கத்தரி வெருளி
(சுமார் 65 வருடங்களுக்கு முன் மக்களிடையே பிரபல்யமாக இருந்த கவிஞர் யாழ்ப்பாணத்துக்கு அருகெ உள்ள நவாலியூர் சோமசுந்தரப் புலவர் (1878-1953);. ஏறக்குறைய பதினையாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். அவருடைய கற்பனைத் திறன் அபாரம். எவ்வளவு காலம் சென்றாலும் வாசித்து இரசிக்கலாம். )
கத்தரித் தோட்டத்து மத்தியில் நின்று
காவல் புரிகின்ற சேவகா – நன்று
காவல் புரிகின்ற சேவகா
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார் – உன்னைப் போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா – என்றும்
காவல் புரிகின்ற சேவகா
எண்ணி உன்னைப் போல் இரவு பகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? – என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக் காய் போல்
மஞ்சள் நிற உறுமாலைப்பார் – தலையில்
மஞ்சள் நிற உறுமாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார் – இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார் – கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார் – கறைச்
சோகி போலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார் – ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையும் கண்டதோ? – உன்றன்
பொல்லாத பார்வையும் கண்டதோ?
வாட்ட மில்லாப் பயிர் மேய வந்த பசு
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே – வெடி
வாலைக் கிளப்பிக் கொண்டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக் கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே – கூடிக்
கத்திக் கத்திக் கரைந் தோடுமே
நள்ளிரவில் வருகள் வனுனைக் கண்டு
நடு நடுங்கி மனம் வாடுமே – ஏங்கி
நடு நடுங்கி மனம் வாடுமே
7
ஏழைக் கமக்காரன் வேலைக் குதவி செய்
ஏவற்காரன் நீயே யென்னினும் – நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப் போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன் னுண்மையே – போலி
ஆவதறிந்தன் னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் – மிகத்
துண்ணென் றிடித்த தென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் – நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதை போல்
தேசத்திலே பலர் உண்டுகாண் – இந்தத்
தேசத்திலே பலர் உண்டு காண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்று நான் – உன்னில்
அறிவு படைத்தனன் இன்று நான்.
********