அம்மாவுக்குத் தெரியும்

அம்மாவுக்குத் தெரியும்..!!
---------------------------------------
"சுமித்ரா! என்ன வேண்டும் உனக்கு? எப்ப பார்த்தாலும் உம்முன்னு மூஞ்சியை வெசுண்டிருக்கே? " அம்மா கொஞ்சம் கோபமாகத்தான் கேட்டாள்...
"சும்மா இருமா! உனக்கென்ன? உன் வேலையைப் பாரு! நான் என் பிரெண்ட்ஸ் கூட கொடைகானல் போகணும்னு கேட்டா... முடியாதுன்னு சொல்லிட்டே! ரெண்டு நாள்தானே? போய்ட்டு வரேன்னு சொல்றேன்..... " ஏதோ கொஞ்சம் கெஞ்சுவதுபோல் சொன்னாள்...
" சான்சே இல்லை.... முடியாது சுமித்ரா... அப்பா வேற ஊரிலே இல்லை... முடியவே முடியாது.... " அம்மா அழுத்தமாக கூறினாள்...
வெடுக்கென்று எழுந்து பக்கத்தில் இருந்த சோபாவில் கண்ணை மூடி படுத்து விட்டாள் சுமித்ரா..
சுமித்ரா... நன்றாய் படிப்பாள்... கல்லூரியில் முதல் ஆண்டு... அவள் ஒரே பெண்... அப்பா வேலை நிமித்தமாக அடிக்கடி வெளி ஊர் செல்பவர்.... அதனால் இவள் அம்மாவின் பார்வையில் தான் வளர்ந்தாள்... இவள் சக தோழியருடன் சுற்றுலா செல்ல அடம் பிடிக்கிறாள்... அது கல்லூரி மூலம் சென்றால் அம்மா மறுத்திருக்க மாட்டாள்...இவர்கள் தனியாக செல்வதால் இந்த மறுப்பு....
மறுநாள் கல்லூரி சென்று திரும்பியதும் மீண்டும் அம்மாவிடம் பேச முற்பட்டு தோற்றாள் சுமித்ரா...
அவள் தோழிகள் இருவர் வந்து கூட அம்மாவிடம் பேசிப்பார்த்தனர்... இவள் மசியவில்லை... "காலம் கெட்டு கிடக்கு... நான் அனுப்புவதாய் இல்லை !" என்று உறுதியாய் கூறி விட்டாள்.. இரவு அப்பாவிடம் பேசும் பொழுது இதைப் பற்றி சுமித்ரா கேட்க அவர் "அம்மா என்ன சொல்கிறாளோ கேள்" என்று ஒரு வரியில் முடித்து விட்டார்.. பெருத்த ஏமாற்றம் சுமித்ரா முகத்தில்....
அம்மாமீது அதீத கோபம்.... சாப்பாடு மேல் காண்பித்தாள்... அம்மா அடிக்கடி சொல்லிருக்கிறாள்... " சாப்பாட்டை பழிக்காதே! என்னதான் பணம் கையில் இருந்தாலும்... கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட கொடுத்து வைத்திருக்க வேண்டும் ! " இதில் பிடிவாதம் பிடித்தால் அம்மா மனது இலகும் என்று நினைத்தாள்...
" ஒழுங்காக சாப்பிடறிய இல்லியா? இப்படி எல்லாம் அடம் பித்தால் நான் ஓகே சொல்லிடுவேன்னு நினைக்காதே..... இது வேறு அது வேறு ! சாபிடாமல் இருந்தால் பரவாயில்லை...... " என்று முடித்தாள்..
என்ன செய்யலாம் என்ற யோசனையில் சற்று நேரம் டி. வி. பார்த்தாள்...
கொஞ்சம் நேரம் கழித்து அம்மா அவள் பக்கத்தில் வந்து ஆதரவாய் அவள் கையை பிடித்தாள்..... " இதோ பாரு சுமித்ரா.... நீ ஒன்றும் சின்ன குழந்தை இல்லை.... நான் ஒன்னும் பெண்களை வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்னு சொல்றவ இல்லை.... நானே லண்டன்ல போய் 3 வருஷம் படிச்சவ... உனக்கு தெரியும்..... நீ ஆசைப்படற இடத்திற்கு நானும் உங்க அப்பாவும் கூட்டிண்டுப் போறோம்.... ஆனால் பிரிஎண்ட்ஸ் கூடதான் போவேன்னு அடம் பிடிக்கறது நால்லதில்லை....இன்னும் 2 வருஷம் ஆகட்டும்.... அப்போ உனக்கு முழு பக்குவம் வரும்... எது நல்லது , கெட்டது என்று தீர்மானம் செய்யும் பருவம் அது... இப்போ, இது முடிவெடுக்கும் தருணம் அல்ல.... நான் சொல்றதை கேளு.... இங்கே பக்கத்தில் கார்த்தாலே போயிட்டு சாயங்காலம் வரும் இடத்திற்கு போங்க..... அதுவும் சந்தோஷத்தைக் கொடுக்கும் தான்...." மிக விளக்கமாய் கூறினாள் அம்மா..
கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் ஒரு ஓரப்பார்வை அம்மாவை பார்த்தாள் சுமித்ரா... அவள் முழுவதுமாய் ஒன்றும் சமாதானம் ஆகவில்லை என்று அம்மாவிற்கு புரிந்தது ....
" சரி சாப்பாடு போடு! " கொஞ்சம் கோபமாய் கேட்டாள் சுமித்ரா...
அம்மாவிற்கு தெரியும்..... இது தகுந்த நேரம் அல்ல பெண்ணை தனியாய் அனுப்புவது என்று.... இதற்கு அர்த்தம் ஒன்றும் அவள் மேல் சந்தேகம் அல்ல... இது இரண்டுகெட்டான் வயது... பாதுகாப்பற்ற இடம் இவை எல்லாம்தான் அவளை தடுக்கிறது.... பெண்கள் சுதந்திரமாய் இருக்கவேண்டியது தான்... ஆனால் அதற்கும் வரைமுறை இருக்கிறது என்பது அவளது அழுத்தமான எண்ணம்..
இரண்டு நாட்கள் கழிந்தது...
மீண்டும் ஒரு முறை அம்மாவை சமாதனப் படுத்த முயன்றால் என்ன என்று தோன்றியது சுமித்ராவிற்கு....
" ப்ளீஸ் அம்மா! இந்த ஒரு தடவை என்னை அனுப்பேன் கொடைகானல் " கெஞ்சுவதுபோல் கேட்டாள்..
" ஏய்... உனக்கு எப்படி சொன்னாலும் தெரியாது...? வா இங்க... ! கணினி முன் உட்கார வைத்தாள்.... போன வாரம் அங்கு நடந்த ஒரு கொடூர சம்பவம் ஒன்றை அவளுக்கு காண்பித்தாள்... அந்த நிமிடம் வரை அதை அவளிடம் பேசவோ அல்லது காண்பிக்கவோ கூடாது என்ற முடிவில் தான் இருந்தாள்,,, ஆனால், சுமித்ராவின் பிடிவாதம் குறையவில்லை.... வேறு வழி இல்லாமல் இப்பொழுது சுமித்ரா பார்த்துக்கொண்டிருந்தாள்... அவள் கண்கள் சிவப்பதை அம்மா கவனித்தாள்.. கோபம் வருகிறது சுமித்ராவிற்கு , கையை ஓங்கி அடிக்கிறாள் மேஜையை .... அம்மா அவள் கையை பிடித்தாள்..." சுமித்ரா... கொஞ்சம் பொறுமையாக இரு.... இது கொடூரம்தான்..... நீ டென்ஷன் ஆக கூடாது ... இந்த தண்ணீரை சாப்பிடு...." அவள் முகம் வேர்த்திருந்தது... தன புடவை தலைப்பால் அதை ஒற்றி எதுத்தாள்..
கணினியை நிறுத்திவிட்டு அவளை சோபாவில் அமரவைத்தாள்.. இரண்டு நிமிடங்கள் கழித்து தொடர்ந்தாள்..
"இதோ பாரு கண்ணா .... உனக்கு இந்த வயதில் பிரிண்ட்ஸ் கூட போகணும் என்கிற ஒரே குறிக்கோள்தான்.... அது தவறு என்று நான் சொல்லலே... ஆனால் அதை எங்கே, எப்படி என்பதில் பெற்றோருக்கு அக்கறை உண்டு.... நீ ஆசை படுவது எல்லாம் நிறைவேற்றவேண்டும் என்று எங்களுக்கும் எண்ணம் உண்டு... ஆனால், அதில் எது சாத்தியம் என்பது இருக்கே.... ! நீயே யோசி... நான் சொல்றது சரி என்று முடிவு பண்ணினால் நல்லது... இல்லை என்றால் உனக்குதான் டென்ஷன்... கட்டாயம் நான் சம்மதிக்கப் போவதில்லை..."
கொஞ்சம் அப்படியே தலை சாய்ந்து படுத்தாள் சுமித்ரா.... அம்மா, அப்பாவின் கல்யாண ஆல்பத்தை தன மீது வைத்துக்கொண்டு....
மறுநாள் காலை... " அம்மா எனக்கு என்ன டிபன்? " என்றாள்... "தோசை " மறுமுனையிலிருந்து அம்மா சொன்னாள்.... " வா.. சீக்கிரம்... இன்னிக்கு லேப் இருக்கு... சீக்கிரம் போகணும்.." என்றாள்...
இரண்டு நாட்கள் சென்றது... சுமித்ரா கொடைகானல் பற்றி எதையும் அம்மாவிடம் பேசவில்லை... வெகு இயல்பாய் இருந்தாள்...
அம்மா மனம் லேசானது....
மைதிலி ராம்ஜி