கவிஞர் பலம்

{அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்}

ஊரினிலே உள்ளோ ரெல்லாம்
...ஊதாரித் தனமாய்த் தம்மில்
பாரினையே தூக்க வல்ல
...பலமதுவு முள்ள தென்பார்
பேரினிலே பலத்தை வைத்துப்
...பிதற்றிடுவோ ரல்லோம் நாங்கள்
நேரினிலே நேராய் நிற்கும்
...நேர்மையே பலமாய்க் கொண்டோம் !

தூணையும் பிளக்க வல்லோம்
...துயர்தமைத் துடைக்க வல்லோம்
ஆணையும் பெண்ணென் றாக்கி
...அழகுகள் சமைக்க வல்லோம் !
நாணையே ஏற்றி டாமல்
...நற்கணை பாய்ச்ச வல்லோம் !
ஏனைய விடய மெல்லாம்
...எடுத்துநான் எழுது கின்றேன் !

நரியினை வாச கன்தன்
...நற்றொழு கைக்கா யீசன்
பரியென அமைத்த சேதி
...பாருளோர் அறிவார் ! யாமோ
அரியையே அணிலா யாக்கி
...அருங்கவி படைக்க வல்லோம்
எரிதழல் தன்னைத் தண்ணீ
...ரேரியென் றியம்ப வல்லோம் !

அவ்வையின் பாட்டு வன்மை
...ஆணையைத் தடுத்த தந்நாள்
செவ்விய காள மேகம்
...செப்பிய பாட்டின் சக்தி
கவ்விய இருளில் அந்தக்
...கவினக ரழித்த தன்றோ !
இவ்வுரை உணர்வீர் எம்மால்
...இயலுமே எதுவும் செய்ய !

முன்னையெம் வன்மை யெல்லாம்
...முடியொடு கோலுங் கொண்ட
மன்னரை வாழ்த்தி வாழ்த்தி
...மழுங்கிடக் கண்டோம் ! பாட்டில்
மின்னலை வைத்த ராசன்
...மிளிர்கவி பார திக்கை
வன்மையால் வலிமை பெற்றோம்
...வளமிகு கூர்மை கண்டோம் !

விடுதலை வேட்கை பாய
...வீறுடன் பாவேந் தன்தன்
சுடுகணை வார்த்தை யெல்லாம்
...சுட்டதே பரங்கி தம்மை !
இடருறும் சாதிக் கோட்டை
...இடித்ததே அன்னான் பாட்டு !
முடுக்கிய சொல்லில் வேகம்
...முளைத்திடும் கேண்மின் கேண்மின் !

கண்ணகி அவளை யிந்தக்
...காசினி தன்னில் நேரில்
கண்ணினால் யார்தான் கண்டார்
...கவியிலே இளங்கோ கண்டான் !
மண்ணிலே போரின் தாக்கம்
...மாபெரும் படைகள் தேக்கம்
பண்ணிலே அமைத்த கூத்தன்
...பாட்டிலே வலிமை கண்டீர் !

நேரிலே நடப்ப தைப்போல்
...நேர்த்தியாய்க் கருத்தை நாங்கள்
காரதும் பொழிதல் போலே
...கவிதையால் ஊற்ற வல்லோம் !
பேருல கியற்ற வல்லோம்
...பெருமைகள் காட்ட வல்லோம்
ஆரிவை செய்வார் ? அந்த
...ஆண்டவன் தானே சொன்மின் !

ஆண்டவ ராவோம் சொற்கள்
...ஆள்பவ ராவோம் நாங்கள்
கண்டிபன் போலே வேகக்
...கணையெனுஞ் சொல்லால் வையம்
தாண்டிட வல்லோம் ! தீதைத்
...தடுப்பவ ராவோம் ! பாட்டால்
வேண்டிய பொருளை யெல்லாம்
...வேகமாய்ப் பற்று வோமே !

கவிஞரின் பலத்தை யாரும்
...கடுகெனக் கருதல் வேண்டா
செவிக்குணா நல்கும் யாமோ
...செழிப்புடைப் புலவர்க் கூட்டம் !
குவியல்கள் வேண்டோம் ! போற்றிக்
...குறிகளும் வேண்டோம் ! வன்மை
அவைகளில் காட்டி நெஞ்சம்
...ஆண்டிடும் மன்னர் யாமே !
-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (27-May-16, 9:25 pm)
பார்வை : 118

மேலே