காதலிக்கு பிறந்த நாள்

கங்கை நீரெடுத்து
கண்ணே உன்னை நீராட்டி!

காசி புண்ணியமெல்லாம்
என் மகராசி உனைசேர!

குறிஞ்சி மலரெடுத்து
உன் கூந்தலிலே சூடி!

கோஹினூர் வைரம் எடுத்து
உன் நெற்றியிலே சுட்டியாய்!

தூத்துக்குடி முத்தெடுத்து
உன் கழுத்துக்கு மாலையிட்டு

குமரி அம்மன் மூக்குத்தி
என் துணைவி
உன்னை அலங்கரிக்க!

திருச்சானூர் வளையல்கள்
உன் கரங்களில் குலுங்கிட

திருபுவனம் பட்டு
உன் திருமேனியில் ஜொலித்திட

கும்பகோணம் வெற்றிலையாய்
குலம் செழிக்க வந்தவளே!

சிரபுஞ்சி மழைபோல
அன்பைக் கொட்டி நின்னவளே!

சித்தமெல்லாம் குடியிருக்கும்
என் அம்மாவின் மருமகளே!

உன் திட்டமெல்லாம் ஈடேறி
திக்கெட்டும் பெருமையுடன்

என் பட்டத்து ராணியாய்
பலகாலம் நீ வாழ

கண்மணியே வாழ்த்துகிறேன்
கட்டுக்கடங்கா காதலுடன்!!!

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (21-Nov-17, 10:10 pm)
பார்வை : 1311

மேலே