அமைதி

பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கி
==பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி.
நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்
==நினைக்கின்ற சுகமுமொரு அமைதி
தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தப் போலினிக்கும்
==தெய்வீகத் தன்மையுள அமைதி
வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக
==வந்துவிடும் ஆனந்தம் அமைதி.

தூங்காமல் வதைக்கின்ற துயரத்தில் வாடுகையில்
==தூரத்தே போய்நிற்கும் அமைதி
தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்
==தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி
ஏங்காத இதயத்தில் இதமாக பதமாக
==என்றென்றும் குடியிருக்கும் அமைதி
தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்கு
==தேனாலே நீராட்டும் அமைதி.

இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்
==ஈவதிலே கிடைக்கின்ற அமைதி
பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே
==புளகாங்கிதம் கொள்ளாத அமைதி
கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்
==கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி
சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்
==சுகராகம் இசைத்துவிடும் அமைதி

உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற
==உள்ளத்தின் உறுதியெனும் அமைதி
தனக்கென்றக் கொள்கைக்கு தடைபோட்டு பிறர்க்கென்று
==தான்வாழச் சொல்கின்ற அமைதி
இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி
==இழக்கின்ற சந்தோசம் அமைதி
எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்
==இழப்பற்று இருந்துவிடும் அமைதி.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Jan-16, 4:02 pm)
பார்வை : 156

மேலே