காகிதம்

காகிதம் (Paper) என்பது எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும் பயன்படும் ஒரு மெல்லிய பொருள் ஆகும். மரம், கந்தல் அல்லது புல் ஆகியனவற்றிலிருந்து கிடைக்கும் செல்லுலோசுக் கூழின் ஈரமான இழைகளை அழுத்தி பின்னர் நெகிழும் தன்மை கொண்ட தாள்களுக்கிடையில் உலர்த்தி இக்காகிதத்தைத் தயாரிக்கிறார்கள். எழுதுதல், அச்சிடுதல், பொட்டலம் கட்டல், தொழில்துறை மற்றும் கட்டுமான செயல்முறைகள் உட்பட பல பயன்களைக் கொண்ட ஒரு பல்துறை பொருளாக காகிதம் பயன்படுகிறது.

கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் கி.மு. 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு உலகளாவிய நிலையை எட்டியுள்ளது. காகித உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து அமெரிக்கா இரண்டாவதாகவும் திகழ்கின்றன.

வரலாறு

நவீனகாலக் காகிதத்திற்கு முன்னோடியாக சீனாவில் 2 ஆவது நூற்றாண்டு முதலே காகிதம் பயன்பட்டு வந்ததை தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலகட்டத்தில் சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் காகிதத்தை உருவாக்கினார்[2]. சீனாவின் பட்டு ஏற்றுமதிக்கு பொற்காலமாக விளங்கிய அக்காலத்தில் அதற்கு மாற்றாக சீனர்கள் காகிதத்தைக் கருதினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

காகிதத்தைப் பற்றிய அறிவும் இதன் பயன்பாடுகளும் 13 ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து மத்திய கிழக்கு வழியாக இடைக்கால ஐரோப்பா வரை பரவியது, ஐரோப்பாவில்தான் தண்ணீரால் இயங்கும் காகித ஆலைகள் முதலில் கட்டப்பட்டன. மேற்கு நாடுகளுக்கு பாக்தாத வழியாக காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதை பாக்தாடிகாசு என்ற பெயரால் அழைத்தனர் . 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை உற்பத்தி பெருகியதன் காரணமாக காகிதத்தின் விலை வெகுவாகக் குறைந்தது, இவ்விலைக் குறைவு தகவல் பரிமாற்றத்திற்கும், குறிப்பிடத்தக்க கலாச்சார மாறுதல்களுக்கும் உதவியது. 1844 ஆம் ஆண்டில், கனடியன் கண்டுபிடிப்பாளர் சார்லசு பெனெர்டியும், செருமானியர் கெல்லரும் தனித்தனியாக மரத்தாலான இழைகளை காகிதக்கூழாக்கும் செயல்முறைகளை உருவாக்கினர் .

இழைகளுக்கான பண்டைய மூலங்கள்

காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் பேரளவில் காகிதம் தயாரிக்கப்படுவதற்கு முன்புவரை, பயன்படுத்தப்பட்ட பழைய துணிகளை மறுசுழற்சி செயல்முறையால் மரக்கூழாக மாற்றியே காகிதம் தயாரிக்கப்பட்டு வந்தது. சணல், பருத்தி, லினன் போன்றவற்றால் ஆன துணிகளின் இழைகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1744 ஆம் ஆண்டு செருமன் நீதிபதி கிளாப்ரோத் என்பவரால், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் இருக்கும் அச்சிட்ட மைகளை அகற்றும் செயல்முறை கண்டறியப்பட்டது. தற்பொழுது இச்செயல்முறை மையகற்றல் செயல்முறை எனப்படுகிறது. 1843 ஆம் ஆண்டு மரக்கூழிலிருந்து நேரடியாக காகிதம் தயாரிக்கப்பட்ட காலம் வரை மறுசுழற்சி முறை மரக்கூழ் தயாரிப்பு முறை வழக்கத்தில் இருந்தது.

பெயர்க்காரணம்

பேப்பர் என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான பாப்பிரசிலிருந்து பெறப்பட்டது, இது கிரேக்க πάπυρος (பப்புரோக்கள்) சொல்லான சைப்பரசு பாப்பிரசு என்ற தாவரத்தின் பெயராகும். சைப்பரசு பாப்பிரசு தாவரத்தின் உட்சோறிலிருந்து பாப்பிரசு தயாரிக்கப்பட்டது. இது தடித்த காகிதம் போன்ற ஒரு பொருள் ஆகும். மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் காகிதம் அறிமுகமாவதற்கு முன்னரே பண்டைய எகிப்து மற்றும் பிற மத்தியதரைக்கடல் கலாச்சாரங்களில் எழுதுவதற்காக இதைப் பயன்படுத்தியுள்ளனர். பாப்பிரசு என்ற சொல்லில் இருந்து பேப்பர் என்ற சொல் பிறந்திருந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறைகளும் வெவ்வேறானவையாகும். பாப்பிரசு இயற்கை இழையின் மென்படல உறை போன்றதாகும், ஆனால் காகிதம் இழைகள் மூலம் உருவான மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.

காகிதம் தயாரித்தல்

காகிதம் தயாரிப்பதற்காக நீரில் உள்ள இழைகளால் நீர்த்த தொங்கல் கரைசல் முதலில் தயாரிக்கப்படுகிறது. இத்தொங்கல் கரைசலை திரையினூடாகச் செலுத்தி நீரை வற்றச் செய்கிறார்கள். இழைகளால் பின்னப்பட்டது போல் உருவாகும் காகிதத்தை அழுத்தத்திற்கு உட்படுத்தி எஞ்சியிருக்கும் தண்ணீரும் அகற்றப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் மனிதச் செயல்முறையில் காகிதம் தயாரிக்கப்படுவதில் சில மாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன, எப்படியிருந்தாலும் கீழ்காணும் ஐந்து படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன.

. மரம், பருத்தி போன்ற மூலப் பொருட்களில் இருந்து செல்லுலோசு தனித்துப் பிரிக்கப்படுகிறது.
. செல்லுலோசு இழை கூழாக அடிக்கப்படுகிரது.
. தேவைக்கேற்றபடி வண்ணம், தன்மைகளை மாற்றுவதற்காக வேதியியல், உயிரியல், மற்றும் இதர இரசாயன பொருட்களைச் சேர்த்தல்
. உருவாகும் தொங்கலை திரையில் செலுத்துதல்
. இறுதியாக அழுத்தி உலர வைத்து தேவையான காகிதத்தைப் பெறுதல்.

பயன்பாடு

சீனாவில் காகிதம் பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர்.சுமெரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினார்கள்.தமிழர்கள் பனைஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.

காகிதப் பணமாக, சொத்துகளை அங்கீகரிக்கும் பத்திரங்களாக, தகவல்களை சேமித்து வைக்கும் பொருளாக,, சுய குறிப்புகள் எழுத உதவும் நாட்காட்டியாக, தனிமனிதரிடமும், குழுவிடச்மும் தொடர்பு கொள்ள உதவும் ஒரு கருவியாக, பொருட்களை பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல அவற்றை பொட்டலங்களாக்க , துப்புரவு செய்யும் தாளாக, கட்டுமானப் பொருளாக, புத்தகங்கங்கள், பயிற்சி ஏடுகள் என பல்வேறு பயன்களை மனித சமூகத்திற்கு காகிதங்கள் வழங்குகின்றன.

நெகிழி உறைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் காகித உறைகளை சில உற்பத்தியாளர்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளனர். இக்காகித உறைகள் நெகிழி உரைகளுக்குச் சமமான பயனைத் தருவனவாக உள்ளன என்பதோடு இவை சிதைவும் அடையும், சாதாரண காகிதத்துடன் இவற்றை மறுசுழற்சிக்கும் பயன்படுத்தமுடியும் என்பதே இதன் சிறப்பாகும்.

எழுதியவர் : (8-Nov-17, 5:50 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4039

சிறந்த கட்டுரைகள்

மேலே