இனிய கனவொன்று

நிலவில்லா வானம்
நட்சத்திரங்களைக்
கிளறிக் கொண்டிருந்தது

யாருமற்ற
பரிச்சயமில்லாச்
சாலையில்
நீள்கிறதென் பயணம்

எனக்கே என்னை
அருவமென்று
அறிமுகம் செய்கிறது
சுவர்க் கோழிகள்

பிளந்த வாயும்
கூறிய பற்களுமாய்
கோர முகம் கொண்ட
நாயொன்று
துறத்த
தரிகெட்டு ஓடுகிறேன்

நகர்ந்ததாய்த்
தோன்றவில்லை
ஒரு அடிகூட

அஞ்சித் தரை உதைத்து
ஏகுகிறேன் விண்ணில்

பறப்பதென்பது
எவ்வளவு
இலகுவாக இருக்கிறது !

விரிந்த வானத்தில்
சாலைகள் இல்லை
நாய்களும் இல்லை

சுமைச் சிறகுகளையும்
உதிர்த்து
இரவோடு நீள்கிறது
என்
இனிய கனவொன்று ...

எழுதியவர் : முகிலன் (16-Mar-16, 8:34 pm)
சேர்த்தது : முகிலன்
பார்வை : 90

மேலே