அன்பாய் இருந்திடுவாள்
அன்பாய் இருந்திடுவாள் !
இடையில் மின்னிட இதழிடை சுவையுற
நடையிடை ஜதியென நடைபயின்றாள்!
கண்ணிடை வேலென கழுத்திடை சங்கென
பண்ணிடை இசையென பனிஇதழ் நகைத்திடுவாள்
நூலிடை கனியென நுதலிடை பிறையென
தாளிடை பஞ்சென நடம் புரிந்திடுவாள் !
கவியிடை கருத்தென கருத்திடை அமுதென
செவியிடை இசையென செவ்விதழ் விரித்திடுவாள்!
அன்பிடை அணைப்பென அறிவிடை நூலென
பண்பிடை பாசமென பைந்தமிழ் பாட்டிசைத்தாள்!
என்னுயிர் அமுதாய் எழுத்தினில் கவியாய்
பொழுதினும் துணையாய் பின்தொடர்ந்திடுவாள் !
அழகிலும் அழகாய் அமுதினும் அமுதாய்
அணைத்திடும் தமிழாய் அன்பாய் இருந்திடுவாள் !
----- கே. அசோகன்.