மனிதநேயம்

மனிதநேயம்
முன்னுரை:
மனிதன் - இது வெறும் வார்த்தை அல்ல. இயற்கையின் உச்சகட்ட படைப்பு. பல கோடி ஆண்டு பரிணாம வளர்ச்சியின் விளைவால் இயற்கைக்குக் கிடைத்த மாபெரும் பரிசு மனிதன் ஆவான். வரம்பிலா வலிமை பெற்ற மனிதன் மனிதநேயம் எனும் மகுடத்தை சூடினால் மட்டுமே வைரமாய் மிளிர்கிறான்.

விளக்கம்:
மனிதநேயம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது நம்மில் பலரும் இதுவரை நேரில் கூட கண்டிராத அன்னை தெரசாவும் நெல்சன் மண்டேலாவும் ஹெலன் கெல்லரும் போன்ற சான்றோர்கள் தான். மனிதநேயம் என்பது என்ன இவர்களின் கையடக்கப் பொருளா? பிறகு ஏன் இவர்கள் பளிச்சென்ற உதாரணமாகத் தோன்றவேண்டும். ஏனெனில் இவர்கள் "தனக்குப் போகத் தான் தானமும் தருமமும்" என்ற தகைமையைத் தாண்டி தன் வாழ்வை முழுவதுமாக சமூகப் பணிகளுக்காக அர்பணித்துக் கொண்டது தான். நாம் யாரும் அவ்வளவு உயரத்திற்குக் கூட செல்ல வேண்டியதில்லை. நம் கண் முன்னே நடக்கும் அன்றாட நிகழ்வுகளில் நம் உதவி தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற அளவு அதனைச் செய்யலாமே!

வளர்ந்து வரும் மனிதநேயம்:
மனிதநேயம் என்பது மனிதர் மனிதர் மேல் மட்டுமே கொண்டுள்ள நேயம் என்றால் அந்த வகையில் நாம் இன்று அதிக முன்னேற்றம் அடைந்துவிட்டோம் என்பதே உண்மை. முன்னாட்களில் எல்லாம் தன் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் மட்டுமே கொண்டாடி வந்த தங்கள் பிறந்தநாள் விழாக்களை, இன்று நடுத்தர குடும்பத்து மக்கள் கூட ஆதரவற்றோர் விடுதிகளில் உள்ள குழந்தைகளோடு கொண்டாடவே விழைகிறார்கள். ஆனால் மனிதநேயம் என்பது மனிதன் மனிதன் மேல் மட்டும் கொள்ளும் நேயம் என்றல்லாமல் சற்றே விரிந்த பார்வையோடு இயற்கையின் மாபெரும் படைப்பான மனிதன் தன்னைப் படைத்த இயற்கை முதல் தான் படைத்த விஞ்ஞானம் ஈறாக அனைத்தினிடமும் காட்டுவதே ஆகும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு நோக்குங்கால் மனித நேயத்தை பல கூறுகளாகக் காணலாம். அவற்றுள் இன்றைய சூழ்நிலையைப் பொருத்தமட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பனவற்றை முன்வைபோமேயனால் அவை,
* இயற்கையின் பால் மனிதன் கொள்ளும் மனிதநேயம்
* அரசு தன் மக்களின் பால் காட்டும் மனிதநேயம்
* தனி மனிதன் மற்றொரு மனிதனின் பால் கொள்ளும் நேயம்

இயற்கையின் பால் மனிதன் கொள்ளும் மனிதநேயம்:
மனிதன் என்பவன் இயற்கை தாயின் படைப்புகளின் உச்ச வரம்பு. அவன் இயற்கை தன்னை காப்பதற்காக பெற்ற தலைமகன். பெற்ற தாயிடமே நேயம் பாராட்டாத இன்றைய தலைமுறையினருக்கு இயற்கை தாயைப் பற்றி என்ன கவலை இருக்க முடியும்? விஞ்ஞான வளர்ச்சியால் நாம் வலது கையில் அலைபேசியும் இடது கையில் லேப்டாப்புமாகத் நமக்கு நாமே கலியுக கல்கி அவதாரமாகத் தோன்றுகிறோம். பாட புத்தகம் எங்கோ மூலையில் கிடக்க மூளையை ஈர்க்கிறது முகபுத்தகம் (FB). கதிர்வீசுகளால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தும் சொகுசைக் கண்டு பழகிவிட்ட நமக்கு செல் பேசியை கீழே வைக்க மனம் வருவதில்லை. வீட்டுக்கு வீடு wi -fi கனேக்சென். தொழில் போட்டிக்காக நிறுவனங்கள் இலவச சிம் கார்டு கொடுப்பதும் அதிலே காசும் போட்டு கொடுப்பதும், இலவசம் என்றால் இரண்டாக கொடு என்று முந்திச் சென்று வாங்கும் மக்களும், 24 மணி நேரமும் பேசணும் அதுவும் ஒசுலே பேசணும் என்ற அவர்களின் கனவு நிறைவேறிவிட்டதாக நினைக்கும் மக்கள், இது தனக்கு தானே தேடிக்கொள்ளும் அழிவு என்பதை நினைக்கத் தவறியதே வேதனைக்கு உள்ளாக்குகிறது. கதிர்வீசுகளால் ஏற்படும் அபாயங்களை அறிந்தும் நாம் ஏன் தடுக்க முடியாவிடினும் குறைக்க முற்படவில்லை? சரி அவற்றால் ஏற்படும் ஆதாயங்களை அடைகிறோம், எனவே அபாயங்களுக்கும் உள்ளகிறோம். பாவம் உலகில் நம்மோடு பிறந்த நம்மை போன்றே வாழ்வதற்கான அனைத்து உரிமைகைளும் பெற்ற பிற விலங்குகளும் பறவைகளும் மரங்களும் எந்த பாவத்திற்காக இந்த பழிகளை சுமக்க வேண்டும்? இதற்கு இணையான இன்னொரு வளர்ச்சி பிளாஸ்டிக், பொம்மையில் தொடங்கி பை எனும் பேயாகி இன்று அரிசி வரை முன்னேறிவிட்டது. நெஞ்சை நெகிழ வைக்கும் நெகிழியின் வளர்ச்சி. பாதை சீரமைப்பு என்று பரவலாக தார் ரோடும் சிமெண்ட் சாலைகளும் அமைத்து கொண்டோம். அது சரி. எஞ்சிய பகுதியிலும் பிளாஸ்டிக் குப்பையை பரப்பி பூமித் தாயின் தாகம் தணிக்க தவறி அவளை மூர்ச்சை ஆக்கிவிட்டோம். விரைவில் அவள் மூச்சையும் அடக்கி விடுவோம். என்னே நமது அறியாமையின் முன்னேற்றம். அடடா அதிவேகம்! காலகாலமாய் காய்த்து கொண்டிருந்த உயர் பனைமரங்கள் பாவம் எந்த வேண்டுதலுக்காக மொட்டை அடித்துக் கொண்டதோ தெரியவில்லை? எல்லாவற்றிகும் மேலாக நம் பெட்ரோல் டீசல் வாகனங்கள் செய்யும் கொடுமைகள் சொல்லி மாளாது. முடிந்த வரை நடந்து செல்வதும், சிறுது தூரமானால் மிதிவண்டியில் செல்வதும், இயன்ற வரை பொது போக்குவரத்தை பயன்படுத்துவதும் கூட மனிதன் இயற்கையிடம் காட்டும் மாபெரும் நேயம் தான்.

அரசு தன் மக்களின் பால் காட்டும் மனிதநேயம்:
ஒரே இந்தியா தான், வடக்கில் பனி மழை கொட்டுவதும் ஆற்று வெள்ளத்தில் உயிர்கள் மடிவதும், தெற்கில் வறட்சியால் பசியால் நீர் ஆதாரமின்றி உயிர்கள் மடிவதும் ஒரே இந்தியாவில் தான் நிகழ்கிறது. அப்துல் கலாம் அவர்களின் கனவும், C .R . காமராஜ் (பொறியாளர்) அவர்களின் திட்டமுமான , அதிதிறன் நீர்வழிப் பாதையை உருவாக்குவதன் மூலம் மக்களின், மன்னிக்கவும், உரியினங்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். ஐயோ குடிபழக்கம் தவறானது என்று, என்றோ ஒரு நாள் வீட்டிற்குத் தெரியாமல் மது அருந்திவிட்டு வாசல் புகுந்தால் அம்மா வசை பாடுவாள் என்றஞ்சி கொள்ளை வழியே உள்ளே புகுந்து வாசம் வெளிவராமல் குப்புறப் படுத்துத் தூங்கிய காலம் போய், வருவாயின் பாதியை, பாதை தெரியாமல் தள்ளாடும் அளவிற்கு போதையை ஏற்றிக் கொண்டு, ஏனப்பா குடித்தாயா என்று அதட்டிக் கேட்டால், அம்மாவை மிரட்டிச் சென்று மல்லாந்து கிடக்கிறான் இருபது வயது நிரம்பாத இளங்குடிமகன். இந்தியாவை உயர்த்துவான் என கனவுகள் காணப்பட்டுள்ள இளம் குடிமகன். தலைமுறை மாற்றம் இப்படி ஒரு தள்ளாட்டத்தையும் நம்முன் வைத்துள்ளது. மாற்றம் அல்ல இது, அவனுக்கு பின்னாளில் கிடைக்கும் ஏமாற்றம். தவறு என்று அஞ்சப்பட்ட ஒரு நிகழ்வு தலைவிரித்து ஆடுகிறது என்றால், தட்டிக் கேட்கும் இடத்தில உள்ள அதிகாரிகளும், அரசும், தம் மக்கள் மேல் காட்ட வேண்டிய மனிதநேயத்தை மறந்து போனதாகத் தானே அர்த்தம். "எரிவதை வெளியே இழுத்தால் கொதிப்பது தானே அடங்கிவிடும்" என்ற நம் ஆன்றோர்களின் பழமொழிக்கிணங்க தயாரிப்பை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரம் பெற்றோர், அதன் அவசியத்தை உணர்ந்தும் அவசரபடாமல் ஏனோ இவ்வளவு காலம் காத்திருகிறார்கள்?! இதற்கு முன் உதாரணமாக டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி தன் மக்கள் மேல் கொண்ட நேயம் தான் விபச்சாரம் விரிவடைந்திருந்த நாட்களிலும் தேவதாசிகள் ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற அடிகோலியது.

தனி மனிதன் மற்றொரு மனிதனின் பால் கொள்ளும் நேயம்:
இந்த உலகம் பல உயிர்களின் தோட்டம். மனித பூக்கள் அதில் ஏராளம். பார்த்து ரசிப்பது ஒரு இனம். பறித்து சூடுவது ஒரு இனம். மலரை பார்பதற்கு உரிமம் தேவையில்லை. பறிப்பதற்கு அந்தச் செடியின் சொந்தக் காரராய், அதன் பராமரிப்பாலராய், பாதுகாவலராய் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இல்லாவிட்டால் அதன் பெயர் திருட்டு என்றாகிறது. மாற்றான் மனைவிக்கு மல்லிகை சூடி தன் மஞ்சத்தில் ஆழ்த்தும் ஆற்றல் படைத்த ஆண்களும், அதுத்த வீட்டு ஆணை அழகன் என்று வியந்து தன் அந்தரங்க அன்பைப் பகிரும் பண்பாடு மறந்த பெண்களும், பலவந்தவமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறு மொட்டுகளும் இதே தோட்டத்தில் தான் உள்ளன. குடும்பம்- ஓர் அழகான அமைப்பு. நம்மோடு முடிவதில்லை உலகம். தலைமுறைகள் தொடரும். அவற்றைப் பசுமையாக தழையச் செய்வது நம் கடமை. நம் குழந்தைகளே நாளைய சமூகம். அவர்களுக்கு நாம் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். மற்றவர் குடும்பத்தை மாசில்லாத மனதோடு பார்ப்பது கூடு மனிதநேயம் தான்.

முடிவுரை:
மனிதநேயத்தை இவ்வாறு பட்டியல் போட்டுக்கொண்டே போனால் பேனாவும் தீர்ந்துவிடும். பேசும் வார்த்தைகளும் முடிந்துவிடும். முடிவில் நம் சமூகம் விடிந்ததா என்பதே கேள்வி. முடியும் என்றெண்ணியதால் தான், விண்ணை முட்டி நிற்கிறது பல துறைகளில் நாம் கண்ட வளர்ச்சி. அதே மனபோக்குடன் ஏன் நம் சொந்த வாழ்விலும் சுத்தமான மனதோடும், மாற்று குறையாத நேயத்தோடும் வாழ முடியாது!

எழுதியவர் : ஷர்மிளா ஜெ. (29-Apr-16, 1:37 pm)
Tanglish : manithaneyam
பார்வை : 67814

சிறந்த கட்டுரைகள்

மேலே