ரீசார்ஜ்- பஸ் சார்ஜ்
ரீசார்ஜ்- பஸ் சார்ஜ்!
-------------
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் அந்த அதிகாலை வேளையில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஐந்தாவது பிளாட்பாரத்தில் திருச்சி செல்ல பேருந்துகள் நின்றிருக்க திருச்சி.. திருச்சி.. என்று நடத்துனர்கள் கூவிக்கொண்டிருக்க மற்ற ப்ளாட்பார்ம்களில் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி தூக்கம் தொலைத்த கண்களாய் தங்கள் ஊர் பேருந்தை பிடிக்க சுமைகளோடு நடந்துகொண்டிருந்தனர்.
அதிகாலைப்பொழுதில் டீக்கடைகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பொழுதிலும் பஜ்ஜியும், கஜாடாவும், போண்டாக்களும் வடைகளும் அதிவேகமாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தது ரமேஷிற்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைகளை தாண்டி ஆவின் பாலகத்திற்கு வந்து ஒரு பாதம் பால் என்று ஆர்டர்கொடுத்துவிட்டு கால்சட்டைபையில் பணம் எடுக்க கைவிட்டான். ஒரு ஐநூறுரூபாய் தாளை கொடுத்து சில்லறை இல்லையா சார் என்று கேட்ட ஆவின் பாலக ஊழியரிடம் இல்லை என்று சொல்லி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்ற அவரிடம் பரவாயில்லை! நான் இந்த பாலை குடிச்சு முடிக்கிறதுக்குள்ள கொடுத்திருங்க என்றான்.
பாலை ரசித்து குடித்து முடித்து ஊழியர் கொடுத்த சில்லறையை வாங்கி மேல்சட்டை பையில் வைக்கவும் அந்த இளைஞன் அண்ணா என்று கூப்பிட இங்க யாரு நமக்கு திடீர் தம்பி? என்று யோசித்தவாறு நிமிர்ந்தான்.
ஒடிசலான தேகத்தில் முகமெல்லாம் மழித்து உதட்டின் கீழ் குறுந்தாடி வைத்து ஒரு இளைஞன் நின்றிருந்தான். பேண்ட் இடுப்பை விட்டு இறங்கி அவனது உள்ளாடையை காட்டிக் கொண்டிருந்தது. சட்டை உடலை இறுக்க பிடித்து இருந்தது, அதை அவன் லட்சியம் செய்யாமல், “ அண்ணா! நான் ஆந்திராவுல விஜயவாடா போகணும்! சிதம்பரத்துல இருந்து பஸ்ல வரேன்! தூக்கத்துல யாரோ என் பர்ஸை அடிச்சிட்டாங்க! வேற பணம் எதுவும் இல்லை! ஒரு முன்னுறு ரூபா கொடுத்துஹெல்ப் பண்ணுங்க! உங்க அட்ரஸ் இல்லன்னா பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுத்தா அங்க போய் பணத்தை அனுப்பிடறேன் ப்ளீஸ் ஹெல்ப்! பண்ணுங்கன்னா! என்றான்.
ஸாரிப்பா! முன்னுறு ரூபா உனக்கு சின்னதா தெரியலாம்! ஆனா எனக்கு அது பெரிசு! என்னால முடியாது… வேற ஆளைப்பாரு…!
அண்ணா! என்னை நம்புங்கன்னா… ப்ளீஸ்னா! யாரும் உதவ மாட்டேங்கிறாங்க மூணு மணியில இருந்து மூணு மணி நேரமா இந்த பஸ் ஸ்டாண்ட் பூரா சுத்தி வரேன்னா… ப்ளீஸ்னா…!
இல்லேப்பா…! என்னை விடு…!
அவன் விடுவதாயில்லை… பின்னாலேயே துரத்தி வந்தான். அண்ணா அண்ணா ப்ளீஸ்னா ஹெல்ப் பண்ணுங்கன்னா! ஏமாத்த மாட்டேன்னா! ஒரு தம்பியா நினைச்சுக்கங்கன்னா…!
தம்பி! உன் வீட்டுல யாருகிட்டேயாவது போன் இருக்கா?
இருக்குன்னா… ஆனா என் பேக் முழுசும் தொலைஞ்சு போச்சு! என் போனும் அதுல போயிருச்சு!
பரவாயில்லை! உன் வீட்டுல யார் நம்பர் உனக்கு நினைவில் இருக்கு…?
அப்பா நம்பர் மனப்பாடம்னா…!
அப்படின்னா சொல்லு நான் டயல் பண்றேன் நீ பேசு… என்னோட நம்பர் தரேன் அதுக்கு அவங்களை முன்னூறு ரூபாவுக்கு ரீசார்ஜ் பண்ண சொல்லு! பணம் என் அக்கவுண்ட்ல வந்ததும் நான் உனக்கு முன்னூறு ரூபா தரேன் சரியா? போனை எடுத்தேன்.
பையன் கண்களில் மிரட்சி! அண்ணா அப்படியெல்லாம் வேண்டாம்னா! இல்லேன்னா விட்டுருங்க அவன் விலகி நடக்க ஆரம்பிக்க
தம்பி! தம்பி! நான் குரல் கொடுக்க அவன் ஓடிக் கொண்டே
நீங்க ரொம்ப இண்டலிஜெண்ட்டுன்னா! என்றான்/
நன்றி ;தளிர் சுரேஷ்

