முதிர் கன்னி

எப்போது
விடியும் என
காத்திருக்கும் நாட்கள்
இப்போதெல்லாம்
அதிகம்
சலித்து விட்டது



சுவர்க் கோழிகளும்
சில்லூறுகளும்
இரண்டாம் ஜாம நிலவும்
நட்சத்திரங்களும் மட்டுமே
எதிர்பார்ப்புகளில்
எஞ்சப்பட்ட தோழமை என
மிஞ்சி நிற்கிறது



பகலடிக்கும் வெப்பத்திற்கு
இரவு நடத்தும்
பரிதாப மழையைப் போல
இப்போது
அப்போது என
நகர்வுகள் சில
விடியல்களுக்கு
ஒத்திகை நடத்துகிறது



இராணுவப் போராளியின்
கண்ணீர் நனைந்த
கடிதங்கள் கடைசிவரை
தலையணையடியில்
உறங்கிக் கிடப்பதைப் போலவே
இந்த விடியா விடியல்களுக்கு
மனது
பழக்கப்பட்டு விட்டது



இதோ
எப்போதும் போலவே
விடியலுக்கான
அடுத்த ஒத்திகை..



இதுவும்
நிரந்தரமில்லை என
ஏமாறும் மனதிற்கு
புரிகிறது


இருந்தாலும்
இந்த
கரு மேகங்கள்
சூரியனை எதிர்பார்த்தபடி
ஒரு வசந்தத்தினை வரவேற்றிட
காத்து நிற்கின்றன....

எழுதியவர் : Shafiya (18-Apr-16, 1:14 am)
Tanglish : mudhir kanni
பார்வை : 156

மேலே