தொழிலாளி

மனித மலங்கள்,
மாநகர கழிவுகள்,
குப்பை தொட்டிகள்,
குரைக்கும் நாய்கள்,
அட்டைப்பூச்சிகள்,
அருவருப்பூட்டும் புழுக்கள்,
எல்லாம் பழகிவிட்டது..
எங்களுக்கு..!
கரிய உடல்,
கறைப்படிந்த பற்கள்,
எண்ணெய்வழியும் thalai,
நாணலாய் குறுகிய மேனி,
உணர்வுகள் உணர்ச்சிகள்
உறைந்த நிலையில்
நாங்களும் மனிதர்கள் தான்.
உங்கள் கழுவுகளைக்கண்டு
நீங்களே முகம் சுழிக்கையில்,
நாங்கள் அவற்றை
சுத்தம் செய்கிறோம்..
பணத்திற்காக மட்டுமல்ல,
பலரின் நன்மைக்காக..!
நாட்டை காக்கும் பணியில்
விளிம்பில் ஒரு கூட்டம்...
கழிவில் ஒரு கூட்டம்...
எனினும்,
நல்ல உடை உடுத்தவும்
நாங்கள் குடுத்துவைக்கவில்லை..
நறுமணத்தை மறந்துவிட்டது,
எங்களின் நாசி.
பலமுறை
சாப்பிட்டிருக்கிறோம்,
சாக்கடையின் அருகில் அமர்ந்து.
நாற்றம் படிந்த
எங்களின் கைகளில்
நிறைந்திருக்கிறது..
பலரின் பாவங்கள்.
இருப்பினும்
எங்களின் வம்சம்
வசிப்பிடம் முதல்,
வகுப்பறை வரை,
ஒதுக்கப்படுவதும்
பழிக்கப்படுவதும்
எங்களின் விதியா...?
இல்லை..
உங்களின் சதியா...?
விவசாயி இல்லையெனில்,
மனிதனின்
வயிறு நிறையாது...
எங்களைபோல்
தொழிலாளி இல்லையென்றால்,
மனித வாழ்வு நிலைக்காது..
உங்களுக்காய் உழைக்கிறோம்..
உங்களாலேயே பழிக்கப்படுகிறோம்..
செய்யும் தொழிலே
தெய்வம் எனில்..
எங்களின் தெய்வத்தை
பழிக்கும் உங்களுக்கு,
எந்த தீங்கும்
நேராமல் காக்கட்டும்
எங்கள் தெய்வம்...!