ம. ரமேஷ் கஸல் (கவிதை)கள்

நடத்துநரிடம்
தங்கிப் போன
ஐம்பது பைசாவாய்க்
காதலியிடம்
தங்கிப் போனது
என் காதல்
என் காதல்
கை நழுவிப்போனது
மாராப்பை விட்டு
விலகிய சேலையாய்
உன்னைக்
குற்றம் சொல்ல மாட்டேன்
நீ
இறைவனின் படைப்பு
உன்னால்
இறைவனின் கனவே
தகர்ந்து விட்டது
காதலின் வறுமையால்
ஒரு பிடி கவளம்
இல்லாமல்
என் உயிர் பறிபோனது
உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான்
இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்
ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
பாவம் காதல்
என் இதயத்தை
வாங்கிக் கொண்டு
ஏமாற்றி விட்டாய்
கடன்காரன் போல