மன்னிப்புக் கேட்கிறேன் மனசாட்சியே

மனிதம்,இறைமை,மிருகம் ஆகிய மூன்று நிலைகளுக்கு இடையில் இருந்து நான் எழுதுகிறேன்.இந்த அகிலத்தில் பலருக்கும் வாழப்பிடிக்கிறது,ஆனால் சிலருக்கு மட்டுமே நல்வாழ்வு அமைகிறது.

வாழ்வின் இலையுதிர்காலத்தையும்,வசந்தகாலத்தையும் சம அளவில் அனுபவிக்கும் நவீன சமுதாய மனிதர்களே,கண்ணனுக்கு தெரியாத சில மனிதர்களின் வாழ்வியல் பற்றி உங்களோட கொஞ்ச நேரம் பேசிடவே என் எழுத்துக்கள் இங்கே பிரசவிக்கிறேன்.

நவீன மானுடக் கடலில் உங்களுள் நானும் ஒரு துளி என்பதை இப்போதே உறுதி படுத்திக்கொள்கிறேன்.
பல இரவுகள் என் தலையணையை நான் காலங்கப்படுத்தி இருக்கிறேன்,அவையனைத்தும் என் மீது நான் கொண்ட எண்ணங்களின் தாக்கம். இப்போது,மனிதர்களின் வார்த்தைகள் மௌன்னித்து போய் இருக்கின்ற இந்த நீள இரவில் என் கண்ணீர் மொழிக்கு காரணம் அவர்கள் தான்.

இப்போதும் கூட நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி பொழுதில் கூட எங்கோ ஒரு மூலையில் சில இதயங்கள் அழுது கொண்டிருக்கும்,பேருந்து நிலையங்களில் சில கண்கள் கதறி அழுது கொண்டிருக்கும்,சில வயுறுகளை உணவுகள் நிராகரித்திருக்கும்,சிலரின் உணர்வுகள் காலம் தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும்,வறுமையின் பிடியில் சிக்கி தவிப்போர் பலருண்டு,அவர்களுக்காக தான் என் இதயமும் கண்களும் ஒருசேர கலங்குகிறது!

ப்ரியத்திற்குரியவர்களே!நீங்கள் வீட்டை விட்டு வந்த பின்பு ,வீடில்லாமல் தெருவில் கிடைக்கும் முதியவர்களை என்றாவது ஒருநாள் உங்கள் கவனத்தை ஈர்த்ததுண்டா?பிஞ்சு கைகள் உங்கள் கைகளை நோக்கும் போது உங்கள் இதயத்தின் சில நரம்புகள் அருந்ததை உணர்ந்ததுண்டா?

உங்கள் வாழ்வின் ஒருமுறையாவது அவர்கள் வாழ்க்கை பின்னோட்டத்தை அறிய முற்பட்டதுண்டா ?
என்னை மன்னித்து விடுங்கள் நண்பர்களே!இந்த உலகில் நீங்களும் நானும் கைதேர்ந்த நடிகர்களாக துடிக்கிறோம்,மனிதனாகும் முயற்சியை மறுதலித்துவிட்டு...!

அந்த பேருந்து நிலையத்தில் இரண்டு பிஞ்சு கரங்கள் என் கால்களை தீண்டிய போது அக்கரங்களுக்கு என் இதயம் அளித்த பரிசுகள் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள் தாம்!ஒரு கங்கையை வெற்றி கொள்ள போனவன் அன்று காய்ந்து போய் வந்தேன் !

ஆயிரம் மேடைகள் அரவணைத்தாலும்,உதடுகள் புகழ்ந்தாலும்,புகழ் என்னும் போதை உச்சிக்கு ஏறினாலும் அவையாவும் பொய்யென அறிந்துகொண்டேன் இல்லாதவர்களுக்கு "இல்லை" என உரைத்திடும் போது .

"சொல் பித்தளை,செயல் தங்கம்" நீங்களும் நானும் தங்கமாகப் படைக்கப்பட்டவர்கள்,ஏன் பித்தளையாக மாறிப்போனோம்!

இந்த உலகத்தில் "நல்லவன்" என்று முயற்சிக்கிறோம் நல்லவனா வாழ்வதற்கு முயற்சிசெய்யவில்லை.

இந்த உலகத்தின் பாஷையில் "சாதனை" என்பதும்,"பெருமை" என்பது தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என நினைக்கிறன்.வாடிப் போன உதடுகளை சிரிக்க செய்வது சாதனை.உங்களால் ஒருவனுக்கு வாழ்வு கிடைத்தது என்பது பெருமை.சாதனைகளுக்கும்,பெருமைகளும் விளம்பரங்கள் தேவை இல்லை.

இதயத்தின் ஈர பிரதேசத்தில் அன்பு இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.அந்த அன்பினை சுவாசிப்போம்.எல்லோருடைய இதயங்களையும் அன்பினால் வெல்வோம்.அன்பை பரிசளிப்போம்.அன்பை வார்த்தெடுப்போம்.அன்பை மிஞ்சிய சக்தி ஏதும் இல்லை.உங்களையும் என்னையும் பிணைத்திருப்பது கூட அன்பு தான்.சில விசயங்கள் சில்லறைகள்,சத்தம்போடும்.உயர்ந்த கோபுரங்கள் மௌனித்திருக்கும்.அன்பு ஒருபோதும் சத்தம் போடுவதில்லை.

நீங்களும் நானும் இப்பொது அன்பின் மொழி மறந்து போனோம்.பேசிய பேச்சுக்கள் சுயநலமிக்கவை என பிஞ்சு குழந்தைகளிம் வாடிய முகம் கண்டு கண்டுகொண்டேன்.அந்த பேருந்து நிலையம் தான் என்னை புத்தனாகிய போதிமரம்.

என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!புகழ்,ஆளுமை என்னும் போலிக்கு பின்னல் சென்றுகொண்டிருந்த வேளையில் மனிதத்தை மறந்துபோனேன்,சகோதரர்களுக்கு உதவ இயலாத
திக்கற்றவன் ஆனேன்,பெருமை பேசி கொள்ளும் அர்ப்பன் ஆனேன்,என்னை மன்னித்துவிடு மனசாட்சியே!

விதியே!இன்னொரு பிறவி எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையை எனக்கு கொடுத்துவிட்டு,வசந்தங்களை அவர்களுக்கு கொடு.நான் வேண்டி கிட (டை)ப்பதும், வேண்ட முடிந்ததும் இதுதான்...!



கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (15-May-17, 7:07 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 178

மேலே