பிள்ளை வரம்

பிள்ளை வரம்
******************

மண்சோறு திண்று
மடி பிச்சை கேட்டு
அரசமரம் சுற்றி
கோயில் குளம் அலைந்து
ஆயிரமாயிரம் மருந்து
மாத்திரைகள் விழுங்கி
லட்சங்களில் செலவு செய்து
லட்சியமாய் பெற்றப் பிள்ளை
அலட்சியமாய்பார்க்கிறது.... இன்முகமாய் வளர்த்த பிள்ளை
ஏளனமாய் பார்க்கிறது....
காசை கொட்டி வளர்த்த பிள்ளை
கணக்கு பார்த்து முறைக்கிறது....!
கருவில் உதைத்ததும்
வலிக்கவில்லை....
நெஞ்சில் மிதித்ததும்
வலிக்கவில்லை....
காரணமின்றி
ஒதுக்குவதே வலிக்கிறது
முதுமை என் முக'வரி'க்கு
வந்தது பிடிக்கலையோ?
சுற்றி சுற்றி வந்து
முந்தானை பிடித்தப் பிள்ளை
மனையாளின் முந்தானை
பற்றி எனை மறந்த மாயமென்ன?
சுமந்து பெற்றவளே
சுமையாகிப் போனேனோ?
வரமிருந்து பெற்ற பிள்ளைக்கு
சாபமாகும் கதி ஏனோ?
முதியோர் இல்லம்
தேடும் முன்
கண்மூடும்
பாக்கியம் கொடு இறைவா
அன்று பிள்ளை வரம் கேட்டேன்
இன்று சாக வரம் கேட்கிறேன்.....
இறுதியாய் ஒரு
விண்ணப்பம் இறைவா
என் பிள்ளையின் பிள்ளையாள்
என் பிள்ளைக்கு இந்நிலை வேண்டாம்...

எழுதியவர் : சித்ரா ராஜ் (27-Jan-16, 9:40 pm)
Tanglish : pillai varam
பார்வை : 344

மேலே