இப்போதும்
வேடிக்கைதான் பார்க்க முடிகிறது
எல்லா அலங்கோலங்களையும்
எல்லா அநியாயங்களையும்.
இது இப்படிதான் என்று
எதையும் முடிவுசெய்துவிட
முடியவில்லை நம்மால்.
ஒழுக்க சீலர்கள்போல்
உண்மைவாதிகள் போல்
அறமூர்த்திகள் போல்
இவர்களால்
எப்படி முகங் காட்ட
முடிகிறது.
முருகனின் ஆறுமுகமும்
ஒருமுகமாய்த் தான் பார்த்தன.
ராவணனின் பத்துத்தலையும் (பத்து மூளையும்)
சீதையை மட்டுமே
சிந்தித்தது.
இவர்களின் ஒருமுகம்
ஒருதலை, ஒருமூளை
எத்தனை சிந்திக்கின்றன.
நம் நம்பிக்கைகளில்
மண்ணள்ளிப் போட்டார்கள்
பாவத்தைத் துணிந்துசெய்யப்
பழகிவிட்டார்கள்.
பதவி என்பது
பணங்காய்ச்சி மரமானது.
வாக்களிக்கப் பணம்வாங்கும்
முட்டாள்கள், மோசடிப் பேர்வழிகள்
தீர்மானிக்கும் ஜனநாயகம்.
திருடர்களை உருவாக்கியது.
நல்ல தலைவனுக்காக
நாடு காத்திருக்கிறது
இப்போதும்;
இதுபோதும்.