வருந்துகிறது மனமும்
உழைப்பது தவறில்லை
பிழைத்திட வழியில்லை
கைவிட்ட குடும்பத்தால்
கையிலெடுத்தத் தொழிலிது
வருந்துகிறது மனமும்
வழிந்திடும் வயோதிகத்தால் !
மூதாட்டியும் தளராது
முகம்காட்ட விரும்பாது
முனைப்புடன் செயல்படுது
முடியாத நிலையிலும்
முச்சந்திக் குப்பைகளை
முடிந்தவரை சுமக்கிறது !
முகமூடி அணிந்திட்டு
முகாமிடும் முனிவர்களும்
முட்டிமோதும் பக்தர்களும்
முதியோரின் துயர்நீங்க
முற்றுப்புள்ளி வைத்திட
முன்மொழிவீர் இனியேனும் !
முதியோரைக் கண்டாலே
முகம்சுளிக்கும் காலமிது
முன்னேறிய உலகிலும்
முன்வந்து உதவாமல்
முடங்கியே நிற்கிறது
முணுமுணுக்கும் உள்ளங்கள் !
பழனி குமார்