காதல் கொலை

காதல் கொலை..!
================
அன்றில் பறவைகளாய்
அழகான காதல்
அன்றைய நாட்களில்...
துணை மடிந்தால்
உடன் மடிந்த உயிர்க் காதல்..!
அம்பிகாபதியும் அமராவதியும்,
லைலாவும் மஜ்னுவும்,
ரோமியோவும் ஜூலியட்டும்
பெயர்களில் கூட பிரியாமல்
இன்னமும் ஒட்டிக்கொண்டுதான்..
துணைபோன துயரில்
உயிர்த் தொலைத்த உத்தமக் காதல்..!
பார்த்தவுடன் காதல்
மோக விளையாட்டுக்கள்
ஆசை தீர்ந்தவுடன் அறுபடும் காதல்
கருவினில் உயிரைக் கொடுத்து
காதலிக்கோ கண்ணீர் முகவரியாய்
உடலை விட்டுவிட்டு
உயிர் பறித்துச் செல்லும்
முகவரி மாற்றும் மோசடிக் காதல்..!
"எங்கிருந்தாலும் வாழ்க"
ஏமாற்றத்திலும் வாழ்த்திய காதல்
என்றோ மலையேறிவிட்டது..
"எங்கே அவள்..?"
காணாமல் போனவளை
தேடிப்பிடித்து அமிலத்தில் அபிஷேகம் நடத்தி
சின்னாப்பின்னமாக்கும்
வெறிபிடித்த காதல்..!
பலவீனம் மறைத்த காதலில்
உண்மை ஒப்பனைகள் அழகாய்த்தான்..
திருமணத்தின் பின்னாளில்
சாயம் வெளுத்த உண்மைகளில்
சாதிச் சண்டையைவிட வீதிச் சண்டைகள்
ஏராளமாய்... தாராளமாய்...!
வெற்றி யாருக்கென்ற போட்டிகளில்
தீர்ப்புக்காய் வழக்காடு மன்றங்கள்
சாணை பிடித்த பளபளப்பான
விவாகரத்து அரிவாள்
பரிசளிப்பு நாளொன்றில்
மகிழ்ச்சி ஒருவருக்கும் இருப்பதாய்
தெரியவில்லை..!
வெட்டி கூறுபோடுகிறது அரிவாள்
உறவுகளை மட்டுமல்ல... காதலையும்தான்
சொந்தச் செலவில் சூனியக் காதல்..!
சாதி சதி செய்து சில காதல் கொலைகள்
வசதி சதி செய்து சில காதல் கொலைகள்..!
கள்ளக் காதல், நல்லக் காதல்
பார்த்துக் காதல், பார்க்காமல் காதல்
முகநூல் காதல், வாட்ஸ் அப் காதல்
காலை, மாலை, இரவு முப்பொழுது
மூன்று பேர்களுடன்
பொழுதுபோக்கு காதல் எல்லாமே
முழக் கயிற்றிலோ, தண்டவாளத்திலோ
விடத்திலோ இன்னும் பல வழிகளிலோ
உயிருக்கு முற்றும் போடுகிறது
ஏமாற்றங்களில்...!
முடிவைத் தேடுகிறது
தற்கொலைகளில்..!
------------------------------------------------------------------
குறிப்பு: நேற்று (26-03-16) இலக்கிய சோலை
நடத்திய கவி அரங்கில் வாசித்த கவிதை.
தலைப்பினை அளித்த இலக்கியச் சோலை
பத்திரிக்கை ஆசிரியர் திரு சோலைத்
தமிழினியன் அவர்களுக்கு என் நன்றி..!
------------------------------------------------------------------