புதிய ஓட்டம் கவிஞர் இரா இரவி

புதிய ஓட்டம் ! கவிஞர் இரா .இரவி !

காவிரியில் வரும் தண்ணீர் இன்று புதிய ஓட்டம்
கர்நாடகத்தில் நிரம்பியதால் தமிழகத்தில் பாய்ந்தது !

சீறிப்பாய்ந்து வரும் நதியை ஓட விடுங்கள்
சிறைப்பிடித்து வைக்கும் சின்னப்புத்தியை விடுங்கள் !

இரண்டு நாடுகள் கூட அமைதியாகப் பகிர்கின்றன !
ஒரே நாட்டில் பகிர்வதில் சண்டை வழக்கு ஏனோ ?

இயற்கையைச் சொந்தம் கொண்டாட உரிமையில்லை
இயற்கையைச் சிதைக்காமல் இயல்பாக ஓட விடுங்கள் !

பகிர்ந்து உண்டு வாழ வேண்டுமென்று அன்றே
பகர்ந்தார் உலகப்பொது மறை தந்த திருவள்ளுவர் !

மூன்று போகம் விளைந்திட்ட தஞ்சையில் இன்று
ஒரு போகத்திற்கு தண்ணீர் இன்றித் தவிக்கின்றனர் !

யானைக் கட்டிப் போரடித்த தமிழக மண்ணில்
யாசித்து நிற்கின்றோம் தண்ணீர் வேண்டி !

உச்சநீதி மன்றம் உரைத்தால் வேறு வழி இல்லை
உடனே நீட் தேர்வு அமுல் என்று சொல்வோர் !

உச்சநீதி மன்றம் தீர்ப்பில் காவிரி மேலாண்மை
உடனே அமைக்கச் சொன்னால் கேட்காதது ஏனோ ?

உழவர்களின் துன்பத்தை சற்றே உணர்ந்து பாருங்கள்
உயிரை மாய்த்து வருவது உங்களுக்குத் தெரியவில்லையா ?

தமிழகத்திற்கு நியாயமாகச் சேர வேண்டிய தண்ணீரை
தமிழகத்திற்கு ஓடிவர உடன் அனுமதியுங்கள் !

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி நடப்பவை
நல்லதாக இருக்கட்டும் நடக்கட்டும் புதிய ஓட்டம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (4-Oct-17, 8:59 am)
பார்வை : 84

மேலே