எனக்குள் நீ
மலரோடு உறங்கும்
மென் பனித்துளியாய் - என்
மனதோடு நீ...
வயதோடு விரியும்
வனப்பின் வடிவாய் - என்
விழியோடு நீ...
பூவோடு சுரக்கும்
அமுதத்தின் அசலாய் - என்
அதரத்தில் நீ...
வானோடு மின்னும்
வளர்பிறை வரவாய் - என்
வையகத்தில் நீ...
நாரோடு மணக்கும்
நந்தவனச் சாறாய் - என்
நாளங்களில் நீ...
ஆணோடு ஊறும்
ஆசையின் சுகமாய் - என்
அங்கத்தில் நீ...
பெண்ணுக்குள் மடியும்
பேராசைக் கனவாய் - என்
பந்தத்தில் நீ...
பகல்வானில் மறையும்
நிலவின் நிழலாய் - என்
நிஜத்தில் நீ...
நிறைமாதப் பெண்ணின்
சுகப் பிரசவமாய் - என்
நினைவுகளில் நீ...
கண்ணிமைக்குள் மூடி
உள்ளுக்குள் பொங்கும் - என்
கண்ணீர் நீ...
பூட்டிக் கிடந்தாலும்
புகையாக வெளிவரும் - என்
புன்னகை நீ...
வாட்டி வதைத்தாலும்
வரட்சிக்கு விடைதரும் - என்
வசந்தம் நீ...
தமிழ் கொண்ட உணர்வில்
உறவாகிப்போன - என்
கவிகளாய் நீ...
புத்தகம் நடுவில்
பூட்டிவைத்த மயிலிறகாய்
எனக்குள் நீ!..