ஓட்டை வாய்க்குள் ஒட்டடை

-------------------------------------
மீமொழி கவிதை -
-------------------------------------------

விளக்கம் :
தமிழ்நாட்டில் இன்று நிலவிடும் மிக அசாதாரண சூழலின்
காரணத்தால்​ குழப்பமான நிலையே உருவாகி உள்ளது
என்பது மறுக்க முடியாத உண்மை . இதுதான் நிதர்சனம் .
நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட சமூக நிகழ்வே தேர்தல் .
அடிப்படை தேவை​கள் ​, குறைகள் எவையானாலும் நாம் நாடி
ஓடுவது அரசியவாதிகளையும் அதிகாரிகளையும் ​தான் .
நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கிற முழுபொறுப்பும் கடமையும்
உரிமையும் வாக்காளர்கள் கையில் உள்ளது. அதனால் வாக்காளன்
நிலையே இன்றைய கருப்பொருளாக ​மனதில் பட்டது .
​--------------------------------------------------

*****************************
​ ஓட்டை வாய்க்குள் ஒட்டடை
******************************

ஆகாயத்தில் கட்டிடும் கோட்டைக்காக
அரியாசனத்தில் அமர்ந்திடும் போட்டியிங்கு
அறியாத முகமும் நாடிவரும் நம்மைத்தேடி ...
பயணிக்காப் பாதையில் நகர்வலம்
நடந்திடா வீதியில் நடை பயிற்சி
கவர்ந்திழுக்க கலைநூறு ​காட்சியாகும் ​...

ஆடிக்காற்றில் உதிரும் சருகாய்
கருத்தில்லாப் பேச்சாற்றலில் ​மயக்கம் ...
அதரத்தில் சிரிப்பும் அகத்தில் நஞ்சுமென
பொய்யும் புரட்டும் கூட்டாய் நடிப்பதை
மெய்யென நினைத்து மெய்மற​க்கும் நிலை ​
வரிசையில் சென்று பாதாளத்தில் விழுவர் ...

மயக்கத்தில் உள்ளவன் மையுடன் திரும்புவான்
அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான் ..
எழுதாத நாடகங்கள் அரங்கேறும் நாளும்
வலையில் அகப்பட்ட மானும் அழுதிடும் ..
வாக்களித்தவன் வீதியில் அலைவான்
வாய்ப்பைப் பெற்றவன் வானத்தில் சுற்றுவான் ...

ஓட்டை வாய்க்குள் ஒட்டடையை
அறியாத நெஞ்சங்களே அதிகம் ..
புரிந்தவனின் முகத்தில் புன்னகை
பொன்னான விடியலை எதிர்நோக்கி ....

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-Feb-17, 9:08 pm)
பார்வை : 136

மேலே