என்னவள் கூந்தலிலே
நொண்டிச்சிந்து !
என்னவள் கூந்தலிலே - நித
...மேறித்தி ரிந்துற வாடிடவே
இன்னுயிர்ப் பூக்களெலாம் - தனி
...இச்சைகொண் டேங்கிடும் பாரினிலே
பொன்மகள் பூங்கழலில் - எழில்
...போதைநி லையிலி ருந்திடவே
என்கவிச் சொற்களெல்லாம் - தவம்
...ஏற்றிக்கி டக்குது தீயினிலே !
கண்ணிமைக் காவலிலே - சிறை
...காத்துக்கி டந்திட என்னுயிரும்
தெண்டனிட் டேங்குதுவே - வழி
...தேடியே கண்களும் ஓடுதுவே !
பெண்ணவள் நெஞ்சத்திலே - நகைப்
...பேழையைப் போலுறும் புன்னகையில்
மொண்டுகு ளித்திடவே - உயிர்
...மொத்தமு மேங்கித் திரியுதுவே !
-விவேக்பாரதி