பயணத்தில் ஓர் இரவு

பயணத்தில் ஓர் இரவு

அப்பொழுதுதான் பகலை
முழுதுமாக விழுங்கியிருந்தது
இரவு!.....

நிறுத்தத்தைக் கண்டதும்
நிமிட நேர
ஓய்வுக்கேங்கி
சீறிப்பாய்ந்து
வீறிட்டு நின்றன
பேருந்தின் சக்கரங்கள்!....

சுற்றிச் சுற்றி
தான் தேய்ந்தாலும்
தனை ஒட்டி உரசி
உறவாடும் சக்கரங்களுக்கு
வழிகாட்டியாய்
முன்தொடர்ந்து பயணித்தது
சாலை!....

பள்ளத்தை பார்த்ததும்
பதறி ஒரு கால் தூக்கி
ஓடும் செல்லக் குழந்தையாய்
சாய்ந்து சினுங்கியது
பேருந்து!........

துள்ளல் பாடல்களை
குறுந்தகட்டில் ஓடவிட்டு
முதுமை பதுக்கிய
தன் இளமையை
தூசி தட்டி எழுப்பி
தூக்கத்தோடு சேர்த்து
பேருந்தையும்
ஓட்டிக்கொண்டிருந்தார்
ஓட்டுனர்!...

இருக்கைஇலா இடந்தனிலும்
இருபதுபேரை நிற்கவைத்து
தொந்தி நைய முட்டித்தள்ளி
கருமமே கண்ணாயிருந்தார்
நடத்துனர்!....

ஏறி அமர்ந்தபின்னே
இறங்குமிடமே இலட்சியமாய்
விரித்து வைத்த
அலைபேசி வலைதனில்
சிக்கி மகிழும் வேற்றுக்கிரக வாசியாய்
ஒருவன்!.....

மனைவி அருகிருக்க
மாற்றான்தோட்டத்து மல்லிகையை
கண்களால் கொத்தித்தின்னும்
மனிதக் கழுகாய்
ஒருவன்!....

அரசியலை அலசி ஆராய்ந்து
வார்த்தை வெள்ளத்தை மோர்ந்து
விதி வசமாய் அருகமர்ந்த
பேசா மடந்தையின் காதில்
ஈயமாய்க் காய்ச்சி ஊற்றும்
ஊர்வம்பனாய்
ஒருவன்!......

கர்ப்பினியை கண்டதும்
கரிசனம் தலைக்கேற
கோர்த்திருந்த காதலியின்
கைவிலக்கி எழுந்து
மூர்ச்சையுற்ற ஈவு இரக்கத்தை
உயிர்ப்பித்தவனாய்
ஒருவன்!...

ஊர் சேரும் முன்னே
ஒருமுறையேனும்
கக்கிவிடும் முனைப்பில்
கவுட்டுக்குள் தலைவிட்டு
இரத்தக் கண்களை உருட்டி
சிறந்த குடிமகனாய்
ஒருவன்!...

மழலையை தன் தோள்சாய்த்து
கைவளையத்தினுள்
கட்டியவளை நிறுத்தி
ஈறைந்து மாத சுமை சிறுக்க
கால்கடுக்க நிற்கும்
கடமை வீரனாய்
ஒருவன்!...

சொந்த ஊரன்றி
எந்த ஊர் குறுக்கிட்டாலும்
ஏறிட்டு பார்த்திடேன்
என இறுமாப்புடன்
கைப்பிடி முட்டி
குறட்டை விட்டு மிரட்டுபவனாய்
ஒருவன்!...

நடத்துனரின் நன்னடத்தை
சான்றிதழை பெறாது
பயணச்சீட்டு எடுப்பதில்லை என
கொள்கைவாதியாய்
துஞ்சாத விழிகளுக்கு தூக்கமூட்டி
தேர்ந்த நடிகனாய்
ஒருவன்!...

மனிதனில் இத்தனை
இரகங்களா....
எண்ணங்களின் அஜீரணத்தில்
ஏக்கப் பெருமூச்சுடன்
சன்னலோர வானத்தை வெறித்து
விடியலை நோக்கி
ஒருவன்!........!..............!...........

எழுதியவர் : சு உமாதேவி (11-Apr-17, 10:23 pm)
பார்வை : 125

மேலே