எட்டு வண்ண வானவில்

வாய்மை எனுமொன்றைத் தன்னுடலின் உள்ளோடும்
******வாழ்ந்திட சுவாசிக்கும் மூச்சாய்க் கொண்டு
தாய்மை அடைகையில் ஈருயிரினைச் சுமந்து
******தரணி ஒளிரும் தங்கச் சுடர்......


முத்தமிழ் கடலில் மூழ்கி யெழுந்து
******முப்பெரும் தேவிகளின் ஆசிகள் பெற்று
சித்தம் குளிர நான்மறைகள் அறிந்து
******சிறிதும் நழுவாது நாற்குணத்தின் பேரழகி......


ஐம்புலன்கள் தன்நிலை மீறாது காத்து
******ஐம்பெரும் பூதங்களை வணங்கி மகிழ்ந்து
கம்பன் கவியமுதாய் அறுசுவை உணவீந்து
******கருணை மிளிரும் அன்னப் பூரணி.....


ஏழ்வகைப் பருவம் தழுவிடும் கொடிமலர்
******என்றும் உளத்தில் நல்மணம் கமழ்ந்து
ஆழ்ந்த தவத்தில் எட்டுச் சித்திகளை
******அடையும் வல்லமை படைத்த மாதேவி......


சுட்டெரிக்கும் சூரியனின் நிறப்பிரிகையில் உதிர்ந்து
******சந்தன மேனியோடு சந்திரனின் குளிரெடுத்து
எட்டுத் திசையின் விழிகளும் மயங்கிட
******எழிலுண்ட இப்பெண்மையே வரையாத வானவில்......

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 9:46 am)
பார்வை : 82

மேலே