பிரிதொரு முகம்

நின் முகம் காண
வாரி சிக்கெடுத்து பின்னிய ஜடையோடு
பூச்சூடி பொட்டிட்டு
கண்ணாடியில் சிங்காரம் கண்ட பொழுது
மருதாணி பூசி கொண்டது என் முகம்

நின் முகம் காண
வாயிலுக்கும் வீட்டுக்கும் ஓடுகையில்
என் வீட்டை கடந்து நீ செல்கையில்
நீ வீசிய கள்ள பார்வையில்
ஆடி அமர்ந்தேன் பரவசத்தில்
நீ சென்ற வழி நோக்கி
ஆர்ப்பரித்து அடங்கிய ஆழி போல

நின் முகம் காண
அத்தை அத்தை எங்கே போனாய்
அத்தானுக்கு பிடித்த பிடி கொழுக்கட்டை
சட்டி நிறைய கொண்டு வந்தேன்
சாப்பிட ஆளில்லையோ !!! வென்று
நீ உள்ளிருப்பது அறிந்தும் அறியாதது போல
சீண்டல்கள் செய்தேன்
செங்குழல் மூங்கில் தேடி
ரீங்காரமிட்டு வரும் வண்டு போல

நின் முகம் காண
வாழும் நாள் சிறந்திட
வானவர்கள் மலர் பொழிந்து வாழ்த்திட
தோரணங்கள் சூழ்ந்திட
வீட்டு முற்றத்தில்
சொந்தங்கள் அமர்ந்திட
இவளுக்கு இவன் இவனுக்கு இவளென்று
தாம்பூலம் மாற்றிட
மணப்பெண்ணாய் மலர்களின் மகளாய்
அழைத்து வந்த தோழிகளின் கை உதறி
கண்ணாளன் அவனெங்கே என்று பார்த்தவள்
கண்டதோ பிரிதொரு முகம் !!!!

எழுதியவர் : (12-Jun-17, 6:01 pm)
பார்வை : 416

மேலே