விடுமுறையின் ஏக்கம்

ஓர் ஆண்டுத்தேர்வின் விடுமுறை அது..

நாளை
மீண்டும் திறக்கும் பள்ளிக்கு
எப்படி செல்வது என்றும்,
பாட்டியிடம் செய்யும் சேட்டைகளையும்,
விளையாட்டு நண்பர்களையும் விட்டு
எப்படி பிரிவது என்றும் புரியாமல்
இன்றைய இரவிலிருந்தே வேதனையை சுமந்துகொண்டிருக்கிறான் மனதில்.

அச்சிறு வேதனை
கண்ணீராய் அவன் தலையணையை நனைக்க,
காரணம் புரியாத சிறுவனின் வேதனை கண்டு
மேகங்களும் கண்ணீர் சிந்தின..

இரவு முழுவதும் தொடர்ந்தது மழை…

அதிகாலையில்
ஏதோ சிறு மனமாற்றத்துடன்
தொலைக்காட்சி பெட்டியை காண்கிறான்.
அதுவரை, செய்திகள் என்றாலே வெறுத்தவன்
இன்று
இறுதிவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறான்,
"மழையினால் பள்ளி விடுமுறை" என்ற அறிவிப்புக்காக.
ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

பின்பு
காட்டுக்குள் தொலைந்தவன் போல்,
சாப்பிடவும் மனமின்றி
அமைதியாய் நடந்துசென்றுகொண்டிருக்கிறான்
பள்ளியை நோக்கி..

"பள்ளியின் அழைப்பு மணி ஒலிக்கும்பொழுதெல்லாம்
அவன் இதயத்தின் ஒலி
சிறிது அதிகமாகவே ஒலித்தது"

காலைநேர கூட்டு பிரார்த்தனைக்காய்
வரிசையில் அனைவரும் நிற்க,
அவன் மனமோ
பாட்டிவீட்டையும்,
அவள் கொடுத்து அனுப்பிய அதிரசத்தையும் நினைத்து
எச்சில் முழுங்குகிறது
ஏங்கிய பெருமூச்சுடன்..

பின்
அவன் கண்கள் சுற்றும்முற்றும் பார்க்க,
ஆங்கில ஆசிரியைக்கான இடம் காலியாக இருந்ததைக்கண்டு மகிழ்ச்சியடைகிறான்.,
அப்பாடவேளையில்
பாட்டிகொடுத்து அனுப்பிய
அதிரசத்தையும், கடலைமிட்டாயையும் சாப்பிடலாம்
என நினைத்து.
ஆனால்,
அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது,
ஆசிரியர் ஏற்கனவே கொடுத்து அனுப்பிய வினாக்களை
அப்பாடவேளையில் படித்துக்காட்டவேண்டும் என மாணவத்தலைவன் சொன்னபோது.

அதன் பின்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ஒரு யுகமாகவே கழிந்தன அவனுக்கு..

அதிலும் அவன் மனம்
பாட்டிவீட்டில் இருந்த
நேற்றைய நினைவுகளிலிருந்து
மீளமுடியாமல் போராடிக்கொண்டிருந்தது.

மாலைவரை தொடந்த அவன் நினைவினை
பள்ளியின் இறுதிமணி கலைக்க…,
அதன் ஓசை மறைவதற்குள் வேகமாகய் ஓடிச்சென்று
வீட்டிலிருந்த நாள்காட்டியை புரட்டுகிறான்,

அடுத்த விடுமுறை எப்போது வரும் என்று...

எழுதியவர் : மகேந்திரன் (29-Oct-17, 9:54 pm)
Tanglish : vidumuraiyin aekkam
பார்வை : 128

மேலே