வாழவைத்தாள்

வறுமையின் பிடியில் சிக்கி
வாடிய காலம் அதை நினைத்தாலே
கண்ணீருக்கே கண்ணீர் வரும்
இதயமும் ஒருநொடி நின்று துடிக்கும்...

எவ்வளவு நீர் இரைத்தாலும்
ஒரு மீனும் சிக்கவில்லை என்பதுப்போல்
நீச்சதண்ணியில் சிறுபிடி
பழையச்சோறு
அடுத்தவேளை இதுவும்
கிடைக்குமா என்பது சந்தேகமே...

காய்ந்த வயிறு ஈரவிறகு அடுப்பூத
காற்று வராது புகைவரும்
அடுத்தவர் பார்வைக்கு சமைக்கிறோம் என்ற பொய்நிலை
அரிசியே இருக்காது உலைவைக்கும்
வேளைமட்டும் நித்தம் நடக்கும்...

உணவில்லை என்பதை உறவுகளுக்கு தெரியாமலே எங்களை வளர்த்தாள் என் தாய்
நல்லொழுக்கங்களை சொல்லித்தந்தாள்
கல்விக்கண்ணை திறந்துவைத்தாள்

இலட்சுமி எங்கள் வீட்டுப்பக்கம்
வருவதேயில்லை
சரஸ்வதி எங்களின் வீட்டிலே
வாசம் செய்தாள்... ஆம் நாங்கள்
நன்றாகவே படித்தோம்
காலங்கள் ஓடின காட்சிகள் மாறின
இலட்சுமியும் வரத்தொடங்கினாள்...

தன்வயிறை காயவைத்து
எங்களின் வயிற்றை ஈரமாக்கிய
தாய் இன்று இல்லையே என்பதை நினைத்தால் பதறுகிறது உள்ளம்
வறுமையில் உடனிருந்தாள்
வளமையில் விட்டுப்போனாள்...

எல்லாபுகழும் ஈன்றவளுக்கே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (5-Oct-17, 9:58 am)
பார்வை : 361

மேலே