விரலடக்க சாவு

பல கொலைகார
காரணிகள் தவழும்
இலையை வளர்த்து
பதப் படுத்துகிறோம்,
நிதான விடமென்னும்
நிதர்சனம் அறியாமல் !

சுருட்டிய இலைக்குள்
சுருண்டு கிடக்கும்
எமனவன் - வெள்ளாடை
உடுத்தி வருகையில்
ஆட்கொல்லியென
தெரிந்தும் - வாயால்
வணக்கம் வைக்கிறோம் !

நெருப்பைக் குழைத்து
தலை எரிக்கிறோம்,
உதட்டோரம் வந்தவுடன்
தப்பித்ததாய் எண்ணி
எஞ்சிய பஞ்சை
தூக்கி எறிகிறோம் !

ஆறாம் விரலென
முளைக்க விடுகையில்
முளை விடும் சாவு
நுரைப்பையில் புகுந்து
பிராண வாயுவின்
பிரதான குடில்களை
இடித்து விளையாடுகிறது !

நிகோடின் மட்டுமல்ல
பொடிப் பொடியான
கோடி வேதி பொருட்கள்
உண்டதனில் - உண்டால்
வாயோரப் புற்றை
வரேவேற்க ஆயத்தமாவீர் !

மூக்கு வழி விடத்தை
நீவிர் குடிப்பதோடு
நிறுத்தாமல் - நிறுத்தத்தில்
நிற்கும் புகை தொடாதொருவரின்
சாதா புன்னகையிலும்
சதா மரணம் தூவுகிறீர் !

முகேஷாகி சாவ
முடிவெடுத்த பின்னர்
ஏன் சவக்குழிக்கு
துணை தேடுகிறீர் ?
மனைவி மக்களாவது
வாழ்ந்துவிட்டு போகட்டுமே !

விரலடக்க சாவு
விலைக்கு வருகிறது
விழித்துக் கொள்ளுங்கள்
இல்லையேல்
விடாதது கொல்லும் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (31-May-16, 6:01 pm)
பார்வை : 53

மேலே