யட்சினி பூஜை - தொடர் -பாகம் 5

.............................................................................................................................................................................................

முன்கதைச் சுருக்கம்:

செல்வியின் குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்கிறான் கோடங்கி மாசானம். செல்வியை ஏமாற்றி குழந்தையையும் வாங்கி விடுகிறான். நரபலிக்காக தோண்டிய குழிக்கருகில் மாவுக்கால் கிடைக்கிறது....

..........................................................................................................................................................................................

குழிக்குப் பக்கத்தில் மாவுக்கால் என்றால்.. குழியில் கிடப்பது..

அதுவும் மாவுப் பொம்மையாகத்தான் இருக்க வேண்டும்...! ! ! !

மாசானத்துக்கு உண்மை புரிந்த மறு கணத்தில் அவன் தலையும் சுரீரென்று வலித்தது... மூக்கில் ரத்தம் சொட்டியது..! ! !

அன்றைக்கு மாடசாமி குளக்கரையில் அவனும், குப்புராஜனும் பேசிக் கொண்டிருந்ததை தியேட்டரம்மாள் கேட்டிருக்க வேண்டும்.. குழந்தையைக் காப்பாற்ற, சமயம் பார்த்து அவள் நடித்திருக்கிறாள்.. ஒரு நாள் முழுக்க குழந்தை அவள் கையில் இருந்திருக்கிறது..! குழந்தையை வேறிடம் அனுப்பி விட்டு மாவுப் பொம்மையை எடுத்து வந்திருக்கிறாள்.. அதை குழியில் போடும் சமயம் தானே குழந்தை போல் அழுதிருக்கிறாள்..! !

குழந்தை உயிரோடிருக்கிறது என்றால் எங்கிருக்கும் ? ? குழந்தையைக் காட்டித்தானே மாவுப் பொம்மை செய்திருப்பாள்?

காட்டுப்புதூர் சூரியநாராயணா தெருவில் மாவுப் பொம்மை செய்கிற குடும்பங்கள் நாலைந்து இருக்கும்.. அங்கு போய்ப் பார்த்தால் தெரிந்து விடும்...!

உடனே கிளம்பினான்..!

காட்டுப்புதூர் சூரியநாராயணா தெரு..

ஒவ்வொரு வீட்டிலும் குடுகுடுப்பை அடித்துக் கொண்டே குழந்தைகளுக்கு விபூதி போட்டுக் கொண்டு வந்தான் மாசானம்..

கூழி செல்வேந்திரன் வீட்டுக்கு வந்தபோது..

அவன் மனைவி ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை எடுத்து வந்தாள்.. துணி விலக்கி முகம் பார்த்தான் மாசானம்..

செல்வியின் குழந்தை.. ! ! !

விபூதி போட்ட கையோடு, எட்டு வைத்து திரும்புவதற்குள் கை கால் இழுத்தது. மாசானம் தரையில் விழுந்தான்..

விழுந்த இடத்தில் குப்பைத்தொட்டி..!

அப்படியே படுத்துக் கிடந்தான்..!

காலையில் யாரோ அவனை இழுத்து வேப்ப மரத்தடியில் படுக்க வைத்தனர். ஒரு லோட்டா டீயை யாரோ வாயில் ஊற்றினர்.

பதினோரு மணிக்கு அந்த வீட்டுக்கு ஒரு கார் வந்தது.. அதிலிருந்து இறங்கிய வசதியான தம்பதியர் அந்தக் குழந்தையை வாங்கிக்கொண்டு காரில் விரைவதை இரு கண்ணால் பார்த்தான் மாசானம்..

இதுவும் அந்த தியேட்டரம்மாள் ஏற்பாடாக இருக்க வேண்டும்.. ! அம்மாடியோவ்...! பார்க்க மொச மொசவென்று முயல்குட்டி மாதிரி இருந்தாலும் தியேட்டரம்மா லேசுப்பட்டவள் இல்லை...! ! ! கில்லாடியோ கில்லாடி..! ! ! மனிதத் தன்மையுள்ள கில்லாடி..! ! ஆனால் இதெல்லாம் ஊர் உலகத்துக்குத் தெரிய வராதே..! ! அதெப்படி அந்தப் பெண் செல்வி, முத்தாலம்மனிடம் வேண்டியது தியேட்டரம்மா மூலம் நடக்கிறது ? ? ? ? ஆச்சரியத்தில் அப்படியே அவன் விழிகள் விரிந்தன.. விரிந்த விழிகள் நிலை குத்தின.. வாய் குளறியது.. “ முத் முத்..முத்தாலம்ம்ம்ம்... மா...! ! ! ”

சில வருடங்கள் கடந்தன.

காலியிடத்தில் இன்னமும் கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது.. குப்புராஜனின் மனைவி கணவனிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள்.. “ ஏங்க, லேடீஸ் ஹாஸ்டல் கட்டினீங்க.. உடனே அதை இடிச்சிட்டு பாலி டெக்னிக் காலேஜா மாத்தினீங்க.. அதையாவது அப்படியே வைக்கலாமில்ல? இப்ப ஷாப்பிங் காம்ப்ளக்ஸா மாத்தணும்னு ஒத்த கால்ல நிக்கிறீங்க.. இது உங்களுக்கே நல்லா இருக்கா..? ? ? ”

“ எது லாபமோ அதத்தானே செய்யணும்? ” குப்புராஜன் முனகலாகச் சொன்னார்..! “ பொம்பளைக்கு என்ன தெரியும்? எதுதான் முடியும்? ”

மாமியார் இறந்தபின் ஆயா வேலைக்காக அந்த வக்கீல் தம்பதிகளின் பங்களாவில் நுழைந்த செல்வியை நிறையவே பிடித்துப் போனது வக்கீலம்மாவுக்கு..!

“ குழந்தை வேணும்னு கேட்டேன்.. குழந்தை வந்துட்டான்.. என் தொழிலு அப்படி.. கவனிக்க நேரமில்ல.. இந்தக் குழந்தைய உன் குழந்தையா நினைச்சு வளர்க்கணும்.. ” இவ்வாறு செல்வியிடம் கூறிய வக்கீலம்மாள் குழந்தையிடம் திரும்பினாள்.. “ இங்க பாரு மனோகர்..! உனக்கு இன்னொரு அம்மா..! ! ! ”

நன்கு புஷ்டியாயிருந்த அந்த மூன்று வயதுக் குழந்தையை பார்த்த மாத்திரத்தில் அடையாளம் தெரிந்தது செல்விக்கு..! அவள் குழந்தை..! ! ! !

“ ஹாய்..! ப் ப் முது அம்மா..! ” மழலை பேசிக் கொண்டே ஓடி வந்த குழந்தையை கண்ணீர் மல்கக் கட்டியணைத்தாள் செல்வி..! ! அவள் வாய் முணுமுணுத்தது..

“ முத் முத்..முத்தாலம்ம்ம்ம்... மா..! ! ! ”


முற்றும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (16-Mar-16, 12:32 pm)
பார்வை : 134

மேலே