நெல் மகள்

-எம். எப். எம். றிகாஸ்

பூரண சந்திரன் தன் பவள ஒளிக்கீற்றுக்களை பூமியெங்கும் பரப்பி அப்பிக்கொண்டிருந்த காரிருளை பிரித்துமொய்த்துக்கொண்டிருந்தான். வசந்தகாலத்தின் கதகதப்பில் பூத்துக்குழுங்கும் முற்றத்துமல்லிகையின் புனிதமானதொருவாசனை பார் எங்கும் பரவிக்கொண்டிருந்தது. இடைவிடாத சில்லூறுகளின் ஓசை ஆவர்த்தனமாய் அறியமுடியாததிசைவழியே கேட்டுக்கொண்டேயிருந்தது.

உலகின் ஆத்தனை ஜீவன்களினதும் உணர்வுகள் குடிகொண்டிருக்கும் உடல்கள் கனவுகளின் தாலாட்டுடன் உறக்கத்தில்போட்டாகிவிட்டது. செல்வி இன்னும் தூங்கவில்லை மனதின் பாரம் அவளது கண்களை மூடவிடாமல்இருகபிடித்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக அவளால் தூங்கமுடியவில்லை. கவலைகளும் ஏக்கங்களும் நிரம்பிய அவளதுஉடல் அறைமுழுவதும் கவ்விக்கொண்டிருந்த மையிருட்டில் புதைந்துகிடந்தது. அவளது தொண்டையில் ஒருவிதஇருக்கம், விழித்திருந்த கண்களின் ஓரத்தில் நீர்க்குமிழிகளாய் உருண்டோடக் காத்திருந்தது.

நேரம் நள்ளிரவு பண்ணிரெண்டு மணியாகியிருக்கும். விராந்தவில் செல்வியின் அப்பா சண்முகம் மாஸ்டரின்குறட்டைச்சத்தம் ஆவர்த்தனமாய் கூடிக்குறைந்து அருகில் படுத்திருந்த அவரது மனைவி சிங்காரத்தைக்குழப்பிக்கொண்டிருந்தது. சிங்காரத்துக்கு இது முப்பத்து வருடமாகப் பழகிப்போன ஒன்று, ஆரம்பத்தில் தலையணையால்காதுகளை இறுக்கிக்கொண்டுதான் உறங்குவாள் பிறகு செல்வி பிறந்து ஓரிரு வருடங்களில் அதுவே பழகிவிட்டது.இப்போதெல்லாம் சிங்காரத்துக்கு சண்முகம் மாஸ்டரின் குறட்டை சத்தம் கேட்காமல் தூக்கமே வருவதில்லை.

பக்கத்து வீட்டில் சின்ராசா நன்றாகக் குடித்துவிட்டு பொண்டாட்டியை செம்மையாக திட்டிக்கொண்டிருந்தான்.இடையிடையே அரசியல் வேறு, கெட்டவார்த்தைகளுடன் கலந்து அவனுடைய வாயில் பட்டுத்தெறித்துநாறிக்கொண்டிருந்தது. தெருவில் ஒய்யாரமாய் நின்று இளங்காற்றில் சிலுசிலுத்தவாறு நிலவொளியில்மின்னிக்கொண்டிருந்த வாகை மரத்தின் அடியில் இரண்டு நாய்கள் ஒருமித்து ஊளையிட்டு எங்கோ இருந்து ஊளையிடும்அடுத்ததெரு நாய்க்கு எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருந்தன. நாய்களின் ஊளையுடன் சின்ராசாவின் பச்சையானவார்த்தைகளும் கலந்து அயலவரின் நிம்மதியான உறக்கத்தைக் குழப்பிக்கொண்டிருந்தது.

இத்தனை கூத்துக்களும் உறங்கமுடியாமல் துவன்டுபோய் தரையில் படுத்து கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும் அந்தஇருபத்துமூன்று வயது இளம் பருவ மங்கை செல்வியின் காதுகளுக்கு ஏனோ கேட்டிருக்கவாய்பில்லை. இவைஎல்லாவற்றையும்விட எங்கோ தூரத்தில் இருந்து காற்றோடு கலந்து வந்த அந்தப்பாடலில் தனது ஏக்கங்களையும்,கவலைகளையும் கலக்கவிட்டிருந்தாள். 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்... இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்... தவம்போல் இருந்து யோசிக்கிறேன்... அதை தவனை முறையில் நேசிக்கிறேன்...' புல்லாங்குழல் இசையோடு கலந்துவந்தசுவர்ணலதாவின் குரல் அவளுக்கு ஆறுதலைக்கொடுத்திருக்க வேண்டும்.

கண்களை மெதுவாக மூடித்திறந்தாள். உருண்டோடக் காத்திருந்த ஒற்றைக் கண்ணீர் முத்து அவளது கன்னத்தைவருடிக்கொண்டு நிலத்தில் விழுந்து சிதறியது. அந்தப் புல்லாங்குழல் ராகம் செல்வியின் மனதின் வெடிப்புகளிடையேநிரம்பிக் கசிந்துகொண்டிருந்த அரவிந்தனின் நினைவுகளை வருடிவிட்டுக்கொண்டிருந்தது.

சண்முகம் மாஸ்டருக்கு இரண்டும் பெண் பிள்ளைகள். அதில் மூத்தவள் சுமதி. சுமதி பிறந்து ஆறுவயது வித்தியாசத்தில்பிறந்தவள்தான்; செல்வி. சுமதிக்குக் கல்யாணமாகி சுவிஸில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு பையன்கள், மூத்தவனுக்குஆறுவயது இருக்கும். இளையவனுக்கு நான்குவயது ஆரம்பிக்கிறது.
சண்முகம் மாஸ்டர் ஒரு பிரபல கணித ஆசிரியர். கணிதப்புலி என்றுகூட சிலர் அவரைக் கூறுவார்கள். அவரைத்தெறியாதவர்கள் கிளிநொச்சியில் இல்லை என்று சொல்வது பொருத்தமானது. இருபத்தைந்து வருடம்ஆசிரியராகவும் பத்து வருடம் பிரதிஅதிபராகவும் இருந்து சென்ற வருடம்தான் ஓய்வுபெற்றிருந்தார். ஒழுக்கம், விழுமியம்,நேர்மை இவற்றைப் போதிப்பதற்கு ஒருபோதும் அவர் தவறியதில்லை. மாணவர்களைத்தன்டிப்பதில் தாராளம்காட்டுபவர்.
'அடேய்... பாலா... அடேய், சுடுதண்ணி மாஸ்டர் பின்னால வாராருடா...'
'சட்டம் தன் கடமையைச்செய்ய போவுது பேசாம இரு...' ஒவ்வொரு காலைக்கூட்டத்திலும் மாணவர்களின் கலாய்த்தல்கள்அவருடைய காதுகளுக்குக் கேட்காமல் முணுமுணுத்துக்கொண்டேதான் இருக்கும்.

பள்ளிக்கூடத்தில் மட்டுமின்றி வீட்டிலும் தனது போதனைகள் உயிர்பெற்றிருக்கவேண்டும் என்று நினைப்பவர். அவரதுமுப்பத்தைந்து வருட ஆசிரிய அனுபவத்தில் ஒரு நாள்கூட அதைத் தொழிலாக நினைத்ததில்லை. சேவைமனப்பாங்குடனே பணியாற்றி வந்தார். சிறந்த ஆசிரியர் சேவைக்காக பல விருதுகளாலும் பல மேடைகளில்பொன்னாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டவர். ஆனாலும் இவற்றை பெரும்பாலும் நாகரீகமாக விரும்பாமல் தவிர்த்தேவந்தார்.
ஆசிரியர் சேவையைத்தான்டி அரசியலில் அலாதி பிரியம் இருந்தது அவருக்கு. பாடவேளைகளின் இடையே அரசியலும்பலவேளை போதனைகளாகும். மேற்குலக தத்துவ மரபுகளைப்போதிக்கின்ற பெருந்தொகை நூல்களுக்கு அவரிடத்தில்பெரிய கிராக்கியிருந்தது. மார்க்ஸிஸ சிந்தனைக்கீற்றில் திளைத்திருப்பவர். தான் சார்ந்திருக்கும் சமூகத்தைஉயர்நிலைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்ற மனப்பாங்குடன் தனி மனித சுதந்நிரம், சமூக விடுதலைப்போராட்டம்என்று தீவிர புரட்சிப்போக்கு அரசியலின் எதிரும் புதிருமான பல நுண்ணிய பாதைகளை இலகுவாகப் பிரித்தறிவதில்நிறைவான மதிநுட்பம் அவருக்கு இருந்தது. மறுபுறம் சோசலிச சிந்தனைகளில் மிகப்பெரிய பற்றும் இருந்தது. விடுதலைஇயக்கத்துக்கு அவ்வப்போது ஆலோசனையும் வழங்கி வந்தார். பத்திரிகைகளுக்கு அவர் எழுதும் விமர்சனக்கட்டுரைகளுக்கு போராளிகளிடத்திலும் பொதுமக்களிடத்திலும் பெரிய வரவேற்பு இருந்தது.

இவ்வாரான தந்தையின் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் செல்விக்கும் தொற்றியிருந்தது. தெளிவான பார்வைகளோடுசமூகத்தைப்பார்ப்பதில் அவளுக்குப் பெரிய ஆனந்தம் இருந்தது. ஒரு வேளை அவளுடைய இன்றைய கண்ணீருக்குமறைமுகமாக இவ்வாரான சிந்தனைகளும் காரணமாயிருக்கலாம்.

செல்வியின் அம்மா சிங்காரத்தைப்பற்றி சொல்லவே தேவையில்லை. ஏன்னென்றால் அவளுக்கே அவளைப்பற்றிதெரியாது. அவர்தான்(பெயர் சொல்லக்கூடாது) அவளுக்கு எல்லாம், பொறுப்பான குடும்பப் பெண், அவ்வளவுதான். இதற்குஅப்பால் அவரைத்தான் கேற்க வேண்டும். எதைக்கேட்டாலும் அவளுடைய பதில் 'அவரத்தான் கேக்கனும்...'

கனவுகளின் முடிச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டவள் செல்வி. அரிதாகப் பிறந்த பெண்களுள் இவளும் ஒருத்தி என்றுதான்சொல்லவேண்டும். தோற்றம், உயரம், குரல், ஆடை அணிகலன் என்று எதிலும் குறைவில்லாமல் மிதமற்ற எளிமையோடு,தெளிவான இரவு வானில் பூரண சந்திரன்போல் பிரகாசமான அபிநயங்கள் ஒருங்கே அமையப்பெற்றவள். துறுதுறுவென்றஅவளது பார்வையிலே பல மொழிகள் பேசுவாள் ஆனால் புரிந்து கொள்வதென்றால் கொம்புத்தேனாகத்தான் இருக்கும்.தான் அழகானவள் என்ற இருமாப்போ அகங்காரமோ அவளிடம் துளிகூட இருந்ததில்லை. இப்பொழுது யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி மூன்றாம் வருடத்தில் பலகனவுகளுடன் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளுடையவயதுக்கு மிக நெருக்கமான உணர்வுதான் காதல் என்ற வார்த்தை. ஆனால் அதனுடைய ஆழம் புரிந்து அது அவளைநெருங்கவிடாமல் பக்குவமாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
'ஏய்... செல்வி... என்னடி இந்த லெட்டர்?..'
'லெட்டரா...?, என்ன லெட்டர்?..'
'என்னமோ தெரியாதவள் போல கேக்குற, இது உன்ற பேக்தானே? இதுலதான் இருந்துச்சி.. லவ் லெட்டர்போல... ஏதும்எனக்கிட்ட மறைக்கப்பார்க்குறியோ?..' பல வண்ணங்களில் மங்கலாக ரோஜா பூக்கள் அச்சிடப்பட்டுப் பக்குவமாகமடிக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு நிற காகிதத்தை செல்வியிடம் நீட்டினால் நிலா.
'இதெப்புடி என்ற பேக்ல... நீ சும்மா விளையாடம போவியா...' நிலா செல்வியை முறைக்க ஆரம்பித்தாள்.
'சத்தியமாடி... எனக்கெதுவும் தெரியா...'
'சரி விடு.. முதல் அத யாரு அனுப்பிருக்கான்னு பார்பம்... அவனுக்கு நீ இன்னும் வயசுக்கு வரலங்குற விசயம் தெரியாதுபோல...' நக்கலாய் சிரித்தாள் நிலா.
'போடி... நீயே பார்துக்கோ... இ;ப்போ அத கிழிச்சிப்போடு சேர் வாரவர்..'
இத்தனை பள்ளிக்கூடப்பக்குவங்களும் இப்போது அரவிந்தனால் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டது.

நேற்றுதான் செல்வி பல்கலைக்கழகத்தில் இருந்து வீட்டுக்கு விடுமுறையில் வந்து சேர்ந்திருந்தாள். இந்தமுறை வீட்டுக்குவந்தபோது வளமையான அன்பைவிடக் கொஞ்சம் அதிகமாகப் பொழிந்தது. அப்போதே ஏதோ நடக்கப்போகிறது என்றுபுரிந்து கொண்டாள். ஏற்கனவே அரசல் புரசலாக அவளுடைய காதுகளுக்கு கேட்டிருந்த விடயங்கள்தான் இன்றுபூதாகரமாகப்போகிறது என்று அனுமானித்துக்கொண்டாள். பிரயாணக்களைப்பில் இருந்தவள் கொஞ்சம் தலைசாய்ந்;து விட்டு அம்மாவின் கோப்பிக்காக அடுப்பங்கரைக்கு வந்தாள்.

'செல்வி உனக்கிட்ட சொல்ல மறந்துட்டன், முந்தாநாள் சுமதி கோல் எடுத்திருந்தவ... அடுத்த மாசம் அத்தானுக்கு லீவுஎடுக்க ஏலும் போல, அவயள் இலங்கைக்கு வாராத சொன்னவ...'
'ஏன்னது??.. அடுத்த மாசம் எப்ப வாரன்டு சொன்னவ?.. நம்மள அவளுக்கு நெனப்பு இருக்காமோ?..'
'தெரியலடி... வந்துபோய் மூனு வருசமாவுது, அதக்குபொறவு இப்பதான் வாரமென்டு சொல்லியிருக்கா...அந்தப்பிள்ளையலயாவது பார்த்துக்க கெடக்கல, அப்பாவுக்கும் அவயள் வாரஎன்டு பெரிய ஆருதல்...'
'அதுகள் வந்து உங்களுக்கிட்ட என்னத்த பேசப்போவுதுகள் டஸ்ஷு புஸ்ஷு என்டு திறியும்கள், அப்பாக்கும் அதுகளுக்குநாற்பது நாட்களில் தமிழ் என்டு அதுகள மலையேத்தபோரவர்...' பேசிக்கொண்டே அம்மாவிடமிருந்து கோப்பியை வாங்கிக்குடிக்க ஆரம்பித்தாள்.
'உனக்கு எப்ப கல்யாணம் என்டும் கேட்டவ...'
'இப்ப என்னவாம் அவளுக்கு அவசரம்... என்னய பார்சல் பன்னுரதிலயே குறியா இருக்கிற.. அப்புடியோ சுவிஸ்லயேஇருக்கச்சொல்லு..' மெதுவாகக் கோப்பியை கையில் எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நழுவி அறைக்குள்புகுந்துகொண்டாள்.

மேசையில் பக்கம்மடித்து அடையாளம் வைக்கப்பட்டிருந்த சுஜாதாவின் 'மீண்டும் ஜீனோ' நாவலை ஆர்வமாகப் படிக்கஅரம்பித்துவிட்டாள். சுஜாதாவின் எழுத்துக்களில் செல்விக்கு மிகப்பெரிய ஒரு மரியாதையிருந்தது. அதிலும் விஞ்ஞானபுனைகதைகளில் அவளுக்கு பொதுவான ஈர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. 'என் இனிய எந்திரா' நாவலைபோனவாரம்தான் பார்த்துமுடித்திருந்தாள், அதன் தொடச்சியான இந்த நாவலைப் படிப்பதற்கான ஆவலை அதுதூண்டியிருந்தது.

'வாங்க அண்ணா..' விராந்தவிலிருந்து அம்மாவின் குரல் செல்விக்குக் கேட்டது.
'யாரா இருக்கும்...' செல்வி அனுமானித்துக்கொண்டாள்.
'மாமாதான் வந்திருக்கிறவர்...'
அவளுடைய யூகம் சரியாகத்தான் இருந்தது. ஓங்கி உயர்ந்து கம்பீரமான உடற்கட்டுடன் ஒரு வாட்டசாட்டமான அறுபதுவயது மதிக்கத்தக்க வெளிர்நிறத்தில் ஆடையணிந்த மனிதர் வாசலில் வந்து நின்றிருந்தார். அவருடைய அடர்ந்தமீசையில் ஒழிந்திருந்த ஒருவித திமிர் அவரை இயக்கத்தில் பெரிய பதவியில் இருப்பவர் என்பதைஅடையாளப்படுத்தியது. கேணல் மகாதேவன் என்றால் போராளிகளிடத்தில் பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது.அந்தளவு போராளிகளுக்கு நெருக்கமாக இருந்தவர். இப்பொழுதும்கூட இயக்கத்துக்கு ஆலோசகைகள்வழங்கிக்கொண்டிருப்பவர். சிங்காரத்தின் மூத்த அண்ணன்.

'வாங்கோ அண்ணா..' சிங்காரம் விராந்தவில் இருந்தவாரு வரவேற்றாள்.
'மச்சான் இருக்கிறவரோ?.. செல்வி வந்திருக்கிறதா கேள்விபட்டநான்.. எங்க வந்தவயோ?...'
'ஓம்மண்ணா.. மதியம்தான் வந்தவ.. உள்ளதான் இருக்கிறவ..'
'வங்கோ மச்சான்.. என்ன கொஞ்ஞநாளா ஆள இந்தப்பக்கம் காணவே இல்ல...' சாய்மனையில் படுத்திருந்த சண்முகம்தலையை நிமிர்த்தி குரல் கொடுத்தார்.
'அத என்னத்த சொல்லுர மச்சான்.. தளபதி கூப்பிட்டிருந்தவர்.. இப்ப கொஞ்ஞம் இயக்கத்துக்குள்ளபிரச்சனையாவியிருக்குதானே எல்லாம் முடிச்சிட்டு வர மூனு நாள் ஆவிபோட்டு...' பேசியவாறு சண்முகத்தின் முன்னால்இருந்த கதிரையில் அமர்ந்தார் மகாதேவன்.
'பேச்சுவார்த்தை என்டு அவயள் ஒன்டுக்கும் ஒட்டாதமாறி பேசிகிட்டு நிக்கிறவயள் ஆனா நம்மட ஆக்கள் தவிட்டுக்குஒருத்தன் தண்ணிக்கு ஒருத்தன் என்டு சனத்தை கொழப்பிட்டு இருக்கிறாங்க...' சண்முகம் படபடத்து பேசினார்.
'தளபதியும் பேசிட்டு இருக்கும் போது சொன்னவர் மச்சான்... இந்த பேச்சுவார்த்தையெல்லாம் வேலைக்காக போகுரல...'
'சனத்தை நெனச்சாத்தான் கவலையா இறுக்கு... போர் நிருத்தம் என்றதால கொஞ்ஞம் நிம்மதியா இருக்கினம்'
'அத விடுங்க மச்சான் பொறவு ஆருதலா பேசுவம்... செல்விய வரச்சொல்லுங்கோவன் பார்பம்...'
வெளியில் பேசிக்கொண்டிருந்தது அனைத்தும் செல்வியின் காதுகளுக்கு கேட்கக்கூடியதாகவே இருந்தது. மெதுவாகப்புத்தகத்தை மடித்துவைத்துவைத்துவிட்டு அறையில் இருந்து வெளியில் வந்தாள்.

'என்ன மாமா சுகமா இருக்கிங்களோ?.. அத்தை எப்புடி?.. கமலாவ பார்த்து நெறய நாளா போய்ட்டு...'
'எனக்கென்ன புள்ள நான் நல்லாத்தான் இருக்கிறநான், அத்தையும் கமலாவும் உன்னை பார்க்க வரனும் என்டு நேத்துசொன்னவங்க... உம்மட படிப்பெல்லாம் எப்பமுடியுது?...'
'அடுத்த வருசம் எப்புடியும் முடிஞ்சிடும் மாமா...'
'தினேஸ் விசயம் பத்தி நேத்து தளபதி பேசினவர், கனடாக்கு அடுத்த வருசம் போகவேண்டிவருமாம் அங்கயும் சரியானஆக்கள் இப்பஇல்லை என்றதாலதான் அவன அனுப்ப இருக்கிறவயலாம், அதுக்கு பொறவு இனி அவன் அங்கதான்நம்மடசனத்தோட இருக்கவேண்டி வரும்...' மகாதேவன் சாடைமாடையாக செல்விக்கு விளங்கும் வகையில்சன்முகத்தைப்பார்த்து பேச ஆரம்பித்தார்.
'இன்னம் ஒருவருசம்தானே மச்சான் கல்யாணத்தை முடிச்சிட்டு புள்ள படிக்கட்டும்... படிப்பு முடிஞ்சி ரெண்டுபேரும் கனடாபோய் சந்தோசமா இருக்கட்டும்... என்ன மச்சான் நான் சொல்லுறது?...' மகாதேவன் தொடர்ந்து பேசினார்.

செல்வியின் மனதை மெதுவாகத் தட்டிக்கொண்டிருந்த இடிகள் இப்போது பேரிடிகளாய் கேட்டது. தலையைகுனிந்தகொண்டு மெதுவாக நழுவினால்.
'பிள்ளையின்ட படிப்பு முடிஞ்சி கல்யானத்தைவச்சா நல்லம்மென்டு நான் பார்க்கன், அதான்...' ஒருமாதிரி இழுத்தார்சண்முகம்.
'இல்ல மச்சான் நம்மட நிலமை தெறியும்தானே, எப்ப சண்ட தொடங்குமென்டு தெறியல, காலம் கெட்ட பின்னசூரியநமஸ்காரம் பண்ணக்கூடாது பாருங்கோ...'
'அடுத்தமாசம் சுமதியும் குடும்பத்தோட வார என்டு சொன்னவ, பொறவு இனி எப்ப வருவினமோ தெறியல...' பேசியவாறுகையில் கொண்டுவந்த தேநீர் கோப்பையை மகாதேவனுக்கு கொடுத்தாள் சிங்காரம்.
'ம்;... நீங்க சொல்லுறதும் சரியாத்தான் படுது... சுமதியும் வந்திருக்கக்க குடும்பத்தல நல்லது நடக்கிறது சந்தோசம்தான்...'மகாதேவன் தலையசைத்தவாறு பேசினார்.
'அப்புறம் என்னத்த யோசிக்கிங்க?... எதுக்கும் செல்விகிட்ட ஒரு வார்த்த கேளுங்கோ மச்சான.;..'
'செல்விக்கு இதுல ;இஷ்டம்தான்... சின்னவயசுல இருந்து ஒண்டா பழவினதுகள்தானே... என்ன படிக்கனும் என்டுசொல்லுவா...'
விராந்தவில் இருந்துகொண்டு இரண்டு பெரியவர்கள் செல்விக்கும் சேர்த்து பேசிக்கொண்டே போனார்கள். அறையில்கட்டிலில் இருந்துகொண்டு கேட்டுக்கொண்டிருந்த செல்வியின் மனதில் கட்டப்பட்டிருந்த மனக்கோட்டைகள் சுக்குநூறாகஉடைந்து நொறுங்க காத்திருந்தது அவர்களுக்கு விளங்க வாய்ப்பில்லை.

'எப்படி அப்பாவிடம் நான் அரவிந்தனைக் காதலிக்கிறேன் என்று சொல்லுவேன்??..'
'அப்பா என்மீது எவ்வளவு நம்பிக்கைவைத்திருக்கிரார்... நான் அதை உடைத்துவிடவது நியாயமா??..'
'எல்லாவெற்;றயும் விட அப்பாவிடம் இதைப்பற்றிபேச தனி தைரியம்வேண்டுமே...'
'மாமா என்ன நினைப்பார்?.. தினேஷ; என்னப்பத்தி என்ன நினைப்பார்?.. அவருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்குமோ?..'
செல்வியின் மனதில் கேள்விகள் நிரம்பிவழிந்து அவளை வதைத்துக்கொண்டிருந்தது.
'செல்வி... இங்ககொஞ்சம் வாம்மா..' விராந்தவில் இருந்து சண்முகம் அழைத்தார் .
அறையில் இருந்து வெளியில் வந்து நிலையில்சாய்ந்தவாறு துருத்திக்கொண்டு நின்றாள். மாமா எல்லாம்பேசிமுடித்துவிட்டு போயிருந்தார்.
'என்னம்மா சொல்லுற?.. உணக்கு தினேஷ கட்டிக்க சம்மதம்தானே, உணக்கே நல்லாத்தெறியும் மாமா வழிய வந்துகேக்குறவர்... தினேஷும் நல்ல பையன்தான்...' அசட்டுத்தனமாகவே கேட்டார் சண்முகம்.
'இல்லப்பா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல... நான் அரவிந் எங்குற பையன லவ் பன்றன்' என்றுதான் சொல்லநினைத்தாள், ஆனால் அப்பாவிடம் முகத்திலே சொல்ல துளியளவு தைரியம்கூட அவளுக்கு வரவில்லை. அவளது கைகள்நடுங்க ஆரம்பித்துவிட்டது.
'உங்க இஷ்டம்தான்; அப்பா...' ஏதோ உளறினாள். தொண்டை அடைத்துக்கொண்டது. மீண்டும் கட்டிலில் விழுந்தாள்.

நெஞ்சில் இனம்புரியாத ஒரு இடத்தில் ஒருவிதமான பாரம் புரண்டு வலியைக்கொடுத்தது. அவளது இயலாமையை என்னிமனம் வருந்தினாள்.
'ஐயோ... எல்லாத்தையும் சொல்லித் தொலைத்திருக்கலாமேடி... லவ் பன்னக்க எங்க போச்சிஉன்ட பயம்?;... எல்லாம்தெரிஞ்சிதானே லவ் பண்ணின...'
'இவ்வளவு சீக்கிரம் அவசரப்படுவாங்கன்னு யாரு நெனச்சா?...'
'அரவிந்தன் இல்லாம ஒரு வாழ்கையா???... செத்துடுவன்...'
'நிச்சயமா அப்பா அரவிந்த ஏத்துக்கமாட்டார்...'அவளுக்குள்ளேயே பல உருவங்கள் அவளைப் போட்டுவாங்கின.

மணிக்கூட்டின் முற்கள் நகர்தது அவளுக்குப் புலப்படவில்லை. கட்டிலில் படுத்திருந்தவள் இப்போது தரையில்படுத்திருக்கிறாள். இரவு சாப்பிடக்கூட இல்லை. பல மணிநேரங்கள் கடந்த பின்பு அவளுக்கு இப்போதுதான் காற்றலையில்வந்த அந்தப் புல்லாங்குழல் இசையோடு கலந்த பாடல் ஆறுதல் கொடுத்துக்கொண்டிருந்தது. அவளுடைய பரிதவிப்பின் எங்கோ ஒரு நிமிடத்தில் அவளுடைய கண்கள் அவளையறியாமல் மூடிக்கொண்டது.

விழித்த போது தினேஸ் அவளுடைய கழுத்தில் தாலி கட்டி முடித்திருந்தான்.

பிரபஞ்சத்தின் மீண்டுமொரு புனிதமான காலைப்பொழுது! 'உம்'மென்று அமைதியாய் இருந்த பூமியின் பரப்பெங்கும் ஒருமெல்லிசை பனிக்காற்றோடு கலந்து புணர்ந்துகொண்டிருந்தது. பனித்துளிகளில் ஒற்றிஎடுக்கப்பட்ட மல்லிகையின்இதழ்களை வண்டுகள் மிருதுவான ஸ்பரிசத்துடன் முத்தமிட்டுக்கொண்டிருந்தன. செல்வி காபியும் கையுமாக தினேஸின்முத்தத்துக்காகக் காத்திருந்தாள்.

"ஆயிரம் அரிவாள்கள் அறுத்து வீழ்த்தியபோதும், தலை நிமிரமாட்டாள் நெல் மகள்"

எழுதியவர் : எம். எப். எம். றிகாஸ் (9-Feb-16, 11:43 am)
சேர்த்தது : றிகாஸ்
பார்வை : 261

மேலே