சுயவிமர்சன ​விளக்கம் இது

​கவிபாடும் திறனுள்ள
கம்பன் அல்ல நான் !

​செவிமடுக்க அழைக்கும்
செந்தமிழ் கவிஞனல்ல நான் !

புவியே புகழுமளவு
புலமைமிகு புலவனல்ல நான் !

பாரிலுள்ளோர் பாராட்டும்
பைந்தமிழ் பாவலனல்ல நான் !

உணர்வின் அதிர்வுகளை
எழுத்தாக்கும் எளியோன் நான் !

வையத்தின் நிகழ்வுகளை
மைகொண்டு எழுதுபவன் நான் !

காணும் காட்சிகளை
வரிகளில் காட்டுபவன் நான் !

சாதிமத பேதங்களை
சாடிடும் சாமானியன் நான் !

பாசத்தின் பரிமாணத்தை
பாவாக்கி வடிப்பவன் நான் !

சமூகத்தின் தவறுகளுக்கு
சாட்டையடி தருபவன் நான் !

வன்முறை நிகழ்வுகளை
வசைபாடும் வறியவன் நான் !

மதிகொண்ட மனங்களை
மதிக்கத் தெரிந்தவன் நான் !

மதம்பிடித்து அலைவோரை
மிதிக்கத் துணிந்தவன் நான் !

சுயவிளம்பர பட்டியலன்று
சுயவிமர்சன விளக்கம் இது !


பழனி குமார்
12.12.2017

எழுதியவர் : பழனி குமார் (12-Dec-17, 3:26 pm)
பார்வை : 150

மேலே