நதியாடும் விரல்கள் -- துளிப்பாக்கள் - குமரேசன் கிருஷ்ணன்

நதிக்குள் இறங்குகிறேன்
முழுதாய் நனைகிறது
மனது

-----------------------------------------

நதியில் தத்தளிக்கும்
எறும்புகளை கண்டால்
இலையுதிர்க்கின்றன மரங்கள்

-----------------------------------------

நதிக்குள் முகம்பார்ப்பதைவிட
மிகப்பிடிக்கும்
நிலவு பார்க்க

------------------------------------------

நதிக்குளியலில்
கடிக்கும் மீன்களே
ரணத்தை விரட்டும்

------------------------------------------

சிறுவர்களின் காகிதக்கப்பலை
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
மூழ்கடிப்பதில்லை நதி

-----------------------------------------

நதியாடும்
விரல்களில் எல்லாம்
அவள் உருவங்கள்

------------------------------------------

தாமரை மலரைவிட
கொள்ளை அழகு
இலைமேல் துள்ளும் தவளை

----------------------------------------------

நிற்காது ஓடும்
நதிகளே
இலக்கினை எட்டும்

----------------------------------------------

நதிக்குள் கல்லெறிந்தேன்
வட்ட வட்டமாய் கரைந்தன
கவலைகள்

---------------------------------------------

மெளனமாய் அமர்ந்தபடி
நதியின் சலசலப்பை ரசிக்கின்றன
கூலாங்கல் மனம்

---------------------------------------------

எதிர் நீச்சலடிக்கும்
மீன்குஞ்சுகள் கண்களில்
எந்த பயமுமில்லை

----------------------------------------------

எந்த சுரங்களும்
மனதை நனைப்பதில்லை
நதியோர காற்றைப்போல்

-----------------------------------------------

மழையில்
நனையாத நாட்களில்
நதியில் நனைகிறேன்...

----------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்--

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (15-May-16, 8:31 pm)
பார்வை : 206

மேலே