ஞான வாசிட்டம் - 6

இதுவரை :
உலகியல் துன்பங்களான செல்வம், ஆயுள், அகங்காரம், மனம் பற்றிய இராமனின் சிந்தனைகள் பார்த்தோம்..இனி..ஆசை பற்றி இராமன் சொல்வதை இந்த பாகத்தில் காண்போம்:
5. ஆசை:
காரிருள் மோகம்..மயக்கம்
செயலில் அமைதி இல்லா ஆசை- இரவு
வானம் உணர்வு ..
காமமும் சினமும்
விளையாடும் கோட்டான்கள்!
வீணையின் நரம்பினை
எலி அறுப்பதென..
மாந்தர்தம் நற்பண்புகளை
ஆசை அறுத்தெறியும்
ஆன்ம ஞானம் ..
பெறவிழையா நாங்கள்
ஆசையெனும் வலைக்குள்
சிக்கிய பேதமைப் பறவைகள் !
ஆசைத்தீ வெந்திடச் செய்யும்
குளிர்ந்த நீரிலே மூழ்கினாலும்
அறிவு குளிர்ச்சியுறாது
கும்மிருட்டில் செல்லும்
தீரர்களையும் அஞ்ச வைக்கும்
நல்லறிவுக் கண்ணை மூடிவிடும்
ஆசை..தன்னை
ஏறெடுத்து பார்ப்பவர் எவரும்
இல்லையென்றாலும்..
காசு பணம் வேண்டி
கிழக் கணிகையையும்
எல்லோர் பின்னாலும்
போக வைக்கும்!
முதுமையில் நாட்டியம்
முடியாமல் ஆடிடும்
முதியவள் போல் ஆசை நமை
வருத்தியே பார்க்கும்
கிடைத்தற்கு அரியதை எல்லாம்
நாட வைக்கும்
அது கிட்டிய பின்னும்
இன்னும் அதிகம் கேட்டு
ஏங்கிட வைக்கும்
குரங்கினைப் போல் ஆசை
நில்லாது ஓரிடத்தில்!
நந்தவனத்தில் மதுவுண்டு
களித்த வண்டு
சுற்றிப் பறந்து அலைவது போல்
ஆசை..
கணப்பொழுதில்
ஆகாயம்..பாதாளம்..
எட்டுத்திக்கும்
சுற்றி வரும் !
ஆசை..
பிறவி பெருந்துன்பம்
பெற்றிட வழிவகுக்கும்..
ஆசை நோய்க்கு ஔடதம்
சிந்தை அறல் - வழி நின்றால்
இடர் எதுவும் விலகும்!
ஆசை..
இரும்பின் பொறி
வயிரத்தின்..
வாள்முனையின்
கூர் போன்றதாம்
இமயத்தின் உயரமென
திகழ்பவரை
அறிவுடை ஆன்றோரை..
சான்றோரை..
தீரர்களை .. வீரர்களை
மற்றுமெல்லோரையுமே
தூளாக்கி விடும்!