வாழ்த்து - பைந்தமிழ்ச் சோலை 48 சீர் விருத்தம்

விருத்தங்கள் விளையாடும் தமிழின் சோலை
வித்தகர்கள் எழில்யாப்பில் கட்டும் மாலை !
விஞ்சையரும் வண்ணமுடன் சொல்லும் பாட்டு
விருந்தாகச், சொக்கிவிடும் உள்ளம் கேட்டு !
விதைத்திட்டார் மாவரதன் மரபை நன்றாய்
விருட்சமென வளர்ந்ததுவும் பூக்கும் செண்டாய் !
வியக்கவைக்கும் திறமைகளும் இங்கே கூடும்
விருந்தளிக்கக் கருத்தாகச் சேர்ந்தே பாடும் !
விவரித்துக் கற்பிக்கும் ஆசான் பாட்டை
வியனுலகும் சுவைத்திடவே ஆர்வம் காட்டும் !
விமர்சனமும் சிலநேரம் இங்கே முட்டும்
விடைகிடைக்கும் அதன்பின்னே தெளிவும் கிட்டும் ..!!

அருவியென வெண்பாக்கள் அமுதாய்ச் சிந்தும்
அதிமதுர கலிப்பாவும் புலவோர் சொந்தம் !
அந்தமில்லா ஒண்டமிழில் பழக்கும் சோலை
அபிநவமாய் வித்தகங்கள் புரியும் சோலை !
அயர்வின்றி அற்புதங்கள் படைக்கும் சோலை
அம்புலியாய் முகநூலில் உலவும் சோலை !
அலைகடலாய் ஓயாமல் ஒலிக்கும் சோலை
அரியபல யாப்புகளும் அளிக்கும் சோலை !
அடுக்கிவரும் தாழிசையும் பயிற்றும் சோலை
அழகழகாய் செந்துறையில் வாழ்த்தும் சோலை !
அடங்காத தாகத்தில் அலையும் நெஞ்சம்
அமிருதமாய்த் தமிழ்பருக அடங்கும் கொஞ்சம் ..!!

இருளகற்றி ஒளியூட்ட அகமும் பூக்கும்
இளமையுடன் திகழ்சோலை மரபைக் காக்கும் !
இலக்கணமும் இலக்கியமும் அறியச் செய்யும்
இனிமைகொஞ்சும் யாப்பினிலே சிலிர்க்கும் மெய்யும் !
இனியதமிழ் விருந்துண்ண விலகும் சோர்வு
இங்கிதமாய் பயிற்சிதந்து வைப்பார் தேர்வு !
இணையில்லாக் குழுமமிது முகநூல் பேச்சு
இலங்குகின்ற மரபில்தான் சோலை மூச்சு !
இரத்தினமாய் மின்னும்பைந் தமிழின் சோலை
இரசமிக்க சிந்துப்பா கொஞ்சும் சாலை !
இமயத்தின் சிகரத்தை எட்டும் சோலை
இடையீடு வந்தாலும் தகர்க்கும் சோலை ..!!

பெருமைமிகு பாவலர்கள் காட்டும் பாதை
பெருந்தகையாய்ப் பயில்வோரை ஆக்கும் மேதை !
பெருக்கெடுக்கும் வற்றாத கவிதை வெள்ளம்
பெருங்களிப்பில் தமிழமுதால் திளைக்கும் உள்ளம் !
பெருந்தன்மை யோடிங்கே பயிற்று விப்பார்
பெருமாளின் திருநாமம் கொண்ட வர்தான் !
பெற்றோமே பெரும்பேறு சோலை கூடி
பெருகிடுதே இதயத்துள் இன்பம் கோடி !
பெயர்விளங்கச் செய்திடுமிச் சோலை மண்ணில்
பெருகிவரும் மகிழ்ச்சியினால் துளிகள் கண்ணில் !
பெறுமதியாய்க் கண்டோமே மரபின் சோலை
பெட்புடனே போற்றிடுவோம் சோலை வாழி ...!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Nov-16, 1:50 pm)
பார்வை : 79

மேலே