‘துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு’-----------ஈழத்தீவில் நாகூர் குலாம் காதிறு நாவலர்-----வாழ்க தமிழ் பல நூல் படிப்போம் பகிர்வோம்

சாகித்திய அகாதெமி நிறுவனம் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ என்ற தலைப்பில் தமிழிலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு ஆற்றியவர்களை போற்றும் வண்ணம் அரிய பல நூல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வரிசையில் டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்களது கைவண்ணத்தில் குலாம் காதிறு நாவலரைப் பற்றிய சிறந்த நூலொன்றை பதிப்பித்துள்ளது.

டாக்டர் ஏவி.எம்.நசீமுத்தீன் அவர்கள் மரபுக் கவிதைகளை எழுதித் தன் எழுத்துப் பணியை தொடங்கியவர். மூன்று மரபுக்கவிதைத் தொகுப்புக்களும், ஒரு புதுக்கவிதைத் தொகுப்பும், இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளிவந்துள்ளன. கிரேக்க இதிகாசக் கதைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சமயம், தமிழ்த்துறைகள் வாயிலாக ‘வீரசைவம்’ குறித்து ஆய்வு நடத்தி ‘டாக்டர்’ பட்டம் பெற்றவர். தமிழ் ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியர். பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நூலைப் படைத்த இவருக்கு பொதுவாக ஒட்டுமொத்த தமிழிலக்கிய ஆர்வலர்களும், குறிப்பாக நாகூர்வாழ் மக்களும் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

குலாம் காதிறு நாவலரின் படைப்புகளை எத்தனையோ தமிழறிஞர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர். பற்பல நூல்களை வெளியிட்டுள்ளனர். நாவலரின் தமிழ்ப்புலமையையும், சமயோசித புத்திகூர்மையும், சொல்வன்மையையும், மொழியாற்றலையும் இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ள முறை நம் கவனத்தை ஈர்க்கிறது. இதுவரை படித்திராத பல சுவராசியமான நிகழ்வுகளை நமக்கு வழங்குகிறார் நூலாசிரியர். ஈழத்தீவில் நாவலருக்கு அளிக்கப்பட்ட பாராட்டு அழகான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வை அப்படியே இங்கு வடித்திருக்கிறேன் :

ஈழத்தீவில் நாகூர் குலாம் காதிறு நாவலர்

“நாவலர்” என்ற பட்டம் குலாம் காதிறுக்கு வழங்கப்பட்ட பின்னரும் அவரை ஒரு சிலர் முழுமையாக “நாவலர்” என்ற பட்டத்திற்குடியவராக ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைக் குறித்து கேலி பேசவும் கிண்டல் செய்யவுமாக இருந்தனர். இது தமிழ் இலக்கியவாதிகளிடையே அன்றைக்குமிருந்த “புலமைக் காய்ச்சலால்” ஏற்பட்ட எரிச்சல் என்பதைத் தவிர வேறன்று. தமிழுலகில் அன்று “நாவலர்” என்ற பெயருக்குரியவராகக் குறிப்பிடப்பட்டவர் யாழ்ப்பாணம் வண்ணை மாநகர் ஆறுமுக நாவலர் ஒருவரே!

இதனிடையே குலாம் காதிறு, “ஆரிபு நாயகம்” என்ற காவியத்தை இயற்றி நிறைவு செய்துவிட்டார். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தவிர்த்து வேறு எவரையும் நாவலர் என்றழைக்க விரும்பாத யாழ்ப்பாணத் தமிழர்கள், இவரை அழைத்து சோதித்துப் பார்க்க நினைத்தனர். அதற்கேற்றவாறு அங்குள்ள இவருடைய அபிமானிகளின் ஏற்பாட்டில் 1896-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணை மாநகரில் அதுவும் நாவலர் கோட்டத்தில் ஆறுமுக நாவலருடைய மருகர் பொன்னம்பலம் பிள்ளையின் தலைமையில், குலாம் காதிறு நாவலருடைய இலக்கியப் படைப்பான “ஆரிபு நாயகம்” அரங்கேற்றம் நடைபெற்றது.

சிறந்த தமிழ்ப் புலவரான பொன்னம்பலப் பிள்ளையும் அவருடைய குழுவினரும் அரங்கேற்றம் ஆகின்ற “ஆரிபு நாயக”த்தை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தனர். ஏறத்தாழ இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகின்ற முனைவர்பட்ட நேர்முகத் தேர்வைக் காட்டிலும் மிகவும் கடுமையாக இருந்தது அந்த அரங்கேற்ற அவை.

காவிய அரங்கேற்றம்

ஆரிபு நாயகத்தின் செய்யுட்களைப் பாடி, விரிவுரை நிகழ்த்தி வருகையில், “மாதுவளை வனங்கள் சூழ்ந்த மதினாவின் ரெளலா வந்தார்” என்ற அடியை குலாம் காதிறு நாவலர் பாட, அவரை அவமதிக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் ஒரு புலவர் அவரை இடைமறித்து

“நாகூர்ப் புலவரே! மன்னிக்க வேண்டும். ‘மாதுவளை’ என்றால் ஆபாசச் சொல்லாக எமக்குப் படுகின்றதே”

என்று கூறி ஏளனமாகச் சிரித்தார். குலாம் காதிறு நாவலருக்கு, தாம் செய்யுளில் மாதளை என்ற சொல்லை ‘மாதுவளை’ என்று பாடியிருப்பதைக் குறிப்பிட்டுத் தவறான, ஆபாசமான பொருள் கற்பித்து, ஒரு தமிழ்ப் புலவர் தம்மிடம் கேள்வி கேட்பது வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவரை நோக்கி புன்முறுவல் பூத்தவண்ணம்,

“புலவீர், அமரும்! கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்ற உற்றகலை மடந்தை உரையிலும் பெரியீரோ நீர்! உமது இலக்கண அறிவு இதற்கு விளக்கம் சொல்லவில்லையோ? கேளுமையா, புலவரே! மாதுளங்கம் என்ற சொல் வடமொழிச் சொல். அது தமிழில் வருகின்றபோது, திரிந்து “மாதுவளை’ ஆயிற்று. செய்யுள் இடம் நோக்கி – மாதுளங்கம், மாதுவளை, மாதளை என நிற்கும். மாதுவளை என்றால் நீர் கூறுவது போன்று ஆபாசப் பொருளன்று. அதன் பொருள் என்னவென்று கூறுகின்றேன் கேளும்; மா-பெருமை தங்கிய, துவளும்-நாவோடு துவண்டு சுவை தரும், அங்கம்-உள் அமைப்பை உடையது. இது பூ, பிஞ்சு, காய், பழம், சுளை ஆகியவற்றோடு சேரும்பொழுது மா, துவள், அம், பூ என்பது ‘மாதுவளம்பூ’ என்றும், மா, துவள், அம், பிஞ்சு என்பது ‘மாதுவளம்பிஞ்சு’ என்றும், மா, துவள், அம், சுளை என்பது ‘மாதுவலஞ்சுளை’ என்றும் புணர்ந்து நிற்கும். இத்துணை சிறு புணர்தல் இலக்கணமெனும் நீர் அறியீரோ”

என்று அவரை இடித்துரைத்தார். வினவிய புலவர் தலைதாழ்த்திக் கொண்டார்.. நாவலர் நக்கீரராய் நிமிர்ந்து நின்றார்.

‘துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணு’

குலாம் காதிறு நாவலர் தொடர்ந்து தமது காப்பியத்தை அரங்ககேற்றும் பணியில் செய்யுட்களைப்பாடி அதனை விரிவுரை செய்துக் கொண்டிருந்தார்.

“விடிவெள்ளி மதினாபுக்கார்
வியன்குயில் கூறிற்றன்றே”

என்று ஒரு செய்யுளில் ஈற்றடியைப் பாடி, விரிவுரையைத் தொடர்ந்தபோது போது ஒரு பெண் எழுந்தார்.

“நாகூர்ப் புலவீர்!.. நீர் வியன்குயில் என்று கூறியிருப்பதன் காரணம் என்ன? குயில் என்பது மெல்லிய பறவை ஆயிற்றே, அதனை வீறுள்ள பறவையென்றோ வியப்பிற்குரிய பறவையென்றோ நீர் கூறக் காரணம் என்ன?” என்றார்.

அதற்குக் குலாம் காதிறு நாவலர், “அம்மணீ! குயிலுக்கு முட்டையிடத் தெரியுமேயன்றி குஞ்சு பொரிக்கும் வழி தெரியாது. அதனால்தான் அதனை வியப்பிற்குரிய விநோதப் பறவை என்ற பொருளில் வியன்குயில் என்று கூறினேன். மேலும் குயில் தன் முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டுவிட்டுப் பறந்துவிடும். காக்கை தன் முட்டைகளோடு அதனை அடைகாத்துப் பொரிக்கச் செய்து, குயில் குஞ்சைத் தன் குஞ்சுகளோடு பராமரிக்கும். தன் குஞ்சுகளுக்குத் தீனி தீற்றும்போது, இதற்கும் தீற்றும். வளர்ந்த காக்கைக் குஞ்சுகள் ‘கா.. கா..’ என்று ஒலி எழுப்ப, இது மட்டும் ‘கீ… கீ…’ என்று கத்துவதைக் கேட்டு, காக்கைக்கு அது தன் இனத்தைச் சேர்ந்ததன்று என்ற உண்மை புலப்படும். சினமுற்று அதனைக் கூர்மூக்கால் கொத்தும். அப்பொழுது குயில் குஞ்சு சற்றும் அஞ்சாது, அக்காக்கையை எதிர்த்து ‘கீ…கீ..’ என்று கத்தி வீறுடன் சண்டையிடும். எனவேதான் அதனை ‘வீறுள்ள பறவை’ என்னும் பொருளில் ‘வியன்குயில்’ என்று பாடினேன்” என்று விளக்கமளித்தார். இவ்விளக்கத்தைக் கேட்ட அப்பெண்மணி, பெரிதும் மகிழ்வுற்று,

“துலுக்கச்சி வயிற்றில் மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்து எங்கள் யாழ்ப்பாணக்கரை வந்தீர்…” என்று கூறி வாயார வாழ்த்திப் பாராட்டினார்.,

நாவலர் என்றால் நீர்தாம் நாவலர்

ஆரிபு நாயகக் காப்பிய அரங்கேற்றம் சிறப்பாகவும் செம்மையாகவும் நிறைவேறியது, சங்கத்தமிழ் பொங்கும் காவியத்தைக் கேட்ட யாழ்ப்பாணத் தமிழறிஞர்கள் குலாம் காதிறு நாவலரின் புலமைத் திறத்தையும் இலக்கிய நயத்தையும் பெரிதும் பாராட்டினார்கள். “நாவலர்” எனற பட்டம் எங்கள் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலருக்கு மட்டுமே உரியது என்று மார்தட்டி நின்றவர்களும், குலாம் காதிறு நாவலருக்குச் சூட்டப்பட்ட “நாவலர்” என்ற சிறப்புப் பட்டத்தை எடுத்தெறிய வேண்டுமென்று கங்கணம் கட்டி இடையூறு விளைவித்தவர்களும் குலாம் காதிறு நாவலருடைய புலமையாற்றலுக்கு முன்னர் தலைசாய்த்தனர்.

“மாதுளை” பற்றி விளக்கிய நாவலருக்கு மாதுவளஞ் சுளைகளால் மாலைகட்டி, அணிவித்து மகிழ்ந்தனர். பல்வகை பரிசில்களை அள்ளி அள்ளி வழங்கினர். ஒரு சேர எல்லோரும் “நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்; நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர், நாவலர் என்றால் நீர்தாம் காண் நாவலர்” என்று உரத்த ஒலி எழுப்பி குலாம் காதிறுக்கு நாவலர் பட்டத்தை உறுதிப்படுத்தி உலகிற்கு பறைசாற்றினர்.

மேலும் பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் தம்முடைய மாமனாரை (மாதுலர்)ப் போன்றே தமிழில் புலமைகொண்ட பெருமகனார் குலாம் காதிறு நாவலருடைய ஆரிபு நாயகம் காப்பியத்திற்கு

நாகூ ரென்னும் நகர வாசன்
பாகூ ருஞ்சொல் பயின்றிடு நேசன்
பற்பல விதமாப் பகர்பிர பந்தம்
பற்பல புராணம் பழுதறஞ் செய்தோன்
ஆசு மதுரமும் அருஞ்சித் திரமும்
,ஆசு மதுரமாய் அமைந்திட வல்லோன்
தொல்காப் பியமுதல் சூழிலக் கணமும்
தொல்காப் பியமும் சூழ்ந்தினி தாய்ந்தோன்
பாவலர்க் கினிய பகர்குலாம் காதிறு
நாவல னென்னு நற்பெயர் கொண்டான்

எனப் பாயிரம் பாடி நாவலரைச் சிறப்பித்தார்.

எழுதியவர் : (14-Sep-17, 4:14 pm)
பார்வை : 112

மேலே