இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் -பேராசிரியர் சுப வீரபாண்டியன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் அமெரிக்கா -ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு

பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் (அமெரிக்கா )- பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் "இன்றைய தமிழகமும் மதவாத அரசியலும் " என்னும் தலைப்பில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு .

இஃது தமிழகத்தில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் பேராசிரியர் தொடர்பு கொள்ள, july 21 2017 , திருவள்ளுவர் ஆண்டு 2017 ஆடி - 5 இல் நடைபெற்றது .

மதவாதம் அல்லது மதச்சார்பின் வரலாற்றில் இருந்து தொடங்கி , எப்போது மத மோதல்கள் தமிழ்நாட்டுக்கு
வந்தன , இதில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு , அதற்கான காரணங்கள் , மதவாதம் என்பது எத்தனை கொடிய நோய், அது பரவுவதனால் ஏற்படும் வீழ்ச்சி , முதலியவைகளை அலசி , கேட்போருக்கு விளங்கச் செய்து , அதனை தடுப்பதற்கான வழிகளை சரளமாக சொல்லி முடித்து என தங்கு தடை இன்றி ஓடும் ஆற்று நீராய் அமைந்தது சொற்பொழிவு .

சொற்பொழிவுக்கு பின் , கேள்வி நேரம் - பங்கேற்றோர் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும் , தெளிவாகவும் பதில் உரைத்தார் . கேள்வி நேரம் தொடங்கும் முன் , தன் உரையை அனைவரும் கேட்க முடிந்ததா என்பதை ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார் . ஆர்வமும் , தேடலும் தான் இவர் போன்றவர்களை அயராது உழைக்க வைக்கிறது போல .

இனி சொற்பொழிவின் சாரம் : முடிந்த அளவு அனைத்தையும் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறேன் .

சமய நம்பிக்கை சங்க காலத்திலேயே இருந்தது .முதன் முதலாக ,மதங்களுக்கு இடையே விவாதங்கள் , கருத்துக் பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாக மணிமேகலை காப்பியத்தில் தான் பார்க்கிறோம் .36 மதங்களைச் சார்ந்தவர்கள் ஒரே மேடையில் பேசிய காட்சி மணிமேகலையில் இருக்கிறது. பின் மதங்களின் அடிப்படையில் இலக்கியங்கள் உருவானதும் , ஒரு மதத்தை ஏற்றும் , எதிர்த்தும் உரையாடல்கள் உருவானதும் நிகழ்வுகள். ஐம்பெரும் காப்பியங்களில் கூட சிலப்பதிகாரம் வரையில் ஒரு குறிப்பிட்ட
தாக்கத்திற்கு உட்பட்டதாக இல்லை .

மத மோதல்கள் தமிழ்நாட்டில் இடைக்காலத்தில் வருகின்றன. அதுவும் கூட இந்து மதத்தின் பிரிவுகளான சைவம் , வைணவம் இதன் இரண்டுக்கும் இடையே தான் தொடங்குகிறது . தேவாரம் , திருவாசகம் போன்றவற்றில் , சமணம் - பௌத்தம் இரு பிரிவினருக்கும் நடந்த மோதல்கள் வருகின்றன , பிற்காலத்தில் மோதல்கள் அரசு சார்ந்து -அரசன் சைவம் என்றால் வைணவத்திற்கு எதிராகவும் , வைணவம் என்றால் சைவத்திற்கு எதிராகவும் கடுமையான மோதல்கள் நடை பெற்றிருக்கின்றன.

ஆதி சங்கரர் காலத்திற்கு பிறகு தான் தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன .
சைவம் , வைணவம் , ஸ்வாதம், க்ராணபத்யம் , கௌமாரம், சவ்ரம் (பெயர்களில் பிழை இருந்தால் பொறுத்தருள்க அவர் சரியாகத்தான் சொன்னார் எனக்குத்தான் இலக்கிய மேற்கோள்களையும் , பெயர்களையும் சரியாக எழுதத் தெரியவில்லை ) என்ற ஆறு பிரிவுகளையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தார் . அதனால் அவர் சன்மதஸ்தாபகர் என்று அழைக்கப்பட்டார் . இந்து மதம் இந்த ஆறு உட்பிரிவுகளைக் கொண்டது (சிவன் , திருமால் , விநாயகர், சக்தி ,குமரன் , கதிரவன் ஆகியோரை வணங்குபவர்கள் ).பிற்காலத்தில் ஆங்கிலேயர் வந்த பிறகுதான் அந்த இணைப்பு முழுமை அடைந்தது .(Hindu law).

இடைக்கால சோழர்கள் பெரும்பாலும் சைவ மதத்தை பின்பற்றினார்கள் என்றாலும் அவர்கள் ஆட்சிக் காலத்திலேதான் சைவ மடங்கள் இடிக்கப்பட்டன என்பது முரணான செய்தி . காரணம் ராஜ குருக்களாக இருந்த பிராமணர்கள் , சூத்திரர்களால் கட்டப்பட்ட மடங்களை , அரசனுக்கு அறிவுரை கூறி இடித்தார்கள், இது வரலாற்றில் குகைஇடிக் கலகம் என்று அறியப்படுகிறது .(இடிப்பதை அப்போதே செய்திருக்கிறார்கள் - எனது இடைச்சொருகல் ). அப்படியானால் இப்பொது இருக்கும் மடங்கள்? அவை வைணவர்கள் கட்டினார்கள் என்பது இன்னொரு முரண் .இவற்றைத் தாண்டி இந்து முஸ்லீம் மோதலாக மாற்றம் பெற்றது , கி.பி பதினோராம் நூற்றாண்டு என்று கூற வேண்டும் .(கஜினி முகமது படையெடுப்பு கி.பி 1026). அப்பொழுது இருந்துதான் ஒரு பகை உணர்ச்சி உருவாகத் தொடங்கியது.

இந்தியாவின் மதம் சார்ந்த நிலமையில் , வட மாநிலங்களுக்கும் , தென் மாநிலங்களுக்கும் வேறுபாடுண்டு , குறிப்பாக தமிழகத்தில் வட மாநிலங்களில் நடைபெற்றதைப் போல இந்து முஸ்லீம் மத மோதல்கள் அதிகம் நடை பெறவில்லை , முகலாய ஆட்சி நூற்றாண்டுகளாக வட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் இல்லை என்ற வரலாற்று பின்புலம் இதற்கு காரணம். முகலாய சாம்ராஜியம் கர்நாடகம் வரை வந்தும் தமிழகத்திற்கு வரவில்லை , அந்த காலங்களில் தமிழகத்தில் நாயக்கர்களின் காலம் . இந்துத்துவ , பிராமண கருத்துக்கள் "கொடி கட்டி" பறந்த காலம். பல்லவர் காலத்தில் தொடங்கி , சோழர்கள் காலத்தில் வளர்ந்து , நாயக்கர்களின் காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. பின் ஆங்கிலேயர்கள் வந்தார்கள்.

சிவாஜி இந்துக்களின் காவலன் என்றும் , இஸ்லாமிற்கு எதிரானவர் என்றும் இன்றைக்கும் கூட ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி தொடர்கிறார்கள் , அது உண்மை அல்ல , சிவாஜி மத நம்பிக்கை கொண்டவர்தான். அனல் மத வெறி கொண்டவர் அல்ல .முகலாய ஆட்சிக்கு எதிராக அவர் தன் மண்ணை மீட்க போராடினார் , இந்து ஆட்சி நடந்திருந்தாலும் அவர் அதைத்தான் செய்திருப்பார் , தன் படைத்தலைவர்களாகவே அவர் இஸ்லாமியர்களை நியமித்திருந்தார் .(இப்ராஹிம் கான் -பீரங்கிப் படைத்தலைவர் , கப்பற்படை -தவுலத் கான் ) .

அதே போல ஔரங்கசீப் பற்றி பல தவறான தகவல்கள் சொல்லப் படுகின்றன .அவர் மிக ஆழ்ந்த மதநம்பிக்கை உடையவர் அனாலும் அவர் மத மதங்களை அழித்தார் என்பது மிகையாக சொல்லப்படுகின்ற செய்திதான்.காசி மடம் அமைப்பதற்கு ஔரங்கசீப் பெரிய பொருளுதவி செய்தார் என்று குமர குருபரர் குறித்திருக்கின்றார். இந்தியாவில் மத மோதல்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டன .

ஆங்கிலேயர் வந்த பிறகு கிருஸ்துவ சார்பும் எதிர்ப்பும் உருவாயிற்று. தமிழுக்கு அவர்கள் அனைவர்க்கும் கல்வியையும் , நூல்களையும் வழங்கினார்கள் என்ற ஆதரவும் , மதம் மாற்றினார்கள் என்ற எதிர்ப்பும் இருந்தன. வளங்களை எடுத்துக்கொண்டார்கள் என்பது உண்மைதான் .

ஆனால் அவர்கள் செய்த மிகப்பெரிய தொண்டு ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட நமக்கு கல்வியின் கதவுகளை திறந்துவிட்டனர். மெக்காலே கல்வி முறையை இன்றைக்கும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் . நம்மை குமாஸ்தாக்களாக ஆகி விட்டார்கள் என்பது குற்றச்சாட்டு . உண்மைதான் . நாம் எதனை நினைவு கொள்ள வேண்டும் ?

அது அரசர்களாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றவில்லை , அடிமைகளாக இருந்த நம்மை குமாஸ்தாக்களாக மாற்றியது .அடிமைகளாக இருப்பதை விட இது ஒன்றும் இழிவானதில்லை.

பின் இந்திய விடுதலை போராட்டம் தொடங்கிய நிலையில் இந்து முஸ்லீம் மோதல்களும் தொடங்கின. முதன் முதலாக கிலாபத் இயக்கம் பரவியபோதுதான் ஒரு மாற்றம் நிகழ்ந்தது .மேலை நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து துருக்கியை காப்பாற்ற தொடங்கிய இயக்கம் இந்தியாவிற்கு வந்த பின் , காந்தி ஆதரவு அளித்தார் . கிறிஸ்துவத்துக்கு எதிராக இந்து முஸ்லீம் இணைந்து நடத்திய போராட்டமாகவும் இது பார்க்கப்பட்டது.

பின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது .இதில் இந்திய காங்கிரசும் , கிலாபத் இயக்கத்தினரும் இணைந்தே போராடினர் சிறைக்குச் சென்றனர் . காவலர்கள் எரிக்கபப்ட்டதற்காக காந்தி இதனை நிறுத்தினர் .அதற்குப்பின் இந்து முஸ்லீம் ஒற்றுமையும் குறைந்தது .1923-1927 வரை இந்தியாவில் மிக கடுமையான ஹிந்து முஸ்லீம் மோதல்கள் நடைபெற்றன.அந்த நிலையிலும் அவை தமிழகத்தில் பரவவில்லை.நவகாளி கலவரம் ஏற்பட்டு மிகப்பெரிய கலவரங்கள் ஏற்பட்ட போதும் அமைதியாக இருந்தது தமிழகம் மட்டும்தான்.

எப்படி தமிழகத்தில் இது பரவவில்லை என்பதற்கு முக்கியமான நேர்மையான காரணம் தமிழகத்தில் தான் திராவிட இயக்கம் தோன்றிப் பரவியது ,அதனாலே தான் இன்று வரையில் மதவாதத்திற்கு தமிழகத்தில் இடமில்லை . இந்துக்களும் , முஸ்லிம்களும் , அண்ணனும் , தம்பியுமாய் , மாமனும் , மச்சானுமாய் தான் இன்று வரை இருக்கிறன்றனர் . அனாலும் தமிழகத்தில் கூட 1981 இல் கன்னியாகுமரியை அடுத்த மண்டைக்காட்டில் ஏற்பட்ட மத மோதல் மெல்ல மெல்ல திட்டமிட்டு பரப்பப்பட்டது .இபபோதும் அது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியின் போது வீடுகளில் இருக்கும் பிள்ளையார்கள் வீதிக்கு வந்து ஊர்வலமாக போகும்போது , மத மோதல்களுக்கான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.அவை மசூதிகளுக்கு அருகில் வரும் போது , பெரிய பிளவிற்கான வாசற் கதவுகள் திறந்து விடப்படுமோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது .

மதவாதம் அன்புக்கு எதிரானது , அமைதிக்கு எதிரானது , ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்ற காரணத்தால் இதனை எதிர்க்க வேண்டிய , தமிழ்நாட்டை விட்டு அகற்ற வேண்டிய கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அதற்குத்தான் பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டங்கள் உதவ வேண்டும் என்று கருதுகிறோம் .

மதத்தை ,வழிபாட்டு முறையை , அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருப்பது என்ற முடிவை எடுப்பது அவரவர் விருப்பம் , உரிமை . ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை பகையாக , எதிராக பார்ப்பது மதவாதம் .

அது தமிழ்நாட்டில் துளிர் விட்டிருப்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும் . அது வளராமல் தடுக்க கருத்தொற்றுமை உள்ளவர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டிய கடமை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு இருக்கின்றது. அவரவர் வழியில் கருத்துக்களை பரப்பவும் , ஒற்றுமையாக இருக்கவும் , இந்த அமைதிக்கான போராட்டத்தில் எங்களோடு தோளோடு தோள் நின்று இணைய வேண்டும் , உதவ வேண்டும் என்று கேட்டு , இந்த அரிய வாய்ப்பை தந்த பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்திற்கு எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி !!!!

கேள்வி நேரம் :
கேள்வி : ஐயா வங்கத்தில் நவகாளி நடந்த கலவரத்தில் இறந்தவர்கள் யார் ?

பதில் : ஒரு லட்சம் இந்துக்களும் , ஒரு லட்சம் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள் என்று தவறாக படிக்கின்றோம் , உண்மையில் அதில் இரண்டு லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லுங்கள் . நவகாளி முழுவதும் பயணப்பட்டு காந்தி செய்த அதே தியாகத்தை காந்தியோடு முழுமையாக இருந்த எல்லைக் காந்தி என்று அழைக்கப்படுகிற கான் அப்துல் கபார் கான் பற்றி நாம் படிப்பதில்லை, காந்தி அளவுக்கு அவரின் பெயர் சொல்லப்படுவதில்லை . அவரின் தியாகமும் அளப்பரியது .

கேள்வி : ஐயா நவகாளி கலவரத்திற்கு தமிழகத்தில் இருந்து காவல்துறை அழைக்கப்பட்டதற்கும் , மோதல்கள் இல்லாமல் இருந்ததற்கும் , திராவிட இயக்கம் தான் என்று எப்படி சொல்லுகிறீர்கள் ? திராவிட இயக்கம் அப்போது முழுதாக வளரவில்லையே ? ஒற்றுமை தமிழரின் கலாச்சரம் சார்ந்தது என்று நம்புகிறேன் எப்படி திராவிட இயக்கம் காரணமாயிற்று ?

பதில் :கலவரம் தொடங்கியது 1946 நவம்பர் , திராவிட இயக்கம் என்ற பெயரில் தொடங்கியது 1944 நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்கான வேர்கள் 1913 இல் நடேசனார் தொடங்கிய திராவிடர் சங்கத்திலேயே ஆரம்பித்து விட்டது , 1914 இல் நீதிக்கட்சி , 1926 இல் சுயமரியாதை இயக்கம் .எனவே முப்பது ஆண்டுகளும்கும் மேலாக திராவிடக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிக் கொண்டிருந்தன .

2000 ஆண்டுகளுக்கு முன்பே நம்மிடம் சமயத் துறையும் இருந்தது , சைவ , வைணவ மோதல்களும் இருந்தன . மோதல்களில் இருந்து ஒற்றுமை வருவதற்கு திராவிட இயக்கம் பெரும் பங்காற்றியது என்பது என் கருத்து. என் கருத்தில் இருந்து வேறு படுவதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது .


கேள்வி : நான் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகிறேன் , ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு , பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டத்தில் பங்கேற்பது சாத்தியமா ? சமீபத்தில் உணர்வு ரீதியான தூண்டுதல்கள் நடைபெறுகின்றன , உணர்வுகளுக்கு ஆட்படமால் அறிவுப்பூர்வமாக , சட்டரீதியாக இதை
எதிர்கொள்வது எப்படி ?

பதில் : இஸ்லாமியர் அல்ல , யார் வேண்டுமானாலும் , எந்த மதத்தில் இருந்தாலும் , இல்லை மதமே இல்லை என்றாலும் சேர்ந்து பணியாற்றலாம். பெரியார் அம்பேத்கர் இருவரையும் இணைக்கும் மையப்புள்ளி அவர்கள் சமூக நீதிப் போராளிகள் என்பதுதான் .மத சார்போ , எதிர்ப்போ இல்லை. பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு கூடாது என்று நினைக்கும் எவரும் சேர்ந்து பணியாற்றலாம் .

திட்டமிட்டு பரப்பப்படும் மத மோதல்கள் , இந்திய சட்டத்தை எதிர்த்துதான் பன்னப்படுகிறதே தவிர சட்டத்திற்கு உட்பட்டு இல்லை .இந்திய அரசியில் அமைப்புச் சட்டம் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தது இல்லை .
கேள்வி : ஐயா சமீபகாலமாக இந்துத்தவா குரல்கள் அதிகமாக ஒலிப்பதற்கு என்ன காரணம் .மத்தியில் இருக்கும் ஆட்சியா , மாநிலத்தில் இருக்கும் கைப்பாவை அரசா , திராவிடம் தமிழர்க்கு எதிரி என்ற பரப்புரையா?

பதில் : நீங்கள் சொன்ன எல்லாமும் காரணம் , திராவிடம் என்பது சமூக நீதியை வலியுறுத்துவது .திராவிடம் தமிழர்க்கு எதிரி என்பதற்கும் , இந்துத்தவா கருத்துகளுக்கும் உள்ள நோக்கம் ஒன்றுதான் அது திராவிடத்தை அழிப்பது.

கேள்வி : திராவிடம் என்பது நான்கு மாநிலங்களை சேர்ந்தது ஆனால் அது தமிழ்நாட்டுக்கு மட்டும் சுருங்கி போனது ஏன் ?

பதில் : திராவிடம் தமிழ்நாட்டில் பிறந்து , தமிழ்நாட்டில் வளர்ந்து , தமிழ்நாட்டில் இருக்கும் இயக்கம் அது என்றைக்கு மற்ற மாநிலங்களில் கிளை பரப்பியது ? பெரியார் தெளிவாக திராவிட நாடு என்று கூறுவது தமிழ்நாட்டைதான் என்று கூறினார் , ஒரு சொல் பல அர்த்தத்தை தருவதிப் போல திராவிடம் என்ற சொல் நான்கு மாநிலத்திற்கான நிலப்பரப்பை குறிக்கும் . ஆனால் நாம் திராவிடம் என்று சொல்வது சமூக நீதியை வலியுறுத்தும் நிலைப்பாட்டை கொண்டவர்களை .

கேள்வி : எழுபது ஆண்டுகளாக இருந்தும் பகுத்தறிவு கருத்துக்கள் மக்களிடையே பரவலாக போய் சேரவில்லையே இதன் காரணம் என்ன ?

பதில் : உண்மைதான் , ஒரு நூற்றாண்டு காலம் தொண்டாற்றியும் ஏன் இன்னும் மக்களிடையே சாதி இருக்கிறது , பக்தி இருக்கிறது , மூட நம்பிக்கை இருக்கிறது திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்ப்பீர்களானால் இவைகள் எல்லாம் 2000 ஆண்டுகளாய் வளர்ந்திருக்கிற மரங்கள் , அவற்றை ஒரு நூற்றாண்டு வாள் கொண்டு அகற்றி விட முடியாது .இது ஒரு தொடர் போராட்டம் .

திராவிட இயக்கம் ஒன்றும் செய்யவில்லை என்பது தவறானது . தன்மானத்தை கொண்டு வந்தது , சாதி பெயரை போட்டுக் கொள்வதை நிறுத்தத் செய்தது ,கல்வியிலும் , வேலையிலும் இட ஒதுக்கீட்டை உருவாக்கியது (1920 களில் ) அதன் காரணமாகத்தான் நம்மால் கல்வி பெற முடிந்தது என்பதை மறுக்க முடியாது. பெண் விடுதலை , இவற்றில் திராவிட இயக்கத்தின் பங்கு மிகப் பெரியது என்பதை மறுக்க முடியாது.

கேள்வி : ஐயா மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் வளர்வதற்கு திரவிடக் காட்சிகள் மாற்றி மாற்றி வைத்துக் கொண்ட கூட்டணியும் முக்கியமான காரணம் என்று நினைக்கின்றேன் இனிமேலாவது அது நடக்காமல் இருப்பதற்கு ஏதாவது உத்திரவாதம் இருக்கிறதா ?

பதில் : இயக்கம் கட்சி ஆகும் போது அதன் பலம் மற்றும் பலவீனங்களும் சேர்ந்தே வரும் . தேர்தல் என்று மக்களிடையே போகும்போது சமரசங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கும் . தேர்தலில் வெற்றி ஒன்று தான் இலக்கு என்று ஆகிறது . ஆதலால் கட்சிகள் தடம் புரண்ட காட்சிகள் நடந்திருக்கின்றன. இனி மேலும் நடக்காது என்று நான் கூறுவது நேர்மையாகவும் இருக்காது . ஆனாலும் நமக்கான கடமை கட்சிகள் அவ்வாறு போகாமல் பார்த்துக் கொள்வது .

திமுக விற்கும் பாரதிய ஜனதாவிற்குமான போட்டியாக தமிழ்நாட்டின் களம் போகிறது . இன்றைய அதிமுக நசிந்து வருகிறது அதை பாரதிய ஜனதா விழுங்குகிறது .ஆதலால் கண்ணுக்கு எட்டிய வரை அது நடக்காது என்பதை உறுதியாக கூற முடியும் .

கேள்வி : இளைய தலைமுறை இணையத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர்கள் (முந்தைய தலைமுறை ) என்ன செய்ய முடியும் என்று சொல்லுங்கள்.

பதில் : இன்றைய அரசியல் மேடையில் இருந்து இணையத்திற்கு வந்து விட்டது . தமிழ்நாட்டில் கூட பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்கள் வருவதில்லை . அவர்கள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள் எனவே சமூக வலைத்தளங்களில் இணைந்து பெரும் தொண்டாற்ற உங்களால் முடியும் அதனை நீங்கள் செய்ய வேண்டும் .

கேள்வி :தமிழ் தேசியம் என்ற போர்வையில் திராவிட இயக்கத்தையும் , பெரியாரை இனத் துரோகி என்றும் கொச்சை படுத்துவதற்கான அடிப்படை காரணம் என்ன ?

பதில் : காரணம் தேடுவதை விட அதனை முறியடிப்பதற்கு நாம் ஒன்றுபடலாம் . இது ஒன்றும் புதிது இல்லை .என்றைக்கு திராவிட இயக்கம் தொடங்கியதோ அன்றைக்கே அதற்கு எதிரான பரப்புரையும் தொடங்கி விட்டன .ம போ சி அவர்களும் , ஆதித்தனாரும் தமிழகம் முழுவதும் எதிர்த்து பரப்புரை செய்திருக்கிறார்கள். பின் இரண்டு பேரும் திமுக கழகத்தில் இணைந்தார்கள் . இது குறித்து அஞ்ச வேண்டியதில்லை , அதற்காக பணிகளை ஆற்றாமல் இருக்க வேண்டியதும் இல்லை .

கேள்வி நேரம் முடிந்தது.

- பாவி

எழுதியவர் : பாவி (9-Aug-17, 8:07 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 536

சிறந்த கட்டுரைகள்

மேலே