தீண்டாமல் தூண்டுகிறாய் காதலை -- மரபு கவிதை
தீண்டாமல் தூண்டுகின்றாய் !
------ தினந்தினமும் வாராயோ !
வேண்டுகின்றேன் கடவுளையும்
------ வேகமாக வாராயோ !
மாண்புடையப் பெண்ணே நீ
------ மறவாது வாராயோ !
காண்கின்றேன் உன்னெழிலை
------ காதலுடன் வாராயோ !!!
உனக்காக வாடுகின்றேன்
------ உள்ளன்போடு தேடுகின்றேன்
எனக்காகப் பிறந்தவளே !
------ என்னுயிரே ! வாராயோ ?
சினமெல்லாம் வேண்டாமே
------ சிந்தையிலே காதலுடன்
மனமெங்கும் நானாக
மாற்றிடுவாய் கண்மணியே !
காதலியைத் தேடுகின்ற
----- காளைநான் நெஞ்சத்தில்
கீதங்கள் இசைத்திடுவேன்
------ கிட்டிடுமா என்காதல் .
மோதல்கள் வேண்டாமே
------ மோகமுள்ளும் நீதானே !
சாதலுக்குப் பிறக்கவில்லை
------ சாதிப்போம் காதலிலே !!!
வாழ்க்கைக்கு இன்பத்தை
------ வழங்குகின்ற நற்காதல்
தாழ்ந்திடுமா காசினியில்
----- தரமான என்காதல்
வீழ்ந்திடுமா செவிகளிலே
------ விந்தையான என்னவளே !
ஆழ்ந்திடுவோம் நேசத்தால்
------ அலையெனவே வாராயோ !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்