை தமிழகத்திலும், ரயாத் மார்கெட் என ஆந்திராவிலும் காய்கறிக்கான சந்தை ஒன்றை அரசு துவங்கியது. இன்று வெகுசில இடங்களைத் தவிர அநேக இடங்களில் தோல்வியைத் தழுவி இந்தச் சந்தை மூடப்பட்டது. வெற்றிக்கரமாக நடந்து கொண்டுள்ளது எனக் கூறப்படும் சந்தைகளில் உட்கார்ந்து விற்பனை செய்பவர் யாரும் வெறும் விவசாயிகளே இல்லை. விவசாயி என்ற போர்வையில் உள்ள வியாபாரிகள் மட்டுமே.

எந்த ஒரு விவசாயி ஆனாலும் தினசரி தனது விவசாய பணிகளையும் பார்த்துக் கொண்டு, உழவர் சந்தையில் அமர்ந்து வியாபாரமும் செய்ய போதுமான நேரம் கிடைக்காது.

தினசரி சந்தைக்குக் கொண்டுச் செல்ல பறிக்குமாறு காய்கறியை உற்பத்திச் செய்ய இயலாது. உபயோகிப்பாளரின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யவும், தொடர்ந்து உற்பத்தி செய்யவும் இயலாது.

தானியப் பொருள் உற்பத்தி செய்பவர் களத்து வேலை முடித்ததும் அரக்கப்பரக்க அடுத்த போகத்திற்கு காலாகாலத்தில் தயாராக வேண்டிய கட்டாயத்திலிருப்பார். நெல் கொள்முதல் மையத்திற்கோ, அரிசி ஆலை ஏஜென்ட்டுக்கோ ஒற்றை வரியில் விற்பனை செய்து அடுத்த வேலையை நோக்கிச் செல்வார். கடந்த விற்பனையில் அடுத்த போகத்திற்கு முதலீட்டை எடுக்க வேண்டும். இதை விடுத்து நெல்லை அவித்து, அரிசியாக்கி, கல் குருணை நீக்கிச் சிப்பமிட்டு சந்தைப்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்த இயலாத நிலையிலிருப்பார்.

ஒரு விவசாயி இடைத்தரகர்களை எல்லாம் தவிர்த்துவிட்டு நேரடியாக உபயோகிப்பாளருக்குக் கொடுக்க இயலவில்லை என்றாலும் பரவாயில்லை சில்லறை விற்பனை இடத்தில் உதாரணம் டிபார்ட்மெண்டல் ஸ்டோர், அண்ணாச்சிக்கடை, கூடைக்காரம்மா போன்றவர்களுக்கே விற்பனை செய்தால் என்ன எனக் கேட்கலாம். இவர்களுக்கு தினசரி குறிப்பிட்ட அளவு விளைபொருள், வருடம் முழுவதும் தொடர்ந்து தேவைப்படும். அதைப்போல எந்த விவசாயியாலும் கொடுக்கவே இயலாது.

உற்பத்தியாளரால் உற்பத்திப் பொருளைத் தரம்பிரித்து, சிப்பமிட இயலுமா பிராண்டிங்கிற்கு வாக்கப்பட்ட நம் மக்கள் சாதாரணமாக இருந்தால் வாங்குவார்களா? அரிசின்னா இந்தியா கேட் வேணும். இல்லைன்னா சென்னை கேட்டாவது போதும் என்ற நிலையில்தானே உபயோகிப்பாளர் இருக்கின்றனர்!

ஆக 42 ரூபாய்க்கு உளுந்து கொள்முதல் செய்து 48 ரூபாய் லாபம் வைத்து 90 ரூபாய்க்கு உபயோகிப்பாளருக்கு விற்பனைச் செய்வதை ஆதரிக்கின்றீர்களா? இது நியாயமா? என்றக் கேள்வி அவசியம் எழும். நிச்சயம் தவறுதான். இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது.

அளவுக்கு அதிகமான உற்பத்தி ஒரே சமயம் வருவது.

சந்தை விலை ஏற்ற இறக்கம் எனும் மாயை பொருளாதார வலை.

சப்ளை செயின் நெட் ஒர்க் வியாபாரிகளிடமிருப்பது 48 ரூபாய் லாபத்தையும் வியாபாரி முழுவதுமாய் அடைந்துவிட முடியாது. விவசாயிகளிடம் சில்லறை வியாபாரி வாங்கி அவற்றை இயன்ற அளவு சுத்தப்படுத்தி, ரகம் பிரித்து, தேவைப்பட்டால் காயவைத்து, எடைபோட்டு சிப்பம் போட்டு சிலபல அதிரடி வேலைப் பார்த்து, விவசாயிக்கு உடனே பணப்பட்டுவாடா செய்து வண்டியேற்றி தரகு மண்டிக்கு செல்வார். தரகு மண்டிக்காரர் கிட்டங்கியில் சரக்கை இறக்கி ஒரு முன்பணம் கொடுத்தனுப்பி, பருப்பு மில் தவறாமல் போன் பேசி வாங்க ஆள் பிடிப்பார். மில்காரன் 1008 கிராக்கி செய்து வந்துப் பார்த்து 108 குறை சொல்லி வேண்டா வெறுப்பாக பணம் ‘இப்ப கிடைக்காது, ஏகப்பட்ட ஸ்டாக் இருக்கு, மார்கெட் இழுவையே இல்லை’ எனக் கதைப்பேசி விலை பேசுவான். தரகு மண்டிக்காரர் விவசாயிடம் விற்பனை கமிஷன், வியாபாரியிடம் கொள்முதல் கமிஷன் பேசி மூடையை ஏற்றிவிட்டு வாங்கிய வியாபாரி பணம் கொடுக்கும் வரைக்கும் அவருக்கும் சேர்த்து சாமி கும்பிடுவார்.

மிகப்பெரிய முதலீட்டில் பருப்பு உடைக்கும் மெஷின், சல்லடை மெஷின், ஸ்கேனர் மெஷின்,பேக்கிங் மெஷின், களம் ஆள், அம்பு, சேனை பலம் என தனி ராஜ்யமே நடத்தும் மில் அதிபர் கறுப்பு உளுந்தை தோல் உரித்து உருட்டு உளுந்து, உடை உளுந்து, உளுந்து டஸ்ட் என ரகம் பிரிப்பார். அவுட்டேர்ன் வரும் வரை அவருக்கும் ‘பக் பக்’ என இருக்கும். உடைத்த பருப்பை அவர் மார்கெட் செய்ய ஆங்காங்கே உள்ள மொத்த விற்பனையாளர்களைத் தேடிச் சாம்பிளோடு மில் பிரதிநிதி போவார். சாம்பிளைப் பார்த்து முகத்தில் எந்த உணர்ச்சியுமே காட்டிக் கொள்ளாமல் ‘லயன்ல இழுவை இல்லைங்க..அச்சுல அடிச்சு செஞ்ச மாதிரி பர்மா உளுந்தும், சைனா உளுந்தும் கண்டெய்னர் கண்டெய்னரா வந்து குவியுது, லோக்கல் உளுந்து அவ்வளவா மூவ்மெண்ட் இல்லை….வந்துட்டீங்க…சரி ஒரு லோடு வேணா அனுப்புங்க…அனா அடுத்த லோடு இறக்கும்போதுதான் இந்த லோடுக்குப் பணம்’ எனக் கொக்கி போடுவார்.

உளுந்து அடுத்துச் செல்வது சிறிய மொத்த விற்பனையாளர். அடுத்து நமது தெருக்கோடி கடை. நம் வீட்டு அடுபங்கரைக்கு வரும் முன்னர் உளுந்து எத்தனை முறை ஏற்றி இறக்கப்பட்டு,கை மாறி,கைமாறி ஒருவர் கடனை இன்னொருவர் சுமந்து, எல்லாம் ஒன்றுச் சேர்ந்து விலையை முடிவு செய்யும் போது ஜிங்கு ஜிங்கு என ஆடிவரும் கமாடிட்டி மார்கெட் உளுந்தையே கண்ணில் பார்க்காமல் கோடிக்கணக்கில் வாங்கி இருப்பு வைத்து, விற்பனை செய்வதாய் ஒரு மாயத்தோற்றத்தில் வியாபாரம் செய்யும் இந்திரஜாலம். யாரோ எங்கோ உற்பத்தி செய்ய, யார் வீட்டு அடுப்படிக்கோ செல்ல வேண்டிய உளுந்து இடையில் கம்யூட்டர் சித்தர்களின் கண்ணில் கமாடிட்டியாகச் சிக்கி சின்னாபின்னமாகி சீரழிகின்றது.

மூன்று மாதம் வெயிலிலும், பனியிலும் போராடிய விவசாயிக்கு கிடைப்பது போலத் தோன்றுவது 1535/- மட்டுமே! இதில் அவர் சொல்லாத நேர்முக, மறைமுக செலவுகளும் சில உண்டு. அதற்கடுத்து கைமாறி கைமாறி ஆளாளுக்குச் செலவும். இலாபமும் சேர்ந்து அடுப்பங்கரை வர 48 ரூபாய் அடுத்து சேர்ந்து விடுகிறது. வருடம் ஒரு முறை, இருமுறை விளையும் உளுந்தை வாங்கி இருப்பு வைத்து விலை ஏற்ற இறக்கத்தை அதில் வரும் லாப நஷ்டத்தை இடையில் இருப்பவர்கள்தான் சுமக்கின்றனர். முகநூல் நண்பர் எழுதியது போல எல்லா வியாபாரிகளும் நன்றாக வாழவில்லை, அவர்களின் வெள்ளைச் சட்டை மறைத்திருக்கும் பனியனில் ஆயிரம் பொத்தல்கள் இருக்கின்றன. நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், வியாபார நெளிவு சுளிவு தெரியாமல் கையினைச் சுட்டுக் கொல்லுதல், கமாடிட்டி அரக்கனின் மாயவலை போன்றவை பெரிய பெரிய முதலைகளையே முகவரியில்லாமல் ஆக்கியுள்ளன.

அப்புறம் என்னதான் வழி? உற்பத்தியாளன், வியாபாரி, உபயோகிப்பாளன் எனும் முக்கோணத்தை உடைத்து உற்பத்தியாளன் -> உபயோகிப்பாளன் எனும் நிலையை உண்டாக்கவே இயலாதா என்ற கேள்வி எழும். அது தனி மனிதர்களால் சாத்தியமில்லை ஆனால் அரசின் துணையோடு அதிகபட்சம் சாதிக்கலாம்.

முதலில் பொருள்களின் உற்பத்தியை வரைமுறைப்படுத்தவேண்டும். புள்ளியலாளர்களின் துணை கொண்டு ஒவ்வொரு பொருளின் தேவை, கொஞ்சம் கூடுதல் இருப்பு போன்றவை உண்மையாக கணக்கிடப்பட வேண்டும்.

இந்தத் தேவைக்கு ஏற்ப மட்டும் உணவு, காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட வேளாண்துறைக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்ற அளவில் மட்டும், நியாயமான கூடுதல் அளவுடன் விதைகள் விவசாயிக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

காய்கறி போன்ற தினசரி தேவை சீசனையும், பருவச் சூழலையும் கருத்தில் கொண்டு அதிகபட்சமாக அந்தந்தப் பகுதியிலேயே, அருகிலேயே உற்பத்திச் செய்யப்பட வேண்டும்.

அளவுக்கு மேல் ஒட்டுமொத்தமாக நடவு செய்து, அமோக விளைச்சலால் சந்தையை சீரழிக்கும் மனப்பான்மையை விவசாயிகள் கைவிட்டு ‘தேவைக்கான உற்பத்தி’ எனும் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்குப் பதில் சொல்லி அவர்களை திருப்தி செய்வதை மட்டுமே தனது பணியாகக் கொண்டுள்ள அரசு அலுவலர்களுக்குத் தக்க பயிற்சி கொடுத்து அடிமட்டத்தில் வேலை செய்ய படிப்பிக்க வேண்டும்.

விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே சரியாக, நேர்மையாக செயல்படக்கூடிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை மறுமலர்ச்சியை செய்ய வேண்டும். இன்னும் சில இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறம்பட இயங்கி விவசாயிகளுக்கு சேவைப் புரிகின்றன.

தகவல் தொழிநுட்ப வளர்ச்சியினைப் பயன்படுத்தி வெளிப்படையான நிர்வாக அமைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நிகழ்வையும் சாமான்யனுக்கும் தெரியத்தக்க வெளிப்படைத்தன்மை தேவை.

இடையில் இருக்கும் வியாபாரிகள் எனும் பிரிவு ஒழிக்கப்பட வேண்டியவர்கள் இல்லை. அவர்கள் சந்தைப் பொருளாதாரம் அமைப்பில் அவசியம் இருக்க வேண்டியவர்கள். ஆனால் கைமாறுதல் அதனால் விலையேற்றம் என்ற முறைக் களைந்து, உற்பத்தியாளர், உபயோகிப்பாளருக்கான இடைவெளி மிகவும் குறைக்கப்பட வேண்டும்.

விவசாய விலை பொருட்களில் சூது விளையாடும் ‘கமாடிட்டி’ வர்த்தகத்தை அறவே நீக்கிவிட வேண்டும். அவர்கள் மக்களின் அத்யாவசியப் பொருட்களை தவிர்த்து ஆடம்பர பொருட்களில் சூது விளையாடட்டும்.

இந்த விஷயத்தை பழம் தின்று கொட்டைப் போட்ட நம் அரசு அலுவலர்களிடம் கொடுத்தால் குட்டிச் சுவராக்கி விடுவார்களே, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுமே என அநேகர் கேட்கலாம். நல்ல நேர்மையான அலுவலர்களை மட்டும் தேர்வு செய்து இதனை நெறிப்படுத்தி துவக்கினால் எத்தனை பெருச்சாளிகள் வந்தாலும் சமாளிக்கலாம்.

விவசாயி வியாபாரம் செய்வது சாத்தியமில்லை. ஏனென்றால் விவசாயம் என்பது 24X7X52 என்கிற வகையான பணி. இதில் விற்பனையாளராக மாறுவதற்கான சாத்தியம் மிகமிகக் குறைவே. அரசு, அரசு சார்ந்த நேர்மையான அமைப்பு இடைநின்று வியாபாரிகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தி நெறிப்படுத்தினால் ‘48’ல் கணிசமான அளவை குறைத்து ‘90’ ஐ கீழே கொண்டு வரலாம். ‘42’ம் ஐயும் கொஞ்சம் கூட்டலாம். கறுப்பு உளுந்தை வெள்ளையாக்கி விற்பதில் இத்தனைப்பாடு இருக்கும்போது இந்த ஊழல் புரையோடிப்போன சூழலில் கறுப்பு உள்ளத்தை வெள்ளையாக்க எத்தனைப் பாடுகள் படவேண்டியிருக்கும்?

எழுதியவர் : (29-Dec-15, 4:59 am)
பார்வை : 384

சிறந்த கட்டுரைகள்

மேலே