பென்சில்
நானும் மெழுகுவர்த்தியும்
நெருங்கிய நண்பர்கள்
'தியாகம் மட்டுமே
நம் வாழ்க்கை ' என
நாங்கள் இருவரும்
சத்தியப் பிரமாணம்
எடுத்துக் கொண்டோம்
நாங்கள் பயன்படுத்தப்படும்
ஒவ்வொரு மைக்ரோ வினாடியிலும்
கொண்ட கொள்கையில்
உறுதியாய் இருந்தோம்
அவன்,
புற இருளைப் போக்கினான்
நான்,
அக இருளை அகற்றினேன்
அவன்,
கண்ணீர் விட்டே
கரைந்துப் போனான்!
நான்,
உறுப்புகள் இழந்தே
உருவம் குறைந்தேன் !
கண்ணீராய் வெளிப்பட்டதால்
அவன் தியாகம்
இன்று 'கவிதை'யில்!
மௌனமாய் வெளிப்பட்டதால்
என் தியாகம்
இன்று 'குப்பை'யில் !
என் அங்கங்கள்
சிதைந்து ,
நான் குப்பையோடு
குப்பையாய்க் கலந்து ,
துடைப்பான்களால்
தூக்கி எறியப்பட்டு,
செருப்புக் கால்களால்
மிதித்து நசுக்கப்பட்டாலும் ,
அந்தப் பிஞ்சுக் கரங்கள்
தங்கள் நோட்டில்
எழுதிய முதல் எழுத்தை
எழுதியவன் 'நான்'
என்ற கர்வத்தில்
என் பொக்கை வாயில்
தவழும் புன்னகையோடு
என் உயிர்
இனிதே பிரியும் .
அனைத்துக் கவிஞர்களுக்கும் உலக கவிதை தின நல்வாழ்த்துக்கள் .
.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
