சுயவிமர்சன விளக்கம் இது
கவிபாடும் திறனுள்ள
கம்பன் அல்ல நான் !
செவிமடுக்க அழைக்கும்
செந்தமிழ் கவிஞனல்ல நான் !
புவியே புகழுமளவு
புலமைமிகு புலவனல்ல நான் !
பாரிலுள்ளோர் பாராட்டும்
பைந்தமிழ் பாவலனல்ல நான் !
உணர்வின் அதிர்வுகளை
எழுத்தாக்கும் எளியோன் நான் !
வையத்தின் நிகழ்வுகளை
மைகொண்டு எழுதுபவன் நான் !
காணும் காட்சிகளை
வரிகளில் காட்டுபவன் நான் !
சாதிமத பேதங்களை
சாடிடும் சாமானியன் நான் !
பாசத்தின் பரிமாணத்தை
பாவாக்கி வடிப்பவன் நான் !
சமூகத்தின் தவறுகளுக்கு
சாட்டையடி தருபவன் நான் !
வன்முறை நிகழ்வுகளை
வசைபாடும் வறியவன் நான் !
மதிகொண்ட மனங்களை
மதிக்கத் தெரிந்தவன் நான் !
மதம்பிடித்து அலைவோரை
மிதிக்கத் துணிந்தவன் நான் !
சுயவிளம்பர பட்டியலன்று
சுயவிமர்சன விளக்கம் இது !
பழனி குமார்
12.12.2017