கண்ணீர்க் கதைகள்

ஆயிரம் ஆசைகளை இறைவன்
என்னுள் புதைத்து
இப்பூமிக்கு அனுப்பினான்!!
பால்க்குடி மாறா நாள்வரை
அன்னையின் கதகதப்பில்
அன்பினை பெற்றேன்!!
அறிந்தும் அறியா பருவமது
பெற்றவளின் ஓலம்
இரவுதோறும் கேட்டேன்!!
மதுமயக்கம் தந்தையின் கண்கட்டியது
பேதை நானும்
வலி அறிந்தேன்!!
பருவக்காலம் திருமணமும் கைக்கூடியது
பெண்மை நானும்
கனவுகளில் மிதந்தேன்!!
அறியாமைக் கொண்ட மனதிற்கு
இருதினங்களில் புரிந்தது
காட்சிகள் மாறவில்லை!!
அன்று எனதன்பு அன்னை
இன்று நான்
கதைகள் சிதையவில்லை!!
வலியென்றே வாழ்க்கை போனது
பொறுத்தேன் நான்
வடுக்கள் மறையவில்லை!!
சில மாதங்களே வாழ்க்கையென்றானது
நெற்றியும் வெற்றானது
தளிக்கூடக் கண்ணீரில்லை!!!