என் அன்பு கணவனுக்கு
தொடு வானமாய் நீங்கள்
தொலை பேசியில் நான்
தொடரும் உங்கள் நினைவுகளால்
துடிக்கிறேன் நான்
துன்பங்கள் உங்களை
சூழ்கின்ற பொழுதுகளில்
மார்போடு அணைத்து உங்களை
மறைத்து வைக்கும் ஏக்கம்
தனிமையில் நீங்கள்
தவித்து நிற்கும் பொழுதுகளில்
தாயாக நான் மாறி
தாலாட்டும் ஏக்கம்
கையில் தீ சுட்டதென்று
கலங்கி நீங்கள் சொல்கையிலே
முத்தங்களின் எச்சிலால்
மருந்திடும் ஏக்கம்
வேலைக் களைப்பினால் நீங்கள்
வியர்வை சிந்தி நிற்கையில்
என் தாவணி விசிறிகள்
விசிறிவிடும் ஏக்கம்
குளிரின் கூதலினால் நீங்கள்
வெடு வெடுத்து நிற்கையிலே
என் உடலின் கதகதப்பில்
ஒளித்துவைக்கும் ஏக்கம்
பிரிவின் கொடுமைகள் நம்மை
தாக்கும் பொழுதுகளில்
விரைவில் உங்களைச்
சேர்ந்து விட ஏக்கம்.