கண்ணன் தரிசனம்

கண்ணன் தரிசனம் கண்ட மனத்தினில்
கற்பனைச் அற்புதங் கோடியெழும் - அவன்
வண்ண முகந்தனைக் கண்க ளிரண்டினை
வார்த்தைகள் முத்திட ஆவல்பெறும் !

ஊது குழல்கொண்ட நாதனின் ரூபமே
உள்ளும் புறத்திலும் ஆசைதரும் - வரும்
காதலிலே சிறு ராதையின் நெஞ்செனக்
கவிஞன் மனமிங்கு மாறிவிடும் !

பீலிகொண்டான் மலர்மாலை கொண்டான் அந்தப்
பிஞ்சு முகத்தில் சிரிப்புங்கொண்டான் ! - அடர்
நீல நிறவுடை கோல முடியெழில்
நீட்டி மனமெங்கும் வாசங்கொண்டான் !

ஒரு விரல் கொண்டென்னைத் தீண்டிடுவான் மன
உணர்ச்சியிலே எல்லை தாண்டிடுவான் - அன்று
பெருமலை சுமந்திட்ட விரலில் சொடுக்கிடும்
பேற்றினைப் பெற்றிட வேண்டிடுவேன் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-May-17, 11:38 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 84

மேலே